About Me

My photo
I am an IT professional, Nowadays our Lifestyle is changed a lot and of course we are chasing money. In India More than 7 crore people affected by Diabetes, High Cholesterol and infertility due to their Poor Food Habits &amp Lifestyle. This Blog is very useful for youngsters to lead good Lifestyle and be healthy and students to choose career courses.Work hard, but make time for your love, family and friends. Nobody remembers Powerpoint presentations on your Final Day.I believe Life is ours and we only Live our Life.... Thanks for visiting and welcome you to visit again. WHO LOVES GOD ARE SEARCHING GOD, WHO LOVES PEOPLE ARE LIVING AS GOD - SK ( Reach me @ +91 9791139942 to lead Healthy Family Life )

Friday 27 January 2012

Medicinal Benefits of Musumusukkai Keerai (Melothira maderaspatana)

கொடி வகையைச் சேர்ந்த முசுமுசுக்கை கீரை, சுவர்களிலும், தரைகளிலும் தானாக வளர்ந்திருக்கும். இது நுரையீரல் நோய்கள், சுவாசக் கோளாறுகளை நீக்க வல்லது. சுவாசக்குழல், சுவாசப்பையில் நுண்ணறைகளில் ஏற்படும் ரணம், அழற்சி, ஆகியவற்றை ஆற்றிவிடும் ஆற்றல் கொண்டது. மேலும் சுவாசப்பைகளில் உண்டாகும் கபத்தை அகற்றி அதனை சுத்தம் செய்யும் சக்தி உடையது.

அமைதியின்மை போக்கும்

இக்கீரையை நன்றாக ஆய்ந்து புழுங்கல் அரிசியுடன் சேர்த்து மாவாக அரைத்து தோசை, அப்பம் சுட்டு சாப்பிடலாம். இதனை வழக்கமாக உணவில் சேர்த்துக்கொள்ள நாள்பட்ட நோய்களால் தளர்ந்து போன உடல் பலமடையும்,

மனதில் அமைதியின்மை, கோபம் ஆகியவற்றையும் சரி செய்யக்கூடியது இந்த முசுமுசுக்கை கீரை. உயர் ரத்த அழுத்த நோயினை இது குணப்படுத்த வல்லது.சளி, இருமல் வரட்டு இருமல், இழுப்பு வலிகள் போன்றவற்றையும் ஒழித்துக் கட்டும்.

ஆஸ்துமா குணமாகும்

முசுமுசுக்கையை சூரணமாக செய்து உட்கொள்ள நாள்பட்ட எலுப்புருக்கி, ஆஸ்துமா, காசநோய், இளைப்பு நோய், ரத்தசுவாசநோய் போன்றவை குணமடையும்.

முசுமுசுக்கை தைலம்

முசுமுசுக்கையை தைலமாக தயாரித்து வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் மேற்கொள்ள உடல் சூடு தணியும், கண் எரிச்சல் போக்கும். இளநரையை மாற்றும். வழுக்கை ஏற்படுவதை தடுக்கும்.

Nutrition food for Feeding Mothers

கர்ப்பகாலத்தில் கரு குழந்தைக்கு ஏற்ப தேவையான சத்தான உணவுகளை பெண்கள் உட்கொள்கின்றனர். அதேபோல குழந்தை பிறந்த பின் தாய்பால் கொடுக்கும் பெண்களுக்கு, அதிக அளவு பால் சுரக்கவும், உடல் நலனைக் காக்கவும் கூடுதல் உணவு தேவை.

இரும்புச் சத்துணவு அவசியம்

பிரசவ நேரத்தில் அதிக அளவு ரத்தப்போக்கினால் பெண்களின் உடலில் சத்து குறைபாடு ஏற்பட்டிருக்கும்.

தாய்மார்களுக்கு இரும்புச்சத்து பற்றாக்குறையினால் இரத்த சோகை ஏற்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கும் இரும்புச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் குழந்தைகளின் எடை குறைவதோடு நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஏற்படுகிறது. எனவே பிரசவித்த பெண்களுக்கு உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய இரும்புசத்து நிறைந்த உணவை அளிக்கவேண்டும். ஏனெனில் ரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்தி, மூளை செயல்பாடு மற்றும் உடல் எதிர்ப்பு சக்திக்கு இரும்புச்சத்து தேவைப்படுகிறது.

தாய்ப்பால் கொடுக்கும் பொழுது அதிகமான உணவு உட்கொள்ளவும். முழு தானியங்கள், முளைக்கட்டிய தானியங்கள், ஆகியவற்றை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளவும். பால், மாமிசம், முட்டை உட்கொள்ளவும். அதிக அளவு காய்கறிகள், பழங்கள் சாப்பிடவும்.பயறுகள், உலர் பழங்கள் மற்றும் பச்சைக் கீரைகளில் அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது. மாமிசக் கறி, மீன், கோழிக் கறி போன்றவற்றிலும் இரும்புச்சத்து உள்ளது.தாவரங்களில் குறைவான அளவு இரும்புச்சத்து கிடைக்கிறது. ஆனால் மாமிச உணவுகளில் அதிகமாக உள்ளது. வைட்டமின் ‘சி’ அதிகமுள்ள பெருநெல்லி, கொய்யா, ஆரஞ்சு வகை பழங்கள் ஆகியன, தாவரங்களில் உள்ள இரும்புச்சத்தை கிடைக்கச் செய்கின்றன.

வெள்ளைப்பூண்டு

பிரசவித்த பெண்களுக்கு நல்லெண்ணை, வெள்ளைப் பூண்டு, வெல்லம் வாங்கித் தருவது தமிழர் மரபாகும். இது இன்றைக்கும் நடைமுறையில் உள்ளது. நல்லெண்ணையானது தளர்வடைந்த உடலை மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற உதவுகிறது. பச்சை உடம்பு என்று அழைக்கப்படும் பிரசவித்த தாய்மார்களின் கர்ப்பப்பையில் ஏற்பட்ட புண்களை ஆற்றும் சக்தி எள் எண்ணெக்கு அதிகம் உண்டு. எனவேதான் நல்லெண்ணெயை அதிகம் உணவில் சேர்த்துக் கொடுக்கின்றனர். மிதமான காரம் சேர்த்த, மிளகு, கொடாம்புளி சேர்த்த உணவுகளையே கொடுக்கலாம். அது தாய், சேய் நலனுக்கு ஏற்றது.

அதேபோல் வெள்ளைப் பூண்டை வதக்கி உட்கொள்வது தேவையற்ற வாயு உடலில் சேராமல் தடுக்கும், தாய்பால் சுரக்கும். வெல்லமானது தாய்மார்களின் உடலில் இரும்புச்சத்து அதிகரிக்க உதவும். இதனால் தாய்பால் மூலம் குழந்தைகளுக்குச் வயிற்றுக்குச் செல்லும் சத்தானது குழந்தைகளின் நலனை பாதுகாக்கும்.

புரதச்சத்து அவசியம்

புரதச்சத்து நிறைந்த கடல் உணவுகள், மாமிச உணவுகள், பால் பொருட்கள், பீன்ஸ் போன்றவற்றை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் தாய்மார்களின் உடலில் புரதச்சத்து அதிகரிக்கும். தாய்பால் தரும் பெண்கள் அவசியம் கால்சியம் சத்து நிறைந்த பால் பொருட்கள், தயிர் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்களின் பரிந்துரையாகும்.

தண்ணீர் அவசியம்

நன்றாக காய்ச்சி ஆறவைத்த தண்ணீரை அருந்துவது அவசியம். அதோடு பழரசங்கள், பால், மூலிகை தேநீர் ஆகியவற்றை அருந்துவது உடல் நலத்திற்கு ஏற்றது. இது உடலில் நீர் சக்தியை தக்கவைக்கும்.

மூடப்பழக்கம் தேவையில்லை

பிறந்த குழந்தைக்கும், பிரசவித்த தாய்க்கும் தேவையில்லாத கட்டுப்பாடுகளை விதிப்பது வழக்கம். இதுவே சில சமயங்களில் சிக்கலை ஏற்படுத்தும். எனவே உடல் நலத்திற்கு ஒத்துவராத மூடபழக்கவழக்கங்களையும் எண்ணங்களையும் தவிர்க்கவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். மருத்துவர்களின் பரிந்துரையின்படி மட்டும் மருந்துகள் உட்கொள்ளவும். 14-16 வார கர்ப்பத்தில், இரும்பு, போலியேட் மற்றும் கால்சியம் நிறைந்த உணவை சேர்த்து பால் கொடுக்கும் பொழுதும் தொடரவும்.போலிக் அமிலம் பிறக்கும் குழந்தையின் எடையை அதிகரிப்பதோடு, பிறப்பு குறைகளையும் குறைக்கிறது. பச்சைக் காய்கறிகள், பயறுகள், கொட்டைகள், ஈரல் ஆகியவற்றில் அதிக அளவு போலிக் அமிலம் உள்ளது. எனவே மறக்காமல் அவற்றை வாங்கி உட்கொள்ளலாம் என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.

தவிர்க்க வேண்டியவை
காபி, தேநீர், சோடா பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். இவற்றை பருகுவதன் மூலம் இரும்புச்சத்தை கிரகித்து கொண்டு அவற்றை கிடைக்காமல் செய்கின்றது.எனவே சாப்பிடுவதற்கு முன்போ, சாப்பிடும் பொழுதோ, சாப்பிட்டவுடனோ தேநீர் உட்கொள்வதை தவிர்க்கவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

Benefits of Siriyanangai

கசப்பு மருந்து எனப்படும் சிறியாநங்கை, பெரியாநங்கை தாவரங்கள் மருத்துவகுணம் நிறைந்தவை. இவை செம்மண், கரிசல் மண்களில் நன்றாக வளரும். இது ஒரு குறுஞ்செடி. வேப்பிலை போன்று எதிர் அடுக்கில் வெட்டு இல்லாத இலைகளைக் கொண்டது. இதை விதைத்து 45 நாட்கள் ஆனதும் நாற்று எடுத்து நடலாம். ஆறு மாதம் கழித்து இலைகள் அறுவடை செய்து நிழலில் 5 நாட்கள் உலரவிட்டு பின் பொடி செய்து மருந்தாக உபயோகிப்பார்கள். ஆறு மாத்திற்கு மேல் வளர விட்டால் எள் பூ போன்று வெண்மையான பூ விடும். பின் 1.5 - 2 செ.மீ. நீள காய்கள் விடும். பின் காய்கள் காய்ந்தவுடன் வெடித்து விதைகள் சிதறிவிழும். இலை மென்று தின்றால் கசப்பாக இருக்கும்.

செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்

ஆன்டி ரோகிராப்பின் மற்றும் பனிக்கொலின் வேர்களிலும், இலைகளில் பீட்டா-சட்டோ ஸ்டீரால், 'கால்மேகின்' என்ற கசப்புப் பொருளும் உண்டு.

விஷக்கடிக்கு மருந்து

சிறியாநங்கையின் இலை மற்றும் வேர்ப் பகுதிகள் அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை. வேட்டைக்கு செல்லும் வேடர்கள் சிறியாநங்கை செடியின் வடக்கத்திய வேரை காப்பு கட்டி எடுத்து கடை வாயில்வைத்து கடித்துக் கொண்டு செல்வார்கள் அவ்வாறு செல்லும்போது வேறு எந்த விஷப்பூச்சி கடித்தாலும் தாக்காது. தோல்நோய்களுக்கு சிறியா நங்கை மிகவும் நல்லது. ஆனால் பத்தியத்திற்கு கத்தரிக்காய் சாப்பிடக்கூடாது.

நீரிழிவு நோய்க்கு மருந்து

இது ஒரு ஆயுர்வேத மருந்தாகும். குழந்தைகள் மருந்து தயாரிக்க ஏற்றது. காய்ச்சல், பூச்சிக்கொல்லி, மலம் இளக்கி, படபடப்பு, வயிற்றுப் போக்கு போன்ற வற்றிக்கும், மண்ணீரல் சம்பந்தமான நோயிக்கும் நல்ல மருந்து. நீரிழிவு நோயிக்கும் சிறியாநங்கையைப் பயன்படுத்து கிறார்கள்.

கல்லீரல் நோய்களை போக்கும்

காய்ச்சல், கல்லீரல் நோய்களைப் போக்கும். மஞ்சள் காமாலை நோய்க்கு சிறந்த மருந்து. ப்ளுகாய்ச்சலை குணப்படுத்தும். சைனஸ் மற்றும் சளித்தொந்தரவினால் ஏற்பட்ட நோய்களை போக்கும். மலேரியாவிற்கு இது சிறந்த மருந்தாக செயல்படுகிறது. இது சிறந்த ரத்தசுத்திகரிப்பானாக பயன்படுகிறது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷக்கடிகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.

Health Benefits of Manali Keerai

மணலிக் கீரை சமையலுக்கு உகந்த கீரைகளுள் ஒன்று. இதனை மணல்கீரை, நாவமல்லிக்கீரை என்ற பெயர்களில் அழைக்கின்றனர். இதன் இலை தண்டு அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. நம் முன்னோர்களின் மருத்துவக் கீரைகளில் மணலிக் கீரையும் இடம்பெற்றுள்ளது.

மணலிக் கீரை பூண்டு இனத்தைச் சேர்ந்தது. இது தென்னிந்தியா முழுவதும் பரவிக் காணப்படும். மேலும் பஞ்சாப், சிந்து போன்ற இடங்களிலும் பரவிக் கிடக்கிறது.

வயிற்றுப் பூச்சி நீங்க

சிறுகுழந்தைகளின் வயிற்றில் கிருமித்தாக்குதல் அதிகம் இருந்தால் அவர்கள் மிகவும் சோர்ந்து பலவீனமடைந்து விடுவார்கள். ஏனென்றால் உடலுக்குத் தேவையான அனைத்து சக்திகளையும் கிருமிகள் உறிஞ்சிவிடுவதே இதற்கு காரணம். இந்த வயிற்றுப் பூச்சிகளுக்கு மருந்துகள் சாப்பிட்டாலும் முழுமையாக ஒழிந்துவிடாது. இந்த பூச்சிகளை கொல்வதற்கு மணலிக்கீரை சிறந்த மருந்தாகும்.

மணலிக் கீரையை நீர்விட்டு அரைத்து 70 கிராம் அளவாக எடுத்து நீரில் கலக்கி அதிகாலையில் வெறும் வயிற்றில் மூன்று நாள் அருந்தி விட்டு மறுபடியும் நான்கு நாள் இடைவெளிவிட்டு மூன்று நாட்கள் அருந்தி வந்தால் குடலில் உள்ள தட்டைப் புழுக்கள் நீங்கும்.

மலச்சிக்கல் நீங்க

பொதுவாக கீரைகள் அனைத்துமே மலச்சிக்கலைப் போக்கும் தன்மை கொண்டது. மணலிக் கீரையை கிடைக்கும் காலங்களில் வாங்கி வாரம் இருமுறை பாசிப்பருப்பு கலந்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.

மணலிக் கீரையை பாசிப்பருப்பு சேர்த்து கலந்து கூட்டு வைத்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண், குடல்புண், அஜீரணக் கோளாறு போன்றவை ஏற்படுவதற்கு இவை காரணமாகின்றன வயிற்றுப் பூச்சி நீங்கும்.

மார்புச்சளி நீங்கும்

மார்பு பகுதியில் சேர்ந்து சளி கட்டிக்கொள்வதால் தொடர்ந்து இருமல், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும். மணலிக் கீரையை குடிநீரில் கொடுக்க மார்புச் சளி, வயிற்றுப்புண் நீங்கும்.

மணலிக்கீரையை நன்கு நீர்விட்டு அலசி பின் அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து அவித்து சாப்பிட்டு வந்தால் மார்புச்சளி நீங்கும். அல்லது மணலிக் கீரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதனுடன் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மார்புச்சளி நீங்கும்.

ஞாபக சக்தியைத் தூண்ட

ஞாபக மறதி மனிதன் வாழ்வை சீரழிக்கும் நோய். ஞாபக மறதிக்கு பித்த அதிகரிப்பே காரணம். மேலும் மூளைக்கு தேவையான சத்துக்கள் குறைவதால் ஞாபக மறதி உண்டாகும். இக்குறையை நீக்க மணலிக் கீரை மசியல் செய்து சாப்பிடுவது நல்லது.

ஈரல் பலப்பட

ஈரல் பாதிக்கப்பட்டாலே உடலின் உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப்படும். இரத்தம் சீர்கெடும். கண்பார்வை கோளாறுகள் உண்டாகும். ஈரலைப் பலப்படுத்த மணலிக்கீரை கசாயம் செய்து அருந்தி வரவேண்டும்.

Confidence reflects Beauty

பெண்களின் அழகை குறிவைத்து எண்ணற்ற அழகு சாதனப் பொருட்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. உடை அலங்காரத்திற்காகவும், முகஅழகுக்காகவும், சரும பாதுகாப்பிற்காகவும் விளம்பரப்படுத்தப்படுபவை ஏராளம். ஆனால் இவற்றை வாங்கி பயன்படுத்துவதால் மட்டுமே அழகு அதிகரித்து விடுவதில்லை. உள ரீதியாக தன்னம்பிக்கை அதிகரித்தால் பெண்களின் அழகு கூடும் என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.

தன்னம்பிக்கை

அழகு என்பது உடல் தொடர்புடையது மட்டுமல்ல அது உள்ளம் தொடர்புடையது. என்கின்றனர் வல்லுநர்கள். எங்கே தன்னம்பிக்கை அதிகரிக்கிறதோ அங்கே அழகு மிளிரும் என்பது அவர்களின் கூற்று. உள்ளத்தில் தன்னம்பிக்கை ஒளி உண்டானால் முகத்தில் பொலிவு கூடும் என்பது வல்லுநர்களின் கருத்து.

அழகாய் இருக்க வேண்டும். அழகான தோற்றம் பெற வேண்டும் என எந்தப் பெண்ணும் விரும்புவது சகஜம். நாம் நேசிக்கும் ஒருவர். அல்லது ஒரு பொருள், அல்லது வேறு ஏதாவதாக இருக்கலாம். அது நம்மை விட்டு போகும் போது, அல்லது இல்லாமல் போகும் போது, நாம் அதற்காக ஏங்கும் நிலை ஏற்படலாம். ஆனால் நாம் எதை இழந்தாலும் அழகு எப்போதும் நம்மை விட்டு அகல்வதேயில்லை. அது எப்போதும் நம்மிடவே உள்ளது. ஆனால், நமக்குத்தான் வயதாகிவிட்டதே என எண்ணி அழகை நாம் பேணாத காரணத்தால் தான் அழகிழந்தவர்களாக நாம் நம்மை கருதுகிறோம்.

நம்மை நாமே பாராட்டுவோம்

இழந்த அழகை பெற நாம் முதலில் நம்மீது நம்பிக்கையுள்ளவர்களாக இருக்க வேண்டும். நம்மைப் பற்றி உயர்வாக எண்ண வேண்டும். நாம் அழகானவர், இனிமையானவர் என எண்ணிக் கொள்வது அழகின் முதல் படியாகும். இது போன்ற மெல்லிய உணர்வுகள் கூட நமது முகத்தை அழகுபடுத்தும்.

ஆரோக்கியமான உடல்நிலை

உணர்வுகள் மட்டுமல்ல, நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை முறை கூட அழகாய் இருப்பதற்கு தேவைப்படுகிறது. அழகான மென் உணர்வுகளைப் பெற நல்ல தேக ஆரோக்கியம் மிக அவசியமாகும். நல்ல ஆரோக்கியம் என்பது திடகாத்திரமாக சுறுசுறுப்பானவர்களாக இயங்குவதேயாகும். இது சுறுசுறுப்பு நல்ல சத்தான உணவை உட்கொள்வதன் மூலமே பெற முடியும். நல்ல ஆரோக்கியத்தைப் பெற முதலில் மன அமைதியைத் தேடிக்கொள்ளுங்கள்.

நிதானம் ஏற்படும்

அமைதியில்லாத உள்ளத்தில் அழகான மென்மையான எண்ணங்களுக்கிடமில்லை. எந்தப் பிரச்சினையையும் என்னால் எதிர்த்துப் போராட முடியும்'' என்ற தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். அச்சம் விலகும் அந்த மனத்தைரியத்தில் ஒரு அமைதி மனதில் ஏற்படுவதை உங்களால் அறிந்துகொள்ள முடியும்.

மன அமைதி ஏற்படும் போது மிகுந்த நிதானத்துடன் அன்றாட வேலைகளை திருப்தியுடன் செய்து முடிக்க முடியும். அமைதியாக உறங்கவும் சாப்பிடவும், நண்பர்கள் உறவினர்களுடன் இனிமையாக பழகவும் முடியும்.

தினமும் கவனியுங்கள்

திருமணத்திற்கோ, திருவிழாவிற்கோ செல்லும் போது மட்டுமே சில பெண்கள் அழகு படுத்திக்கொள்ள முற்படுவார்கள். பிற நாட்களில் ஏனோ தானோவென நாட்களை கழித்து விடுவார்கள். இது தவறான முறையாகும். துடைக்கத் துடைக்கத்தான் கண்ணாடி பளப்பளப்பாகும். அதேபோல் பெண்கள் தங்களின் முகத்தை கை கால்களை அடிக்கடி நல்ல முறையில் பேணி வந்தால் நாளடைவில் சகல உறுப்புகளும் பொலிவு பெறும்.

இதேபோல் மனதையும் கவனித்து அமைதி இழக்காது பாதுகாப்பது அதைவிடச் சிறந்ததாகும். ஏனெனில் அமைதியில்லாத மனதில் முக அழகு ஏற்படாது. சோகமோ சந்தோஷமோ முகமானது மன அழகை பளிச்சென எடுத்துக்காட்டும். இந்த சக்தி கண்களுக்கும் உண்டு. உங்களைப் பற்றிய நம்பிக்கை, உடல்களைப் பற்றி ஓர் உயர்ந்த அபிப்பிராயம், நல்ல நினைவுகள் இல்லாமல் போகும். பட்சத்தில் அழகாக இருக்கிறோம் என்ற நினைப்பிற்கே இடமில்லை.

வாய்விட்டு பாடுங்கள்

பிரச்சினைகள் மனதை பாதித்து விடுவது இயற்கையே. பிரச்சினைகள் சகலருக்கும் உண்டு. பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அது அவசியமானது. பிரச்சினைகளுடன் வாழ்வது அதைத் தீர்க்க நடவடிக்கைகளை மேற்கொள்ளாதிருப்பது உடலை மிகவும் பாதித்து விடும்.

மன இறுக்கத்தை ஏற்படுத்தி விடும். எனவே பிரச்சினைகளை மனதில் போட்டு குழப்பிக் கொண்டிராமல் அதனையிட்டு நெருங்கிய நண்பர்களுடன், அல்லது உங்களுக்கு மிக வேண்டியவர்களுடன் அப்பிரச்சினையையிட்டு மனம் திறந்து பேச வேண்டும். பிரச்சினை இருக்கிறதே என்று விட்டு விடாமல் மனத்தெளிவுடன் ஏனைய வீட்டு வேலைகளை மேற்கொள்ளலாம்.

அல்லது ஏதவாது கீர்த்தனைகள், சுலோகங்கள் தெரிந்திருந்தால் அவைகளை கொஞ்சம் சப்தத்துடன் பாடலாம். இதனால் மனம் இலேசாகும். இதனால் பிரச்சினைகள் மறக்கப்பட்டு மனப்பாரம் குறைந்து சாந்தமடைகிறது. முயற்சி செய்து பாருங்கள்.

மனத் தெளிவு தரும் யோகா

யோகாசனம் கூட மன அமைதியைக் கொடுக்கும். எல்லா யோகாசனங்களை செய்ய முடியாவிட்டாலும் ஓரிடத்தில் அமர்ந்து மூச்சை உள்வாங்கி மெல்ல வெளியே விடுங்கள். அதைத் தொடர்ந்து 15, 20 நிமிடம் வரை செய்து வாருங்கள். மன அமைதி கிடைக்கும். அலைபாயும் நினைவுகள் கட்டுக்கடங்கி முகம் அமைதியை வெளிக்கொணரும். பதற்றம் தணியும். உள்ளழகு பளிச்சென வெளிவரும். முகமும் உடலும் புத்துயிர் பெறும்.

சுடர்விடும் குத்துவிளக்கு

அழகான தோற்றம் கொண்ட ஒருவர் பிறரையும் சந்தோஷப்படுத்துகிறார். தன்னம்பிக்கை கொண்டவராக புன்னகையுடன் அவர் வலம் வரும் போது பார்ப்பவர்கள் பரவசம் கொள்கிறார்கள். அவரது உள்மன அழகை தெளிவான புன்னகை எடுத்துக்காட்டுகிறது.

மனதில் அமைதியும் அடக்கமும் இருந்தால், முகமும் உடலும் அழகு பெறும் அப்படியான முகத்திற்கு அலங்காரமே தேவையில்லை. சாதாரண முக அலங்காரம் போதுமானது. குத்து விளக்கு போன்ற அழகு என்கிறார்களே அது போல அமைதியான முகத்தெளிவினை காட்டும் அழகைத் தான் அப்படி வர்ணிக்கிறார்கள்.

மனத் தெளிவும், அமைதியுமான உள்ளமும் அழகின் முதல் படியாகும். திருப்தியான உள்ளம் அமைதியை ஏற்படுத்தும். எனவே மன அமைதியைத் தேட முயற்சி செய்யுங்கள். உங்களைப் பற்றி அழகான எண்ணங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள். நல்ல மென் உணர்வுகளை கொண்டிருங்கள். அதுவே உங்கள் முகத்திலும் உடலிலும் மாற்றங்களை ஏற்படுத்தும்.

Amla uses and Benefits

அன்றாடம் உட்கொள்ளும் நெல்லிக்காயனது அருமருந்தாகும். இது வாதம்,பித்தம், கபம், என்னும் திரிகரண தோஷங்களையும் போக்கவல்லது. இதனாலேயே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதன் பெருமை பற்றி ஆயுர்வேத சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கிறது. நமது முன்னோர்கள் இதனை ரசாயனம் என்றே அழைத்துள்ளனர்.

தினசரி உணவில் நெல்லிக்காயை சேர்த்துக்கொண்டால் நூறு ஆண்டுகள் வரை இளமையுடன் வாழலாம் என்று சித்தர்கள் தங்களின் குறிப்பிகளில் எழுதி வைத்துள்ளனர். உடல் நலத்திற்கு ஏற்ற நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது. பெண்களோ நெல்லிக்காயினை சௌபாக்கியம் என்று கருதி கார்த்திகை மாதத்தில் உத்தரண துவாதசி அன்று துளசிச் செடியுடன் இணைந்து பூஜிக்கின்றனர். இதிலும் கடுக்காயைப்போலவே இதில் பல வகையுண்டு பெருநெல்லி, கருநெல்லி, அருநெல்லி, என்பது. இதில் கருநெல்லி கிடைக்காதது. மற்றவை கடைகளில் கிடைக்கும்.

ஐந்து சுவை கொண்டது

ஆறு சுவைகளில் இனிப்பு, புளிப்பு, கைப்பு, துவர்ப்பு, உவர்ப்பு என்னும் ஐந்தும் நெல்லிக்காயில் உள்ளன. இதில் உள்ள இனிப்பும் உவர்ப்பும் பித்தத்தையும், புளிப்பு, கைப்பு, கபம் ஆகியவற்றையும் போக்க வல்லது.

உயிர்சத்துக்கள்

உயிர்ச்சத்துக்களான ஏ,பி,சி என்ற மூன்றும் அடங்கியுள்ளன. சாத்துக்குடிச் சாற்றில் உள்ள வைட்டமின் சத்து 20 மடங்கு இதில் உள்ளது. நெல்லிக்காய் வாடிய போதிலும் சிறிதளவும் குறைவதில்லை. நோயற்றவராக மனிதர் வாழ தினசரி 50 மில்லிகிராம் வைட்டமின் சி சத்து தேவை. இதற்கு 4 சாத்துக்குடி சாறோ, 8 அவுன்ஸ் தக்காளிச்சாறோ சாப்பிடவேண்டும். ஆனால் இந்த 50 மில்லிகிராம் வைட்டமின் சி அரை அவுன்ஸ் நெல்லிக்காயில் கிடைக்கிறது.

பித்தம் தணிக்கும்

ஜீரணக்கோளாறு, பித்த மயக்கம், ஆரோடசிகம், காமாலை, கண்நோய், இரத்தசோகை போன்றவைகளுக்கு நெல்லிக்காய் மருந்தாகும் இதனை ஊறுகாயாக செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும் இதனால் பித்தம் தணியும் உணவு எளிதில் ஜீரணமாகும்.

நீண்ட நாட்களாகியும் ஆறாமல் இருக்கும் புண்கள் ஆறிவிடும். கட்டிகள் பழுக்கும். அப்போது அதனை அரைத்து விழுதாக்கி உருட்டி உலரவைத்து அதனை சாப்பிட்டு வந்தால் குணம் தெரியும். புழுபூச்சிகளை அகற்றிவிடும் சக்தி உள்ளது நெல்லிக்கனி.

கர்ப்பிணிகளுக்கு ஏற்றது

நெல்லிக்காய் இரும்புச்சத்து உள்ளது இரத்தத்தைச் சுத்தஞ்செய்து இருதயத்தை வலுப்படுத்தும். எனவே கர்ப்பிணிகள் முதல் மாதம் தொட்டு 9 மாதங்கள் வரை காலை, மாலை, ஒரு நெல்லிக்காய் அல்லது நெல்லி முள்ளி உட்கொண்டால் அடிக்கடி வரும் வாந்தி நிற்கும். நல்ல பசியும் எடுக்கும். நெல்லிக்காயில் உள்ள இரும்பு சத்தும், சுண்ணாம்பு சத்தும் நல்ல உடல் ஆரோக்கியத்தையும், ரத்த விருத்தியையும், கர்ப்பிணிகளிடையே ஏற்படுத்துகிறது. மேலும் கர்ப்பத்தில் உள்ள சிசுவுக்கும் புஷ்டிகரமான ஆகாரம் கிடைக்கிறது.

நினைவாற்றல் கூடும்

பிறந்த குழந்தைகளின் உணவில் நெல்லிக்காய் சாற்றினைக் கொடுத்து வந்தால் வளரும் குழந்தைகள் தேக ஆரோக்கியத்துடன் திகழ்வார்கள். மாணவர்கள் இதனை தவறாது உட்கொண்டால் நினைவாற்றல் அதிகரிக்கும் கண்பார்வை தெளிவாகும். புத்திக்கூர்மையை ஏற்படுத்தும். குழந்தைகளுக்குக் கோணலாக முளைத்த பற்களுக்கும், காலத்தில் முளைக்காத பற்களுக்கும் கூட நெல்லிக்காய் ஏற்றது.

பல்லில் ஏற்படும் பயோரியா என்னும் வியாதிக்கு இது அருமருந்து. நெல்லியிலைச் சாற்றை கொப்பளித்து காயை உட்கொண்டால் உடன் வியாதி நீங்கும்.

How to decorate Bed Room

படுக்கையறை என்பது இல்லத்தின் முக்கியமான பகுதி. எங்கெங்கே சென்று அலைந்து திரிந்து வந்தாலும் அமைதியாக தலைசாய்த்துக் கொள்ளும் இடம் படுக்கையறைதான். இரவில் அமைதியும், ஆனந்தமும் தவழ படுக்கையறையை அழகாக்கவேண்டியது அவசியம். படுக்கையறை அலங்காரம் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொள்கின்றனர் உள் அலங்கார நிபுணர்கள்.

படுக்கை அறை உள் அலங்காரம்

படுக்கை அறை என்று பார்த்தோமானால் வீட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு அறை இருக்குமாறு அமைத்துக் கொள்வது நல்லது. ரெடிமேட் அலமாரிகளுக்கு பதிலாக சுவரில் இருக்குமாறு அலமாரிகளை கட்டி மரக் கதவுகளை மட்டும் அமைத்துக் கொள்ளலாம். குளியல் அறை ஒவ்வொரு படுக்கையறையிலும் இருந்தால் நல்லது. அல்லது குறைந்தது இரண்டாவது இருந்தால் நல்லது. அதில் ஒன்று வீட்டின் பொதுவான இடத்தில் இருந்தால் விருந்தினருக்கும் பயன்படுத்த வசதியாக இருக்கும்.

இலவம்பஞ்சு மெத்தை தலையணை

மாஸ்டர் படுக்கை அறையில் தேர்ந்தெடுக்கும் மெத்தை சரியானதாக இருக்க வேண்டும். அது இலவம் பஞ்சு மெத்தையாக இருக்கும் பட்சத்தில் உடல் நலத்திற்கு ஏற்றது. ஆடம்பரமான மெத்தையாக இல்லாமல் பாரம்பரியத்தை காக்கும் வகையில் உடல் நலத்திற்கு ஏற்றதாக இருப்பது நல்லது.

படுக்கையறைக்கு தேவையான தலையணைகளை சரியானதாக தேர்ந்தெடுக்க வேண்டும். அமைதியோடும், உடல் ஆரோக்கியத்தோடு தொடர்புடையது தலையணை. எனவே வர்ணங்களோடு, சிறியதாக, தலைக்கு ஏற்ற உயரத்தில் தேர்ந்தெடுப்பது அவசியம்

இள வர்ணங்கள்

படுக்கையறை அலங்காரத்தில் கற்பனைத்திறன் அவசியம். சுவர்களுக்கு பூசும் வர்ணங்கள் கண்களை உறுத்தாத இள நிறங்களில் இருப்பது அவசியம். மின் விளங்குகள் மைல்டாக குறிப்பாக நீல நிறத்தில் இருப்பது ஏற்றது என்கின்றனர் உள் அலங்கார நிபுணர்கள்.

சில நேரங்களில் அமர்ந்து ரிலாக்சாக பேசுவதற்கு சிறிய அளவில் பெஞ்ச் அதுவும் மரத்தில் செய்யப்பட்டதாக இருந்தால் அறையை அடைக்காத வகையில் நேர்த்தியாக இருக்கும்.

சுவர் ஓவியங்கள்

கண்ணாடியில் வறைந்த சுவர் ஓவியங்களை மாட்டிவைப்பது அறைக்கு கூடுதல் அழகைத் தரும் அதுவும், கருப்பு, வெள்ளை படங்களாக இருந்தால் அறைக்கு அழகு கூடும்.

படுக்கையின் தலைப்பகுதிகளில் கண்ணாடிகளை வைத்திருப்பது அழகோடு, அமைதியான சூழலையும் தரும் என்கின்றனர் உள் அலங்கார நிபுணர்கள். இந்த எளிமையான அலங்காரங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்றவையாகவும் படுக்கையறையை அழகாகவும் வைத்திருக்கும் என்கின்றனர் உள் அலங்கார நிபுணர்கள்.

How to Enjoy your married Life

தம்பதியர் இருவரும் வேலைக்குப் போகும் இன்றைய கால கட்டத்தில் இருவரும் இணைந்து இருக்கும் நேரங்கள் குறைவு. அந்த சில மணி நேரத்திலும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஆதரவாக இருக்க வேண்டியது அவசியம். வீட்டிற்குள் என்னதான் தம்பதியர் மனமொத்து இருத்தலும் இருவருக்கும் இடையில் புரிதல் அரிதாகிவருகிறது!

அவர்களின் புரிதலின்மையினால் சின்னச் சின்ன விசயங்களில் உருவாகும் பிரச்சினைகள் பூதாகரமாக வளர்ந்து விரிசல் உருவாகின்றன. இதற்கு காரணம் சரியான முறையில் அன்பை வெளிப்படுத்தாததுதான் என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள். இல்லத்தரசிகள் சின்னச்சின்ன வழிகளை கையாண்டு கணவரிடம் அன்பை வெளிப்படுத்தினாலே வாழ்க்கை வசந்தமாகும் என்கின்றனர் அவர்கள். இருவரிடையே பிணைப்பை அதிகரிக்கும், உற்சாக ஐடியாக்களை தெரிவித்துள்ளனர் உளவியல் வல்லுநர்கள்.

மகாராஜாவைப் போல மதியுங்கள்

கோடி கோடியாய் சம்பாதித்தாலும் நமக்கான மதிப்பும், மரியாதையும் கிடைக்கவேண்டும் என்பது சராசரி மனித மனத்தின் எதிர்பார்ப்பு. அதிலும் இல்லத்தரசியிடம் கிடைக்கும் மதிப்புதான் கணவனுக்கு கிடைக்கும் மிகப்பெரிய அவார்டு. எனவே கணவரை மகாராஜா போல் நடத்துங்கள். வெளியில் அவர் சாதாரண வேலையில் இருக்கலாம் புகழ் அற்றவராக இருக்கலாம். ஆனால் வீட்டுக்கு அவர்தான் ராஜா என்று அவர் உணரவேண்டும். அப்புறம் பாருங்கள் இந்த மகாராணியை கேட்காமல் மகாராஜா ஒரு துரும்பைக் கூட அசைக்கமாட்டார்.

மதிக்காத இடத்தை ஒதுக்கலாம்


சொந்தத்திலோ நட்பிலோ கணவனை யாரும் இகழ்ந்துபேச அனுமதிக்க வேண்டாம். அவர் பக்கம் நியாயத்தை எடுத்துச்சொல்லி அவருடைய மரியாதையைக் கட்டாயம் காப்பாற்றுங்கள். கணவனுக்கு மதிப்பளிக்காத நபரோ,இடமோ ஒதுக்கித்தள்ளி விடுங்கள்.

தோற்றுப் போவது நல்லது

வாக்குவாதங்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. நிறையப் பிரச்சினைகளைப் பற்றி வாக்குவாதங்கள் வந்துகொண்டுதான் இருக்கும். ஆண்கள் வெற்றிபெறவே விரும்புவர். வெற்றிபெற விடுங்கள். அந்தப் பெருமையை அவர்களுக்குக் கொடுங்கள். நிறைய வீடுகளில் வாக்குவாதங்களில் ஆண்கள் வெற்றிபெறுவார்கள். சில நாட்களில் அது செயல்பாட்டுக்கு வரும்போது பெண்கள் இஷ்டப்படிதான் வேலை ஆகும். இதனை கண்கூடாக நாம் பார்க்கலாம்.

உங்களுக்கு கணவனிடம் கேட்க நிறைய கேள்விகள், சந்தேகங்கள் இருக்கும். அதை ஆரம்பத்திலேயே நேரடியாகக் கேட்பது மிக நல்லது. உடனுக்குடன் பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே தீர்த்துவிடுவது இருவருக்குமே நல்லது.

நீங்களே முதல் தோழி

உங்களவரை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். 24 மணிநேரமும் அவருடைய நிகழ்ச்சிகள் என்ன என்பதை கேட்டு அறியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய அலுவலக பிரச்சினைகள்,அவருடைய நண்பர்களின் விபரங்கள் எல்லாம் தெரிந்துகொள்ளுங்கள். விரைவில் கணவனுடைய மிகச்சிறந்த தோழியாக நீங்கள் மாறிவிடுவீர்கள்.

அக்கறை அவசியம்

உங்கள் கணவரின் உடல் நலத்தை கவனியுங்கள். இரவில் படிக்கிறேன், படம் பார்க்கிறேன் என்று நடுஇரவுவரை விழிக்க அனுமதிக்காதீர்கள். நிறைய தூக்கம்,கட்டாய உடற்பயிற்சி, அடிக்கடி மருத்துவ ஆலோசனை என்ற முக்கியமான விசயங்களை கணவன் அசிரத்தையாக இருந்தாலும் நீங்கள் மிகுந்த அக்கரையுடன் செய்யுங்கள்.

ஒப்பிட தேவையில்லை

உங்கள் கணவனை வேறு ஆண்களுடன் ஒப்பிடவே வேண்டாம். ஒருவர் போல் மற்றவர் இருக்கமுடியாது. உங்கள் கணவரை அவருக்கே உரிய குணங்களுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். சினிமா கதாநாயகர்கள் போலிகள். கணவர் உங்களின் சொந்த அசல் கதாநாயகன் என்பதை மறவாதீர்கள்! எனவே கணவரை உங்கள் அப்பாவுடனோ, சகோதரர்களுடனோ கூட தப்பித்தவறி ஒப்பிட்டு பேச வேண்டாம்.

நிதி மந்திரியாகுங்கள்

உங்களால் எவ்வளவு செலவு செய்ய முடியுமோ அதை முன்கூட்டியே தீர்மானியுங்கள். கணவனின் வரவுக்குள் செலவு ! ஆடம்பரம் வேண்டாம்.உங்கள் எதிர்காலம் பற்றி பேசுங்கள். எதிர்காலம் என்பது வெகு தொலைவில் இல்லை. இன்னும் 10 வருடம் கழித்து எப்படியிருக்கும் உங்கள் வாழ்க்கை என்று உங்கள் எண்ணங்களைக்கூறுங்கள்! கணவனின் கருத்தையும் கேளுங்கள். இருவரும் சேர்ந்து அந்த இலக்கு நோக்கி நகரும்போது வாழ்க்கை இன்பமான சுமையாக இருக்கும்.

மறதி நல்லதிற்கே

உங்கள் மனம் கோணும்படி சில வார்த்தைகள் கணவன் என்றோ கூறி இருப்பார். பெரும்பாலும் அப்படிச்சொன்னதற்காக உண்மையில் உள்ளத்தில் பிற்பாடு வருத்தம் வந்திருக்கும். ஆனால் அதை நிறையப்பேர் சொல்லமாட்டார்கள். நீங்கள் வாக்குவாதம் செய்யும் ஒவ்வொரு முறையும் அதனை ஞாபகப்படுத்த வேண்டாம். மறந்து விடுங்கள்.

நீங்களே தொடங்குங்கள்

கணவன்தான் படுக்கை அறையில் விசயத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று பெண்கள் அமைதியாக இருப்பீர்கள். இது மிகவும் தவறு. ஈகோ உடைக்கப்பட வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று. இங்கு கௌரவம் பார்ப்பதில் அர்த்தமில்லை. இங்கு கட்டுடைப்பது நீங்களாகவே இருந்துவிட்டுப் போங்களேன். ஆரம்பித்தபின் நீ தான் ஆரம்பித்தாய் என்று யாரும் குற்றம் சொல்லப்போவதில்லை. தாண்டுங்கள் கூச்சத்தை!!!

தன்னையே ரசிக்கலாம்

உங்களைப் பற்றி நீங்களே ஒரு நல்ல அபிப்பிராயம் கொள்ளுங்கள்.. தன்னைப் பற்றியே வெறுப்பில் உள்ளோரைச் சுற்றி எப்படி மகிழ்ச்சி இருக்கும். நீங்கள் உங்களையே ரசிக்க ஆரம்பியுங்கள். தன்னை ரசிப்பவர்கள் இடம் ஒரு அதீத மகிழ்ச்சியும்,அவர்களைச் சுற்றியிருக்கும் இடம் மகிழ்ச்சிகரமாகவும் இருக்கும். உங்களை நீங்கள் காதலியுங்கள். உங்கள் கணவனைக் காதலிப்பது மிக எளிதாகிவிடும்.

சந்தோச கூடாரம்

வீட்டை சந்தோசமான இடமாக வைத்திருங்கள். ”ஏண்டா வீட்டுக்கு வருகிறோம்” என்று கணவன் நொந்து போவதுபோல் இல்லாமல் மகிழ்ச்சியின் கூடாரமாக வீட்டை மாற்றுங்கள். உங்களுடைய சந்தோசங்களை, நகைச்சுவைகளை கணவனிடம் பகிர்ந்துகொள்ள ஆரம்பியுங்கள். இது கணவனுக்கு உற்சாகத்தை அளிக்கும். ஏனெனில் பகிரப்பட்ட சந்தோசமும் நகைச்சுவையும் இரண்டு மடங்காக திரும்பக்கிடைக்கும்.

Thursday 26 January 2012

Romance tips for Married couple

இனிய மணவாழ்க்கை அமையப்பெற்றவர்கள் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்பது உண்மை. சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் திருமணம், ஆயிரம் காலத்து பயிராக, தலைமுறைகளைக் கடந்து செழித்து வளர வேண்டும் எனில் தம்பதியர்களிடையே ஒற்றுமை அவசியம்.

விட்டுக் கொடுத்தலும், சகிப்புத்தன்மையும் இருந்தால் எத்தகைய இடர் வந்தாலும் மணவாழ்க்கையில் விரிசல் ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் இன்றைய தலைமுறையினர், காதல் திருமணமோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ எதுவென்றாலும் அவசரமாக முடிவு செய்து எளிதில் பிரிந்து விடுகின்றனர்.

சிறு சிறு கருத்து மோதல்களுக்காக நீதிமன்ற படியேறும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதனை தவிர்க்க உளவியல் வல்லுநர்கள் கூறும் ஆலோசனைகளை தெரிந்து கொள்வோம்.

பொய்யை தவிர்ப்போம்

“ஆயிரம் பொய் சொல்லியாவது திருமணம் செய்ய வேண்டும்" என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆனால், திருமண‌த்‌தி‌ற்கு மு‌ன்பு, பெற்றோர்கள் கூறு‌ம் பொ‌‌ய்களே, பல தம்பதியரின் பிரிவிற்கு அடி‌ப்படையாக உள்ளது.

“ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்" என்பார்கள். ஆனால் ஒரு குடும்பத்தில் கணவன், மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டால் பலரின் ஆதிக்கம் அதிகரிக்கும். இதனால் பிரச்சினை மேலும் வலுவடைந்து பிரிவும் அதிகரிக்கிறது. எனவே, பிர‌ச்‌சினை துவ‌ங்கு‌ம் போதே அதை‌ப் ப‌ற்‌றி இருவரு‌ம் மன‌ம் வி‌ட்டு‌ப் பே‌சி பிர‌ச்‌சினையை தீ‌ர்‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம். எதையு‌ம்
அறிவு‌ப்‌பூ‌ர்வமாக ஆராயாம‌ல், மன‌ப்பூ‌ர்வமாக ஆரா‌ய்‌ந்தா‌ல் ந‌ல்ல வ‌ழி கி‌ட்டு‌ம்.

மூன்று தாரக மந்திரங்கள்

இல்லறவாழ்க்கை இனித்திட மூன்று தாரக மந்திரங்களை பின்பற்றினால் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழலாம். அவை:

சூழ்நிலைக்கேற்ப நடந்து கொள்ளுதல், அனுசரித்துப் போகுதல், மற்றவர்களை மதித்து நடத்தல். இவற்றை பின்பற்றினால் இல்லறம் நல்லறமாகும்

சகிப்புத்தன்மை

இன்றைய இளம் தலைமுறையினரிடம் விட்டுக் கொடுத்தல், சகிப்புத்தன்மை போன்ற நற்குணங்கள் இல்லாத காரணத்தால்தான் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போகிறது.

விவகாரத்தை தவிர்க்க தம்பதிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை குடும்ப நல நீதிமன்றங்களில் எழுதி வைத்துள்ளனர். இதனை அனை‌த்து த‌ம்ப‌திகளு‌ம் பி‌ன்ப‌ற்‌றி வ‌ந்தாலே பெரு‌ம்பாலான குடு‌ம்ப பிர‌ச்‌சினைக‌ள் வராது. அப்நபடியே தலைதூ‌க்‌கினாலு‌ம் அவை பெ‌ரிய அள‌வி‌ல் உருவாகாது.

தம்பதிகள் பின்பற்ற வேண்டியவை:

- ஒரேசமயத்தில் இருவரும் கோபப்படாதீர்கள்.

- வாக்குவாதம் ஏற்படுகின்ற பிரச்சினைகளில் ஒருவர் மற்றவரை ஜெ‌யி‌க்க‌வி‌ட்டு மகிழ்ச்சி அடையுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை எப்பொழுதுமே!

- விமர்சனத்தையே வாஞ்சையுடனும், அன்புடனும் செய்து பாருங்கள்.
* கடந்தகால தவறுகளைச் சுட்டிக் காட்டாதீர்கள்.

- உலகத்திற்காக போலியாக வாழ்வதைக் காட்டிலும், உங்களுக்காகவே வாழ்ந்து பாருங்களேன்.

- விவாதம் தவிர்க்க முடியாதது என்றால், கூடியவரைக்கும் அதை ஒத்திப் போடுங்கள்.

- ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஒரு அன்பான வார்த்தையோ அல்லது வாழ்த்தோ உங்கள் துணையிடம் உபயோகப்படுத்திப் பாருங்கள்.

- செய்த தவறை உணரும்போது அதை ஒத்துக் கொள்ளவும் அல்லது அதற்காக மன்னிப்புக் கேட்கவும் தயங்காதீர்கள்.

இதன்படி நடந்து கொண்டால் யாரும் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தின் வாசலுக்கு செல்ல வாய்ப்பே இல்லை.

Tips to Love

‘காதல்’ இந்த வார்த்தையை உச்சரிக்கும் போதே மனசுக்குள் மழைபெய்யும். காதலை அனுபவித்து உணர்ந்தவர்களுக்குத்தான் அதன் உன்னதம் தெரியும். காதலிக்கத் தொடங்கியவுடன் உலகமே அழகானது போல தோன்றும். சாமன்ய மனிதன் கூட காதலில் விழுந்தவுடன் சரித்திர நாயகனைப் போல உணரத் தொடங்குவான். இத்தகைய மாற்றங்களை காதல் என்ற ஒற்றைச் சொல் மாற்றிவிடுகிறது. அது எங்கு எவ்விதம் ஏற்படுகிறது? என்பதை விளக்குகின்றனர் உளவியல் வல்லுநர்கள்.

எங்கே எவ்விதம் தோன்றும்

“ நேற்றுவரை எதுவும் இல்லை. புயலென என் நெஞ்சில் நுழைந்தாய் இன்றுமுதல் நான் நானாய் இல்லை” என்பர் காதல் வயப்பட்டவர்கள். அருகருகே இருந்த போதும் கூட காதலை உணரமுடியாது. ஆனால் சின்ன பிரிவுதான் அந்த காதலை உணர்த்தும். எனக்குரியவளை நான் கண்டுபிடித்துவிட்டேன் என்பதை மனம் எந்த சூழலில் உணரத் தொடங்குகிறதோ அப்பொதுதே நீங்கள் காதல் வயப்பட்டுவிட்டீர்கள் என்பதை உணரலாம்.

ஆயிரம் பார்வையிலே

நம் நேசத்திற்குரியவர் நம்முடைய நேசத்தை புரிந்து கொண்டுள்ளாரா என்பதை எப்படி உணர்ந்து கொள்வது என்பதில் குழப்பம் ஏற்படலாம். கவலை வேண்டாம். ஆயிரக்கணக்கானோர் திரண்டிருக்கும் கூட்டத்திலும், உங்களுக்கானவர் அங்கு இருந்தார் என்றால் அவரை தனியாக இனம் கண்டு கொள்ளலாம். அந்த பார்வை நிச்சயம் உங்களை வந்தடையும். அதனால்தான் கவிஞர்கள் “ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்” என்று பாடி வைத்துள்ளனர்.

காதல் தன்னம்பிக்கை

காதல் என்பது முட்டாள்தனமானது என்பர் அதை உணராதவர். காதல் என்பது எத்தனை உன்னதமானது என்பது உணர்ந்தவர்களுக்குத்தான் தெரியும். சாமன்ய மனிதரையும் சாதிக்கத் தூண்டுவது காதல். காதலை வெளிப்படுத்தும் முறையிலேயே நாம் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். நாம் நேசிக்கும் நபரிடம் நம் உணர்வை வெளிப்படுத்துவதில் வெற்றி பெற்றுவிட்டால் போதும் அந்த காதல் நிச்சயம் வெற்றிபெறும் என்கின்றனர் உளவியலாளர்கள்.

காதலுக்கு நட்பு அவசியம்

காதலை வெளிப்படுத்தும் முன் உங்களவரின் நட்பு வட்டத்தை உங்கள் வசமாக்குங்கள். அது மிகப்பெரிய வெற்றிக்கு வழிவகுக்கும். அதே சமயத்தில் உங்கள் காதலை வெளிப்படுத்த யாரையும் தூது போக சொல்லாதீர்கள். வெற்றியோ, தோல்வியோ, ஆமோதிப்போ, அவமானமோ எதையும் நீங்களே ஏற்றுக்கொள்வது காதல் பாடத்தில் முதல் அனுபவம்.

நீங்கள் நீங்களாக இருங்கள்

ஹீரோயிசத்தை வெளிப்படுத்துகிறேன் பேர்வழி என்று எந்த சந்தர்ப்பத்திலும் ஓவர் ஆக்ட் செய்யவேண்டாம். அதுவே தவறாகிவிடும். எனவே எந்த சூழ்நிலையிலும் நீங்கள் நீங்களாவே இருங்கள் அதுவே உங்களவருக்கு உங்களை பிடிக்கக் காரணமாகிவிடும். அப்புறம் என்ன காதல் டூயட் பாடவேண்டியதுதானே.

புன்னகை உதடுகள்

எந்த சூழ்நிலையிலும் மாறாத புன்னகையுடன் இருங்கள் அதுதான் உங்களவருக்கு பிடிக்கும். சிடுமூஞ்சித்தனமான ஆசாமிகளை யாரும் விரும்புவதில்லை. காதலித்தாலும் நட்புச்சூழலில் இருங்கள். உனக்கு நானிருக்கிறேன் என்பதை சொல்லாமல் சொல்லுங்கள். அதுவே உங்களவருக்கு நீங்கள் தரும் மிகப்பெரிய பரிசு.

இதயப் பூர்வமான நம்பிக்கை

காதலுக்கு ஓகே சொல்லியாகிவிட்டதே அப்புறம் என்ன டேட்டிங் போகலாமா என்று கேட்டு அதிர்ச்சியடைய வைக்காதீர்கள். அது மிகப்பெரிய தோல்விக்கு வித்திடும். எனவே முதலில் ஒருவரை ஒருவர் உணர்வு ரீதியாக இதயப் பூர்வமாக புரிந்து கொள்ளுங்கள். பிறகுபாருங்கள் உங்களவரின் இதயத்தில் நீங்கள் உச்சத்தில் இருப்பீர்கள்.

Cleanliness can stop Asthuma in children

மாசடைந்த சூழலும், தூசி, அலர்ஜி, போன்றவைகளினாலும் எண்ணற்ற குழந்தைகள் ஆஸ்துமா நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். அவர்கள் உபயோகிக்கும், படுக்கையறை, பொருட்கள் போன்றவற்றை சுத்தமாக வைத்துக்கொண்டால் ஆஸ்துமா நோய் தாக்காமல் பாதுகாக்கலாம் என்கின்றனர் குழந்தை மருத்துவர்கள்.

குழந்தை பருவத்தில் ஏற்படக்கூடிய ஆஸ்துமா நோய் பரம்பரை நோயல்ல. அதிகபட்சமாக குழந்தை பருவ ஆஸ்துமா நோய் அலர்ஜியால் ஏற்படக்கூடியது. பூக்களின் மகரந்த தூள்கள், வீட்டுத்தூசு, மிருகக்கழிவு, போன்றவற்றால் இது ஏற்படுகிறது.

இயல்பான ஆஸ்துமா

மூன்று வயதிற்கு கீழுள்ள குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமாவை இயல்பான ஆஸ்துமா என்று குழந்தை நல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நோயெதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகளை இந்த ஆஸ்துமா தாக்குகிறது. குளிர்காற்று, வீரியம் மிக்க வாசனை, புகை போன்றவற்றாலும் வைரஸ் நுண்கிருமிகள் மூலம் ஏற்படும் தொற்று நோயாலும் ஏற்படக்கூடும்.

சில குழந்தைகளுக்கு மூன்று வயதிற்குப் பிறகே ‘ வீசிங்’ என்னும் மூச்சுத் திணறல் ஏற்படத் தொடங்குகிறது. இது சாதாரணமாக 8 வயதிற்கு முன்பாக குணமாகிவிடும். லேசான விட்டு விட்டு ஏற்படும் ஆஸ்துமா வருடத்திற்கு 3 அல்லது 4 முறை ஏற்படும். 10 முதல் 12 வயதிற்குள் சரியாகிவிடும். நடுத்தர கடுமையான ஆஸ்துமாவில் குழந்தைகளுக்கு நோயின் அறிகுறிகள் 2 வயதிற்கு முன்னரே ஆரம்பிக்கும்.நோயின் கடுமை அதிகாமாகவும், நீடித்தும் இருக்கும். இந்நோய் முழுமையாக குணமடையாது பிற்காலத்திலும் நீடிக்கும்.

சுத்தமான சூழல்

குழந்தைகளின் படுக்கை அறையினை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மெல்லியதாக இருந்தால் அதை அடிக்கடி சுத்தம் செய்ய எளிதாக இருக்கும். திரைச் சீலைகளுக்கு மெல்லிய துணிகளே நல்லது. ஏனெனில் மொத்தமான வேலைப்பாடுடன் இருக்கும் துணிகளில் தூசி அதிகமாய் படியும் என்பதால் அதுவே குழந்தைகளை பாதிக்கும்.

குழந்தைகளின் படுக்கை அறையில் உள்ள புத்தகங்கள், சுவர்களில் தொங்கும் படங்களில் தூசிகள் தங்கியிருக்க வாய்ப்புண்டு. எனவே அவற்றை ஈரமான துணி கொண்டு துடைப்பது நல்லது. வீட்டில் நாய், பூனைகள் வளர்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவற்றின் ரோமங்களினால் அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது. புகை பிடிப்பவர்கள் அருகில் போக அனுமதிக்க கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

சத்தான உணவு

குழந்தைகளுக்கு சத்தான உணவு அளிக்கவேண்டும். அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குறிப்பிட்ட உணவினால் அலர்ஜி ஏற்படுகிறது என்று தெரிந்தால் அவற்றை தவிர்க்கலாம் என்கின்றனர் குழந்தை மருத்துவ நிபுணர்கள். ஆஸ்துமாவை எளிதில் குணப்படுத்தி விடலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மூச்சுப்பயிற்சி போன்றவற்றை சிறு வயது முதலே பழக்கப்படுத்தினால் ஆஸ்துமா நோயை தவிர்க்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். மனோ தத்துவ முறைப்படி அளிக்கப்படும் சிகிச்சையும் பலன் அளிக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Importance of Facial Massage

மனித உடலில் முக்கிய பகுதியாக கருதப்படுவது முகம். முகத்திற்கு அழகூட்டுவதற்கு எண்ணற்ற கிரீம்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. அழகு நிலையங்கள் பலவும் முகத்திற்கு பொலிவூட்ட பல வித உபயங்களை கையாளுகின்றன. அதில் முக்கியமானது முக மசாஜ். முகத்திலிருக்கும் உயிரற்றுப்போன அணுக்களை நீக்கவும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், சோர்ந்துபோன தசைகளுக்கு புத்துணர்ச்சி கொடுக்கவும் மசாஜ் உதவும். இது முகத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து பொலிவை கூட்டுகிறது.

மசாஜ் செய்ய அழகு நிலையங்களுக்குத்தான் செல்லவேண்டும் என்பதில்லை. நாமே நமது முகத்தை வீட்டிலேயே மசாஜ் செய்து கொள்ளலாம். முகம் மொத்தமாக சேர்த்து 20 நிமிடம் வரை மசாஜ் செய்யலாம். மாதத்துக்கு ஒருமுறையாவது மசாஜ் செய்தால் முகத்தின் அழகு அதிகரிக்கும்.

கவனம் அவசியம்

முகத்தில் கண், மூக்கு, உதடு போன்ற மிருதுவான பகுதிகள் இருப்பதால் முகத்திற்கு மசாஜ் செய்ய கூடுதல் கவனம் தேவை. கண்கள் தவிர பிற பகுதிகளுக்கு கீழிருந்து மேல்புறமாகத்தான் மசாஜ் செய்யவேண்டும். கண்களுக்கு மட்டும் அதை சுற்றியுள்ள பகுதியில் வட்டமாக மசாஜ் செய்ய வேண்டும்.

ஊட்டம் தரும் தயிர்

பஞ்சில் கிலென்சிங் மில்க் அல்லது தயிர் தோய்த்து தடவி முகத்தை சுத்தப்படுத்துங்கள். பேன்ஸி கடைகளில் பல்வேறு பிரண்ட்களில் நரிஸிங் க்ரீம் கிடைக்கிறது. அவரவர் முகத்திற்கு பொருத்தமான க்ரீமை தேர்ந்தெடுத்து வாங்குவது நல்லது. நரிஷிங் க்ரீமை முகம் முழுக்க பரவவிட்டு தடவிக் கொள்ளுங்கள்.

கழுத்தில் தொடங்கி கன்னம், தாடை, கண், மூக்கு என்று ஒவ்வொரு பகுதிக்கும் நேரம் ஒதுகி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். ஒவ்வொரு பகுதியையும் நான்கிலிருந்து ஆறு தடவை செய்யலாம். பால், ஏடு, வெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றையும் உபயோகித்து மசாஜ் செய்யலாம். நம் தோலுக்கு ஊட்டங்களை உறிஞ்சிக் கொள்ளும் தன்மையிருப்பால் நரிஷிங் க்ரீம், பாலேடு போன்றவற்றிலிருக்கும் ஊட்டங்களை எளிதில் உறிஞ்சிக் கொள்ளும்.

வெது வெதுப்பான நீர்

மசாஜ் செய்து முடித்ததும் இரு கைகளாலும் கன்னத்தை லேசாக தட்டுங்கள். பிறகு இரு கைகளால் முகத்தை சிறிது நேரம் மூடிக் கொள்ளுங்கள். பிறகு சிறுது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் நனைத்த துண்டால் முகத்தை துடையுங்கள். பிறகு நொறுநொறுப்பான பேஸ் ஸ்கிரப் அல்லது அரிசிமாவை பால் கலந்து பேஸ்டாக்கி முகத்தில் ஐந்து நிமிடங்கள் வரை கரகரப்பாக தேய்க்க வேண்டும்.

கரும்புள்ளிகளை நீக்கவேண்டும்
பின் மூக்கின் ஓரங்களில் இருக்கும் பிளாக் ஹெட்ஸ்களை அதற்கான உபகரணம் பயன்படுத்தி நீக்க வேண்டும். ஆழமாக இருக்கும் பிளாக் ஹெட்ஸ்களை நீக்கும் முயற்சி வேண்டாம் வேறுவிதமான பாதிப்புகளை உருவாக்கிவிடும்.

யார் செய்யலாம்

மேற்சொன்ன மசாஜ் முறைகள் உலர்ந்த மற்றும் சாதாரண சருமத்தினருக்கு மட்டும்தான் பொருந்தும். முகத்தில் பரு இருக்கும் பெண்கள் சுயமாக மசாஜ் செய்யக்கூடாது.எல்லாம் முடிந்த பிறகு முகத்தில் முல்தானி மெட்டியில் சிறிது பால் குழைத்து பேஸ்பேக் தடவி உலர விடுங்கள். பத்து நிமிடம் போன பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவிவிடவும். அப்புறம் பாருங்கள் உங்கள் முகம் பள பளப்பாய் ஜொலிக்கும்.

Tips on Foot care

அழகு என்றாலே முக அழகை மட்டுமே ஒருசிலர் கவனத்தில் கொள்கின்றனர். மொத்த உடலையும் தாங்கும் பாதங்களைப் பற்றி யாரும் கவலைக்கொள்வதில்லை. பாத அழகு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே தற்போது அழகு நிலையங்களில் பெடிக்கியூர் எனப்படும் பாத அழகு பயன்பாட்டில் உள்ளது. பணம் செலவழித்து அழகு நிலையங்களுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே எளிதாக பெடிக்கியூர் செய்து கொள்ளலாம்.

கால்களை அதிகம் பாதிப்பது பித்தவெடிப்பு. இது அதிக வலி தருவதோடு கால்களின் அழகையும் பாதிக்கும். அதிக எடை உள்ளவர்கள், ட்ரை ஸ்கின் உள்ளவர்கள், அதிக அழுக்கான இடங்களில் நடப்பவர்கள், தோட்டவேலை செய்பவர்கள் என்று அனைவரையுமே பாத வெடிப்பு தாக்குகிறது.

இறந்த செல்கள் நீங்கும்
கால்களுக்கு ரெகுலரான ஸ்க்ரப்பிங், மாய்ச்சுரைசிங் செய்வதன் மூலம் பித்த வெடிப்புகளை நீக்கிவிடலாம். கால்கள் அதிக நேரம் தண்ணீரில் ஊறினால்தான் ஸ்க்ரப்பிங் செய்வது எளிது. கடினமான தோல்களை எளிதில் நீக்கலாம். கால்களை தேய்க்கவென்றே கடைகளில் ஸ்டீலில் செய்த கைப்பிடி உள்ள ஸ்கிரப்புகள் விற்கின்றனர்.

இதனைக் கொண்டு இறந்த செல்களையும், வெடிப்புகளையும் எளிதாக நீக்கலாம். எங்கெங்கு வெடிப்பு, அழுக்கு இருக்கிறதோ, அங்கேயெல்லாம் இந்த ஸ்க்ரப்பரால் நன்றாக ஸ்க்ரப் செய்யுங்கள். அதிக வெடிப்பு உள்ளவர்களுக்கு இதுவே சிறந்தது.

கடினத் தன்மையை போக்கலாம்

மிகவும் கடினமாக அங்கங்கே முடிச்சு போல சிலருக்கு ஸ்கின் கடினத்தன்மையுடன் இருக்கும். இவர்கள் மெனிக்யூரில் சொன்ன ப்ளேடு வாங்கி அதனைக் கொண்டு தோல்களை சீவிவிடலாம். பிறகு பெடிக்யூர் கிட் அல்லது நெயில் கட்டரிலேயே உள்ள அட்டாச்மெண்ட் கொண்டு நக இடுக்குகளில் உள்ள அழுக்கினை நீக்க வேண்டும். பிறகு கால்களில் சோப் தேய்த்து, பிரஷினைக் கொண்டு நன்றாக தேய்க்க வேண்டும்.

இப்போது கால்களை நன்றாக துடைத்துவிட்டு, மாய்ச்சுரைசிங் க்ரீமை கால், விரல் இடுக்கு என்று எல்லா இடங்களிலும் மசாஜ் செய்வது போல் தடவுங்கள். பிறகு கால்கள் உலர்ந்ததும், கைகளுக்கு சொன்ன அதே முறையில் நெயில் பாலீஷ் போடுங்கள்.

கால்களில் அதிகமான வெடிப்பு உள்ளவர்கள் , அதனை நீக்க தேவையான மருந்துகளை உபயோகிக்கலாம். இரவு தூங்கும்போது நன்றாக கால் வெடிப்புகளில் அந்த மருந்துகளை தடவி, ஒரு சாக்ஸ் அணிந்துக் கொண்டு உறங்க சென்றால் சிறந்த பலன் கிடைக்கும். இல்லாவிட்டால் தேய்க்கும் அத்தனை மருந்தும் படுக்கையில் பட்டு பாழாகிவிடும். இதனால் கால்கள் சரியாவதும் பாதிக்கப்படும்.

செருப்பு தேர்ந்தெடுப்பதில் கவனம்

பெரும்பாலான பாதங்கள் செருப்பினாலும் பாதிக்கப்படுகின்றன. எனவே கால்களுக்கு செருப்பினை தேர்ந்தெடுக்கும்போதும் கவனம் தேவை. அதிகமான உயரமுள்ள செருப்புகள் அணிய விருப்பமுள்ளவர்கள், அணியும் நேரத்தையாவது குறைந்த நேரமே இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

பென்சில் ஹீல்ஸ் உபயோகிக்கும் முன்பு நமது கால்கள் நம் எடையை நன்கு பாலன்ஸ் செய்கிறதா என்று பார்த்துவிட்டு வாங்குங்கள். ஜாகிங், வாக்கிங் செய்ய நல்ல தரமான ஷூக்களையே வாங்குங்கள். செருப்புகள் அணிந்து வாக்கிங் போவதைக் காட்டிலும், ஷூ அணிவதால் பாடி பாலன்ஸ் நன்கு இருக்கும். காற்றோட்டமுள்ள ஷூக்கள் அணிவது கால் தொற்றுநோய்களைத் தடுக்கும்.

எப்போதும் அழகான தோற்றத்தில் இருக்க முகம் மட்டுமல்ல, கை கால்களும் நல்ல பராமரிப்பில் இருப்பது அவசியம். கை, கால்களின் பராமரிப்பினை மாதம் இரண்டு முறை செய்து கொண்டால் போதும். பட்டுப்போன்ற பாதங்கள் பளிச்சென்று கிடைக்கும்.

Exercise to get pregnanat

திருமணமான தம்பதியர்கள் ஜாலியாக ஊர் சுற்றி மண வாழ்க்கையை கொண்டாடினாலும், சில மாதங்களிலேயே ஏதாவது தகவல் இருக்கா என சொந்த பந்தங்கள் கேட்கத் தொடங்கிவிடுவர்.

குழந்தை பெற்றுக்கொள்வதைப் பற்றி தம்பதியர் தங்களுக்குள் திட்டம் வைத்திருந்தாலும், சரியான உடல் நலமும் தாய்மைப் பேற்றினை ஏற்றுக்கொள்ளும் மன பலமும்தான் பெண் கருத்தரிக்க ஏற்றது. அமைதியற்ற சூழலில் உண்டாகும் கரு பாதிப்பிற்குள்ளாகும் வாய்ப்புள்ளது. எனவே எளிதில் கருத்தரிக்கவும், அதனை பாதுகாக்கவும் ஏற்ற ஆலோசனைகளை தெரிவித்துள்ளனர் மகப்பேறு மருத்துவர்கள்.

சரியான சுழற்சி அவசியம்

பெண்ணின் உடற்கூற்றில் ஏற்படும் மாதவிலக்கு சுழற்சி சரியாக அமையவேண்டும். அப்பொழுதுதான் கருமுட்டை வெளியாவது சரியானபடி அமையும். 27 நாள் முதல் 32 நாட்களுக்குள் சரியானபடி மாதவிலக்கு சுழற்சி ஏற்படும் பெண்கள் ஆரோக்கியமான உடல் அமைப்பு உடையவர்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். எனவே அந்த நேரத்தில் சரியான திட்டமிடல் இருந்தால் கரு உருவாவது நிச்சயம் என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.

கரு உருவாக சரியன உடல் பயிற்சியோடு மனப் பயிற்சியும் அவசியம் என்பது மருத்துவர்களின் அறிவுரை. முதலாவதாக தாய்மை அடைவதை விரும்பவேண்டும். பெற்றோர்களுக்காகவும், சொந்த பந்தங்களுக்காகவும் வேண்டா வெறுப்பாக தாய்மை அடைய நினைக்கக் கூடாது. அது கருவில் உருவாகும் குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே ஆர்வத்தோடும், அக்கறையோடும், தாய்மையை வரவேற்க தயாராக வேண்டும்.

எளிய உடற்பயிற்சி

எளிய உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். குதித்தல், ஓடுதல் உள்ளிட்ட சிரமமான உடற்பயிற்சியை தவிர்க்லாம். காற்றாட நடக்கலாம். இதனால் உடலும், மனமும் புத்துணர்ச்ச்சியடையும். சின்ன சின்ன உடற்பயிற்சியினால் மாதவிலக்கு சுழற்றி சரியாக நிகழும். நடப்பதன் மூலம் கருத்தரித்தல் எளிதாகும் என்கின்றனர் மருத்துவர்கள். இந்த உடற்பயிற்சியை கரு உண்டான பிறகும் தொடரலாம்.

தசைகளை வலுவாக்கும் சைக்கிள்
சைக்கிள் ஓட்டுவது மிகச்சிறந்த உடற்பயிற்சியாகும். இது கால்கள், தொடைகளின், தசைகளை வலுவாக்கும். ரத்த ஓட்டம் சீராகும். உடல் எடை குறைவதோடு, மாதவிலக்கு சுழற்சி சரியான முறையில் நிகழும் என்றும் மகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மன அமைதி தரும் யோகா

யோகா, தியானம் மன அமைதி தரும். தாய்மை அடைவதை விரும்பும் பெண்கள் மன அமைதியோடு திகழ்வது அவசியம். தேவையற்ற மன அழுத்தம், கவலை போன்றவை தாய்மைப் பேற்றினை தடுக்கும் எதிரிகளாகும். எனவே யோகா, தியானங்களில் மனதை ஈடுபடுத்துவதன் மூலம் மனம் அமைதியடையும். இதனால் உடலில் ஹார்மோன்களின் சுரப்பு சரியான முறையில் நிகழும். ரத்த ஓட்டம் சீராக அனைத்து உறுப்புகளுக்கும் சென்றடையும்.

உற்சாகம் தரும் நீச்சல்
நீச்சலானது கர்ப்பம் தரிப்பதற்கு ஏற்ற எளிதான உடற்பயிற்சியாகும். இந்த உடற்பயிற்சியை கர்ப்பம் தரித்த பின்னர் மருத்துவர்களின் ஆலோசனையோடு தொடரலாம்.

How to treat infertility for women

திருமணமான பெண்கள் அதிகம் எதிர்பார்ப்பது தாய்மை. ஆரோக்கியமான தம்பதிகள் எளிதில் குழந்தை பெற்றுக்கொள்ள வாய்ப்புண்டு. அதேசமயம் பெண் தாய்மையடைவதை தடுக்கும் எதிரிகள் பல உண்டு. உறவில் ஈடுபாடின்றி இருப்பது, நோய் தாக்குதல் போன்றவையும் பெண்களின் தாய்மைக்கு எதிரியாகின்றன. தாய்மைக்கு வில்லனாக திகழ்பவைகளை வெல்வது குறித்து மகப்பேரியல் நிபுணர்கள் தரும் ஆலோசனைகளை தெரிந்து கொள்ளலாம்.

தாய்மைக்கு முதலில் வில்லனாக இருப்பது, `பாலிசிஸ்டிக் ஓவேரியன் டிசீஸ்'. இந்திய பெண்களில் ஐந்தில் ஒருவருக்கு இந்த பாதிப்பு இருக்கிறது. சினைப்பையில், நீர் கோர்த்த பருக்கள் தோன்றுவதையே பாலிசிஸ்டிக் ஓவேரியன் நோய் தாக்குதல் ஆகும். நீர்கோர்த்த அந்த பருக்கள் புற்றுநோய் கட்டிகளாக மாற வாய்பில்லை என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள். இதற்கு சரியான சிகிச்சை எடுத்துக்கொண்டால் தாய்மை அடையலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹார்மோன் பாதிப்பு

இந்த பாதிப்பு கொண்டவர்களுக்கு முகப்பரு தோன்றும். உடல் குண்டாகும். முகம், வயிறு, மார்புப் பகுதியில் முடி வளரும். மேலும் ஹார்மோன் பிரச்சினைகள் இருந்து கொண்டிருக்கும். பரம்பரை ரீதியாகவும் இந்த நோய் தோன்றும். இந்த நோய் பாதிப்புள்ள பெண்களின் உடலில் ஆண்களுக்கான டெஸ்ட்டோஸ்டிரான் ஹார்மோன் பெருமளவு சுரப்பதே இத்தகைய முரண்பாடுகளுக்கான காரணமாகும். இவர்களுக்கு பெண்களுக்குரிய ஹார்மோனை சுரக்கவேண்டிய சினைப்பையும், பிட்யூட்டரி சுரப்பியும், அதனை சரிவர சுரக்காத நிலை ஏற்படுவதால் அவர்களுக்கு மாதவிலக்கு நெருக்கடி தோன்றும். எனவே அருகில் உள்ள மகப்பேறு நிபுணர்களை தொடர்பு கொண்டு சரியான சிகிச்சை பெற்றுக்கொண்டால் இந்த குறைபாடுகள் நீங்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உலர்வுத் தன்மை

பெண்களின் இனப்பெருக்க உறுப்பு சுரப்பிகள் ஜெல்லி போன்ற திரவத்தை சுரக்கின்றன. இதனை `செர்விக்கல் மியூக்கஸ்' என்கிறோம். கணவரின் உயிரணு நீந்தி வேகமாகச் செல்ல துணைபுரிவது இந்த திரவத்தின் வேலை. இது கெட்டியாகி விட்டாலோ, தேவையான அளவு இல்லாவிட்டாலோ தாய்மைக்கு தடை ஏற்படும். எனவே உலர்வுத்தன்மையை போக்க சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும்.

பலவீனமே எதிரி

பெண்கள் பிறப்பு உறுப்பை இறுக்கமாக்கும் `வெஜைனெஸ்மாஸ்' நோய் ஏற்பட்டிருந்தாலோ, செக்ஸ் மீது ஆர்வம் இல்லாமல் இருந்தாலோ, செக்சை அருவறுப்பு நிறைந்ததாக கருதினாலோ அதற்கான சிகிச்சைகளை பெற்று, தீர்வு தேடிக்கொள்ள வேண்டும்.

ஆண்களிடையே உள்ள பலவீனமும் பெண்கள் தாய்மையடைவதற்கு தடையாகிறது. விந்தணு குறைபாடு, ஈடுபாடின்மை போன்றவையும் தாய்மை பேற்றினை தடுக்கும் எதிரியாக திகழ்கிறது.

நோய் தொற்றுகள்

சிலருக்கு கிளன்டிடா போன்ற கிருமித்தொற்றுகள் பிறப்பு உறுப்பு பகுதியில் ஏற்படும். சரியான நேரத்தில் அதற்கான சிகிச்சையை பெறாவிட்டால், செக்ஸ் செயல்பாட்டில் ஈடுபடும்போது வலி தோன்றும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போதும், சில வகை ஆன்டிபயோடிக் மருந்துகளை தேவையில்லாமல் சாப்பிடும்போதும், அதிக நேரம் ஈரத்தன்மையோடு இருக்கும்போதும் இந்த கிருமித்தொற்று ஏற்படும். எனவே உடல் நலத்திற்கு ஏற்ற சத்தான உணவுகளை உட்கொண்டு நோய்கிருமிகள் தாக்காத வகையில் பாதுகாக்க வேண்டும் என்பது மகப்பேறியல் நிபுணர்களின் ஆலோசனை.

Medicinal uses of Lemon

எலுமிச்சை ஒரு ஜீவக் கனி என்று போற்றப்படுகிறது. பல்வேறு அரிய சக்திகளைக் கொண்டது எலுமிச்சை. அப்படிப்பட்ட எலுமிச்சையின் மருத்துவ குணங்கள் பற்றியதுதான் இந்தக் கட்டுரை.

எலுமிச்சை கனியில் வைட்டமின் . சி உயிர்சத்து அதிகம் உள்ளது. அத்துடன் சுண்ணாம்பு சத்தும், பாஸ்பரசும் அதிக அளவில் உள்ளன. இது உடல் உஷ்ணத்தை தணிக்கும் ஆற்றல் பெற்றது. தினமும் ஒரு எலுமிச்சை பழம் சாப்பிட்டுவந்தால் அதில் உள்ள சத்துக்கள் நமது உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு உடல் திறனை வலுப்படுத்துகிறது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருள்

எலுமிச்சையில் அதிக நீரும், 30-க்கும் மேற்பட்ட எளிதில் ஆவியாகும் எண்ணெய் பொருட்களும் உள்ளன. இதில் ஆல்கஹால்கள், அல்டிஹைடுகள், எஸ்டர்கள், ஹைடிரோகார்பன், கீட்டோன்கள், ஆக்ஸைடுகள், சிட்ரிக் அமிலம், சிட்ரால் டெர்பினால்கள் போன்றவை உள்ளன.

தூக்கமின்மையை போக்கும்

வயிறு தொடர்புடைய கோளாறுகளை குணமாக்கும். மலச்சிக்கலையும் நீக்கும். பித்த காய்ச்சல், கிறுகிறுப்பு, வாந்தி போன்ற தொல்லைகளைப் போக்கும். வாய், வயிறு, போன்ற இடங்களில் ஏற்படும் புண்ணை ஆற்றும். வாய் நாற்றத்தைப் போக்கும்.

பற்களுக்கு பலத்தை அளிக்கும். கண்நோய்களை குணமாக்கும் சக்தியும் இதற்கு உண்டு. தூக்கமின்மையை போக்கி ஆழ்ந்த நித்திரையை கொடுக்கும்.

தோல் வறட்சியை போக்கும். சருமம் மிக மிருதுவாக இருக்க இதன் சாறு உதவுகிறது. உஷ்ணத்தால் ஏற்படும் சிறுநீர் கோளாரை சரி செய்யும் ஆற்றல் உண்டு.

கொசுக்கடிக்கு மருந்து

விஷத்தை முறிக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு. தேள் கொட்டி விட்டால் கொட்டிய இடத்தில் ஒரு துண்டு எலுமிச்சம் பழத்தை தேய்க்க விஷம் இறங்கும்.

கொசுக் கடித்த இடத்தில் எலுமிச்சை சாற்றினை பூசினால் எரிச்சல் குணமடையும். இரவில் தூங்கும் முன் சாற்றினை பூசினால் கொசுக்கடியில் இருந்து தப்பலாம்.

கிருமிகளுக்கு எதிரானது

பொதுவாகவே இயற்கையில் விளையும் கனிகள் மருத்துவ குணம் உடையவை. எலுமிச்சைக்கு அதில் முதலிடம். இது கிருமிகளுக்கு எதிராக செயல்பட்டு நோய் வராமல் தடுக்கின்றன. எலுமிச்சையில் உள்ள சாற்றில் சிட்ரிக் அமிலம் என்னும் முக்கிய பொருள் உள்ளது. இது வைட்டமின் சி குறைபாட்டினால் ஏற்படும் ஸ்கர்வி என்னும் நோயை குணப்படுத்த உதவுகிறது. பசியை தூண்டுகிறது. ஜீரணத்தை எளிதாக்குகிறது. வாந்தி, வயிற்று வலி நோய்களை குணப்படுத்தும்.

நுரையீரல் நோய்கள்

எலுமிச்சை கனியின் சாறு தாகத்தினை தீர்த்து எரிச்சலைப்போக்கும். நாடுவிட்டு நாடு செல்பவர்களுக்கும், கப்பல் பயணத்திற்கும் மிகவும் உதவும். நுரையீரல் நோய்களை போக்கும்.

எலுமிச்சை சாறுடன் சம அளவு தண்ணீர் சேர்த்து கொப்பளித்தால் ஈறு மென்மையாதல் மற்றும் வைட்டமின் சி குறைவினால் ஏற்படும் வாய்ப்புண்கள் குணமடையும்.

எலுமிச்சை சாற்றின் பானம் நீரிழிவு நோயாளிகளின் தாகத்தை தீர்க்கும் ஆற்றல் கொண்டது.

எலுமிச்சை ஊறுகாய்

அனைத்து வீடுகளும் இருக்கக்கூடிய அத்தியாவசிய உணவுப்பொருள் எலுமிச்சை ஊறுகாய். இது கணையப் பெருக்கம் தொடர்பான நோய்களை குணப்படுத்த உதவுகிறது.

How to keep your Face beauty

முக அழகுக்கும், தோல் மினுமினுப்புக்கும் சந்தைகளில் நூற்றுக்கணக்கான கிரீம்களும், லோசன்களும் விற்பனைக்கு வந்துவிட்டன. ஒருவாரத்தில் மங்கலான நிறத்தை சிகப்பாக்குகிறோம் என்றும், தோல் சுருக்கத்தை போக்குகிறோம் என்றும் பலவித வாக்குறுதிகளை கொடுத்து தங்களுடைய தயாரிப்புகளை விற்கின்றன அழகு கிரீம் தயாரிப்பு நிறுவனங்கள்.

நிறத்தின் மீது மோகம் கொண்டு இருக்கும் இந்தியாவில் இந்த அழகு கிரீம்களின் விற்பனை சதவிகிதம் ஆண்டுக்காண்டு அதிகமாகிக்கொண்டே போகிறது. நூற்றுக்கணக்கான ரூபாய் கொடுத்து கிரீம்களையும், சோப்புக்களையும் வாங்கி அவற்றை உபயோகித்து அதன் பலனுக்காக நாள் கணக்கில் காத்திருப்பதை விட நமக்கு நாமே அழகுக் கிரீம்களை தயாரிக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

ஆரஞ்சு பவுடர்

உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி தரும் ஆரஞ்சு பழச் சுளைகளை தின்றுவிட்டு அதன் தோலை நாம் குப்பையில் எறிந்து விடுவோம். இனிமேல் ஆரஞ்சு பழம் சாப்பிட்டால் அதன் தோலை உடனே எறியாமல் வெயிலில் உலர வைக்கவும். நன்றாக காய்ந்த தோலை அரைத்து பொடியாக்கி, அதனுடன் பசும்பாலை கலந்து பேஸ்ட் போல செய்யவும். அதனை முகம், கழுத்து உள்ளிட்ட பகுதிகளுக்கு அப்ளை செய்ய வேண்டும். சிறிது நேரம் கழித்து வெது வெதுப்பான முகம் கழுவ தோல் பளிச்சென்று புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஒரு மாதத்திற்கு காலை நேரத்தில் இதனை தொடர்ந்து பூசி வரவேண்டும். அப்புறம் பாருங்கள் உங்களின் முகத்தை கண்ணாடியில் பார்த்து நீங்களே வியக்கும் அளவுக்கு முகம் பளிச்சென்று ஆகும்.

தயிரும் தக்காளிச்சாறும்

நாம் அன்றாடம் உணவுக்குப் பயன்படுத்தப்படும் தயிர் மிகச்சிறந்த அழகு சாதனப் பொருளாகும். தயிருடன் சிறிதளவு தக்காளிச்சாறு அதனுடன் சிறிதளவு ஓட்ஸ் சேர்த்து ஊறவைக்கவும். அதனை நன்றாக கலந்து முகத்திற்கு பூசி சிறிது நேரம் கழித்து வெந்நீரில் கழுவ வேண்டும். இது வறண்ட சருமத்தை பொலிவாக்குவதில் இந்த கலவைக்கு ஈடு இணையில்லை.

சந்தனத்துடன் தயிரும் சேர்ந்து கலந்து முகத்திற்கு பூசுவதைப்போல, கழுத்து மற்றும் கையில் வெயிலால் தோல் கருத்துள்ள இடங்களில் பூசவேண்டும். சிறிது நேரம் காய்ந்த உடன் அதனை வெதுவெதுப்பான நீரில் கழுவ கருமை மாறி விடும்.

எலுமிச்சையும் தேனும்

சிறிதளவு பால்பவுடர், எலுமிச்சை ஜூஸ் சிறிதளவு, அரை ஸ்பூன் தேன், ஆலிவ் எண்ணெய் சிறிதளவு கலந்து முகத்திற்கு அப்ளை செய்ய வேண்டும் பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவேண்டும். அப்புறம் பாருங்கள் குழந்தையின் முகத்தைப்போல உங்களின் முகம் மென்மையாகும்.

Health Benefits of Carissa carandas (kallaak kaai)

எப்போதோ கிடைக்கும் பலாக்காயை இப்போது கிடைக்கும் களாக்காய் மேல்" என்று ஒரு பழமொழி உண்டு. அந்தளவிற்கு சிறப்பான மருத்துவ பயன்களை கொண்டது களாக்காய். இந்த தாவரமானது காரைச் செடிபோன்று மலைகளில் தன்னிச்சையாக புதர் போல் வளரும். தோட்டங்களிலும் வளர்க்கப்படும். இது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது.

தடிப்பான பச்சை இலைகளையுடையது. வெண்மையான பூக்களையும்,சிவப்பு நிறக்காய்களையும், கறுப்புப்பழங்களையும் கொண்டது. பூவும் காயும் புளிப்புச் சுவையுடையவை. விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படும்.

ஆரோக்கியம் தரும் காய்

களக்காய் புளிப்பு, இனிப்பு கலந்த சுவை கொண்ட பழமாகும். இதில் விட்டமின் ஏ, சி. சத்துக்கள் அடங்கியுள்ளன. இப்பழங்களில் இரும்பு, தாது சத்துக்கள் அதிகமிருப்பதால் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் குறைக்க பயன்படுகிறது. கண் பார்வையைத் தெளிவாக்கும். சாப்பாடு ஏற்கும் திறனை அதிகரித்து,

பித்தத்தை கட்டுப்படுத்தும். இதுதவிர, கிராமங்களில் உடல் ஆரோக்கியத்திற்காக ஊறுகாய் போட்டு களாக்காயை பயன்படுத்துகின்றனர். மந்தமான பசி, மசக்கை வாந்தி, அதிக பித்த எரிச்சல், பித்த மயக்கத்தால் அவதிப்படுபவர்களுக்கு களாக்காய் நல்லது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

இலைகளில் காரிசிக் அமிலம், காரினால் போன்றவை உள்ளன. கனிகளில் அமினோ அமிலங்கள், குளுக்கோஸ், பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.

ஊட்டசத்துமிக்க களாக்காய்

இலைகள், கனி மற்றும் பட்டை போன்றவை மருத்துவ பயன் உடையவை. இலைகளின் கசாயம், விட்டு விட்டு வரும் காய்ச்சலுக்கு மருந்தாகும். முதிராக்கனிகள் சத்து மிக்கவை. ஊட்டத்திற்கு உகந்தவை. வேர் வயிற்றுப் பூச்சிகளுக்கு எதிரானது. கசப்பானது. வயிற்றுப்போக்கு தூண்டுவது. சொறி சிரங்கு போக்கவும் பயன்படுகிறது.

கண்நோய் தீரும்

தூய்மையான களாப்பூவை நல்லெண்ணையில் இட்டு பூ மிதக்கும் வரை வெய்யிலில் வைத்திருந்து வடிகட்டி இரண்டொரு துளிகள்நாள் தோறும் கண்களில் விட்டுவரக் கண்களிலுள்ள வெண்படலம்,கரும்படலம், இரத்தப் படலம், சதைப்படலம் ஆகியவைதீரும்.

ஜீரணம் தரும் களாக்காய்

காய், பழம், ஆகியவை பசியை தூண்டும். காயுடன் இஞ்சி சேர்த்து ஊறுகாயாக்கி உணவுடன் உட் கொள்ள, பசியின்மை, சுவையின்மை, இரத்தபித்தம்,தணியாத தாகம், பித்தக்குமட்டல் ஆகியவைதீரும். களாப்பழத்தைஉணவுண்டபின் சாப்பிட உணவு விரைவில் செரிக்கும்.

களாப்பழம் உடல் சூட்டைத் தணிக்கும். சூடு காரணமாக தொண்டையில் வலி உள்ளவர்கள் இரண்டு வேளை மட்டும் களாப்பழத்தை உண்டால் தொண்டை வலி குணமாகும்.

கருப்பை அழுக்கு தீரும்

வேர் தாதுக்களின் வெப்பு தணிக்கும். சளியகற்றும்,மாத விலக்கைத் தூண்டும். வேரை உலர்த்திப் பொடித்துச் சமன் சர்கரைக் கலந்து தினமும் 3 கிராம் காலை மாலை சாப்பிட்டு வரப் பித்தம், சுவையின்மை, தாகம், அதிக வியர்வை தீரும்.

பிரசவமான பெண்களுக்கு 50 கிராம் வேரை நசுக்கி அரை லிட்டர் நீரில் இட்டு சுண்டக்காச்சி வடிகட்டி காலை,மாலை இருவேளை கொடுத்து வர மகப்பேற்றின் போது ஏற்படும் கருப்பை அழுக்குகள் வெளிப்படும்.

Medicinal benefits of Mango flower

முக்கனிகளில் ஒன்றாக போற்றப்படும் மாம்பழம் எண்ணற்ற மருத்துவப் பயன்களை கொண்டுள்ளது. வைட்டமின் சத்துக்களும், தாது உப்புகளும் கொண்டுள்ள மாம்பழத்தைப் போலவே மாம்பூக்களும் மருத்துவ குணம் கொண்டுள்ளன. பற்களுக்கும், ஈறுகளுக்கும் வலிமை தருவதோடு, வாய்ப்புண்களை குணமாக்குவதில் மாம்பூக்கள் மிகச்சிறந்த மருந்து பொருளாக விளங்குகின்றன. மாமரத்தில் கொத்து கொத்தாய் பூத்திருக்கும் மாம்பூக்களின் மருத்துவ குணங்களை தெரிந்து கொள்வோம்

தொண்டை வலி குணமடையும்

தொண்டையில் புண் ஏற்பட்டு எதையும் சாப்பிடக்கூட முடியாமல் வலி உயிரை எடுக்கும். அந்த நேரத்தில் மாமரத்தில் பூத்திருக்கும் மாம்பூக்களை பறித்து நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும். அதனை நன்கு நீரில் கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டிக்கொண்டு அதில் எலுமிச்சம் பழத்தின் சாறினை பிழிந்து விடவேண்டும். அந்த தண்ணீரை நன்றாக தொண்டைக்குள் இறங்குமாறு கொப்பளிக்க தொண்டை வலி குணமடையும்.

வாய்ப்புண்ணுக்கு மருந்தாகும்

உலர்ந்த மாம்பூக்களை நன்றாக பொடிசெய்து மோரில் கலந்து பருகவேண்டும். தினசரி மூன்று வேளை பருகிவர மூன்று நாட்களில் வாய்ப்புண், வயிற்றுப்புண் காணாமல் போய்விடும். புத்தம் புதிய மாம்பூக்களை தினமும் பறித்து வாயில் போட்டு மென்று வர பல்வலி குணமடையும். பற்கள், ஈறுகள் பலமடையும். மாம்பூ, மாந்தளிர், இரண்டையும் நீரில் போட்டு கொதிக்க வைத்து இளம் சூட்டில் வாய் கொப்பளித்து வர பல்வலிக்கு நிவாரணம் கிடைக்கும். மாம்பூவைச் சேகரித்து தணலில் போட்டு அதன் புகையைத் தலையில் படுமாறு செய்தால் தலைபாரம், ஜலதோஷம் நீங்கும்.

நீரிழிவு நோய்க்கு

மாம்பூ குறிப்பாக நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. தொடர்ந்து பல நாட்கள் பயன்படுத்தும்போது இதன் நல்ல பயனைக் கண்டுணரலாம். மாம்பூ, நாவல் பழக்கொட்டை, மாந்தளிர் மூன்றையும் சம அளவாக சேகரித்து வெயிலில் காயவைத்து இடித்து பத்திரப்படுத்தவும். தினம் அதிகாலை வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி அளவு வெந்நீரில் பருகவும். 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர நீரிழிவு நோய் குணமாகும் என்கின்றனர் மருத்துவர்கள். இடையே ரத்த சர்க்கரை அளவை பரிசோதித்து கொள்ளவேண்டும்

சீதபேதிக்கு அருமருந்து

மாம்பூ, மாதுளம் பூ, மாந்தளிர் வகைக்கு 5 கிராம் சேகரித்து நீர் விட்டு மைபோல் அரைத்து அதனை பசும்பாலில் கலந்து காலை, மாலை, 3 நாட்கள் சாப்பிடவேண்டும். இதனால் சீதபோதி நீங்கிவிடும்.

மாம்பூக்களைச் சேகரித்து உலர்த்தி ஒரு கைப்பிடியளவு எடுத்து இரண்டு பங்கு அளவு நீர் சேர்த்துக் காய்ச்சிக் கஷாயமாக்கி வடிகட்டி அரை டம்ளர் அளவு எருமைத் தயிரில் கலந்து காலையில் மட்டும் பருகி வந்தால் சீதபேதி நீங்கிவிடும். மாம்பூ, பச்சை கொத்தமல்லி, தோல்நீக்கிய இஞ்சி, கருவேப்பிலை சமஅளவு எடுத்து துவையல் செய்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட குமட்டல் நீங்கும்.

மூலநோய் குணமடையும்

மாம்பூ, சீரகம், இரண்டையும் சம அளவாக எடுத்து தனித்தனியே உலர்த்திப் பொடியாக்கி சலித்து எடுத்து இரண்டையும் ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும். இந்த தூளில் 2 சிட்டிகை எடுத்து சர்க்கரையுடன் சேர்த்துக் காலை, மாலை தினமும் சாப்பிடவும் மூலநோய் கட்டுப்படும். உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்றுப் போக்கு நேரத்திலும் இந்த மருந்தை உட்கொள்ளலாம்

கொசுத்தொல்லை நீங்க

உலர்ந்த மாம்பூவை நெருப்பிலிட்டு அதன் புகையை வீடு முழுவதும் காண்பிக்க கொசுத்தொல்லை ஒழியும்

Medicinal uses of Ajowan (Omath thiravam)

ஓமம் சித்த ஆயுர்வேத மருந்துகளில் அதிகம் இடம்பெறுகிறது. இது இந்தியா முழுவதும் பயிரிடப்படுகின்ற ஒரு செடி வகை ஆகும். இதை வாயில் போட்டால் சற்று காரமாக சுறுசுறுவென்று இருக்கும். நல்ல மணமாக இருக்கும். இது ரொட்டி மற்றும் கேக் தயாரித்தலில் பயன்படுத்தப்படுகிறது. மதுபான வகைகளை மணமூட்டப் கையாளப்படுகிறது. இதன் விதையே மருத்துவப் பயன் கொண்டது.

ஓமத்தில் அடங்கியுள்ள சத்துக்கள்

ஓமத்தில், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தையாமின், ரிபோபுளேவின் மற்றும் நியாசின் போன்றவை அடங்கியுள்ளன. ஓமத்தில் மூன்று வகைகள் உள்ளன. ஓமம், குரோசாணி ஓமம், அசம்தா ஓமம் ஆகும்.

மருத்துவ குணம் கொண்ட ஒமம்

இலைகளின் சாறு பூச்சிகளுக்கு எதிரான சக்தி கொண்டது. வேர்கள் ஜீரணச் சக்தி மற்றும் சிறுநீர்க் கழிப்பினைத் தூண்டும் திறன்படைத்தது. கனிகளில் இருந்து கார்வீன் மற்றும் கார்வால் ஆகிய பொருட்கள் எடுக்கப்படுகிறது. கனிகளில் இருந்து வடிக்கப்படும் நீர் வயிற்றுப் போக்கினைக் கட்டுப்படுத்துகிறது. ஜீரணத்தையும் வயிற்று உப்புசத்தையும் குணப்படுத்துகிறது. குழந்தைகளின் குடல்வலி, வயிற்றுக் கோளாறுகளுக்கு தக்க மருந்தாகும். சுவாசக் குழாய் தொடர்பான நோய்கள், குடிப்பழக்கத்திற்கான அடிமைத்தனம், மனநோய், போன்றவற்றுக்கு மருந்தாக உதவுகிறது.

வயிற்றுப் பொருமல் நீங்க

சீதளத்தால் உண்டாகும் சுரம், இருமல், செரிமானம் சரியாக இல்லாதது, வயிற்று பொருமல் பேதி, குடலிரைச்சல், பல் சம்மந்தமான நோய்கள், இரைப்பு நோய் (ஆஸ்துமா) ஆசனவாய் நோய்கள் இவைகளை ஓமம் போக்கும்.

இன்று கூட நம் கிராமங்களில் சிறு குழந்தைகளுக்கு வயிறு வலித்து அழும்போது ஓமத் திரவம் கொடுப்பார்கள். இந்த ஓமத் திரவம் ஓமத்தை காய்ச்சி எடுக்கப்படுவது. இது குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு மந்தம் தொடர்பான நோயை போக்கும் தன்மை கொண்டது.

பொதுவாக மந்தமானது சிறு குழந்தை களுக்குத்தான் ஏற்படும். மந்தம் இருந்தால் உடல் சோர்வுற்று, அஜீரணக் கோளாறு உண்டாகும். இத்தகைய மந்தத்தைப் போக்க ஓமம், சுக்கு, சித்திரமூல வேர்ப்பட்டை, இம்மூன்றும் சமபங்கு எடுத்து ஒன்றாக சேர்த்து பொடித்து அதனுடன் கடுக்காய் பொடி சேர்த்து அதில் சிறிதளவு எடுத்து மோரில் கலந்து கொடுத்தால் மந்தம் நீங்கும்.

ஓமத்திரவகம்

ஓமத்திராவகம் என்ற மாபெரும் மருந்து ஆதிகாலம் தொட்டு இன்றுவரை இருந்து வருகிறது. குழந்தைகளின் சர்வரோக நிவாரணியே ஓமத் திராவகம்தான். ஓமத்திராவகம் வீட்டில் இருந்தால் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை வயிறு உபாதையின்றி வாழலாம்.

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் மேற்கண்ட அனைத்தும் தீரும்.

உடல் பலம் பெற

உடல் சோர்வை போக்குவதில் ஓமம் சிறந்த மருந்தாகும். ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும்.

சிலருக்கு தொண்டையில் புகைச்சல் ஏற்பட்டு இருமல் வரும். இவர்கள் ஓமம், கடுக்காய் தோல், முக்கடுகு, சித்தரத்தை, அக்கிரகாரம், திப்பிலி வேர் இவைகளின் பொடியை சம அளவு எடுத்து அதனுடன் சரிபாதி பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை கொடுத்து வந்தால் தொண்டை புகைச்சல் மற்றும் இருமல் நீங்கும் .

பசியைத் தூண்ட

நல்ல தூக்கமும், நல்ல பசியும் தான் ஆரோக்கிய மனிதனுக்கு அடையாளம். இந்த பசியும், தூக்கமும் பறந்துபோனால் நோய்களின் கூடாரமாக உடல் மாறி, அதனால் மனமும் பாதிக்கப்படும்.

பசியைத் தூண்டி உண்ட உணவு எளிதில் சீரணமாகவும், வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகள் தீரவும், ஓமத்தை கஷாயமாக்கி அருந்திவருவது நல்லது.

ஓமத்தை பொடித்து உச்சந்தலையில் வைத்து தேய்த்தால் ஜலதோஷம் குறையும். ஓமப்பொடியை துணியில் கட்டி நுகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும். சுவாசக்கோளறுகள், இருமல் போன்ற நோய்களை சீர்படுத்த ஓமம் சிறந்த மருந்தாகும். மேலும் குடலிரைச்சல், இரைப்பு, பல்நோய் போன்றவற்றையும் ஓமம் குணப்படுத்துகிறது.

Salty Snacks can affect your Heart just in 30 Mins

அதிக உப்பு நிறைந்த பாக்கெட்டில் அடைத்து வைக்கப்பட்ட நொறுக்குத்தீனிகளை உட்கொள்வது இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு பாக்கெட் ஃப்ரெஞ்ச் ப்ரை சாப்பிடுபவர்களுக்கு சரியாக 30 நிமிடத்தில் அதற்கான பாதிப்பு தெரியவரும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உப்பு சத்து அதிகம் நிறைந்த உணவு வகைகள் எளிதில் ரத்தத்தில் கலப்பதன் மூலம் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதுவும் எண்ணெயில் பொறித்த உப்பு அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகள் இதயத்திற்கு ஆபத்தானது என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் உள்ள காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழிலாளர் ஆய்வு குழுமம் இந்த ஆய்வினை மேற்கொண்டது.

ரத்த நாளங்கள் பாதிப்பு

டிக்கின்சன் குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் 16 ஆரோக்கியமான நபர்கள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 8 நபர்களுக்கு குறைந்த அளவு உப்பு உபயோகப்படுத்தப்பட்ட தக்காளி சூப் 10 முறை வழங்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு உப்பு அதிகம் பயன்படுத்தப்பட்ட நொறுக்குத்தீனி கொடுக்கப்பட்டது. பின்னர் அவர்களின் ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு போன்றவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் அதிக உப்பு பயன்படுத்தப்பட்ட பின்னர் ரத்தமானது இதய அறைகளுக்குள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. ரத்த அழுத்தமும் அதிகரித்திருந்தது.

அதிக உப்பு ஆபத்து

இதே ஆய்வு மீதமுள்ள 8 நபர்களிடம் மேற்கொள்ளப்பட்டது. குறைந்த அளவு உப்பு பயன்படுத்தும் போது இருந்த ரத்த ஓட்டத்தின் அளவானது, அதிக அளவு உப்பு பயன்படுத்தியவுடன் இரண்டு மணி நேரத்தில் ரத்த அழுத்தம் அதிகரித்தது தெரியவந்தது. எனவே அதிக அளவு உப்பும், எண்ணெயில் பொறித்த உணவுகளில் உள்ள கொழுப்பும் ரத்த நாளங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி இதயத்தை பாதிக்கிறது என்றும் அவர்கள் தங்களின் ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர்.

மேலும், உப்பும், கொழுப்பும் அடைப்பினை ஏற்படுத்தி நைட்ரிக் ஆக்ஸைடை வெளியிடுகின்றன என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இதய பாதிப்பு உடனடியாக ஏற்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். எண்ணெயில் பொறித்து அதிகம் உப்பு சேர்க்கப்பட்ட ஃப்ரெஞ்ச் ப்ரைஸ், உள்ளிட்ட உணவுப் பண்டங்களில் அதிக அளவில் சாச்சுரேட்டட் ஃபேட்ஸ் உள்ளது. இவை ரத்த நாளங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

எனவே அதிக உப்பு சேர்க்கப்பட்ட எண்ணெயில் பொறித்த உணவுகளை உண்பது ஆயுளை குறைக்கும் என்றும் ஆய்வாளர்களும், மருத்துவர்களும் எச்சரித்துள்ளனர். இந்த ஆய்வு முடிவு அமெரிக்காவில் வெளிவரும் மருத்துவ இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது. நம் ஊரில் நிறைய பேர் ஊறுகாயும், அப்பளமும்தான் அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்கின்றனர். அவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

Tips to cure Baldness Naturally

அழகுக்கு ஆதாரமாக திகழ்பவை கூந்தல் என்பது பலரது எண்ணம். இன்றைய சூழலில் இளைய தலைமுறையினர் கூட தலைமுடி கொட்டி வழுக்கையினால் பாதிக்கப்படுகின்றனர். அதற்கு காரணம் கடையில் ரசாயனங்கள் அடங்கிய ஷாம்பு, சோப்பு உள்ளிட்டவைகளை கூந்தலுக்குப் போடுவதுதான் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். தலை முடி கொட்டிவிட்டாலே பாதி அழகு போய்விட்டது என்ற வருத்தத்திலேயே எண்ணற்றோர் மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுகின்றனர்.

உடலில் அதிக உஷ்ணம், மன அமைதியின்மை போன்றவற்றாலும் வழுக்கை ஏற்படுவது உண்டு. சிலருக்கு பரம்பரை காரணமாகவும் வழுக்கை ஏற்படுவது உண்டு. மேலும் இரும்புச் சத்து குறைபாடினால் ஏற்படும் ரத்த சோகை, தைராய்டு பிரச்சினை, பூஞ்சைத் தாக்குதல், மனஅழுத்தம், மருந்துப் பொருட்கள் போன்றவை தலையில் வழுக்கை விழ காரணங்களாக அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

வழுக்கை விழ ஆரம்பித்ததும் உடனேயே அதனை சரிப்படுத்து வதற்கான வழிகளைக் கையாள வேண்டும். இல்லாவிடில் அதனைக் குணப்படுத்துவது கடினம். எனவே இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

தேங்காய் எண்ணெய், வெந்தயம்

உடல் உஷ்ணத்தினால் வழுக்கை ஏற்படுவதை தவிர்க்க தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெயில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு அன்றாடம் உபயோகிக்கலாம். இதனால் முடி உதிர்வது தவிர்க்கப்படும்.

புழுவெட்டு சரியாகும்

வழுக்கை விழுவதற்கான காரணங்களில் புழுவெட்டும் ஒன்று. இதற்கு சோற்றுக் கற்றாழையை எடுத்து அதனுள் இருக்கும் வழு வழுப்பான 'ஜெல்' போன்ற திரவத்தை எடுத்து தலையில் தேய்த்து வந்தால் வழுக்கை விழுவதை தடுக்கலாம்.

சிறிய வெங்காயத்தை அரைத்து மயிர்க்கால்களில் நன்கு அழுத்தி தடவி ஊற வைத்து தலையை அலசினால் புழுவெட்டினால் ஏற்படும் வழுக்கைக்கு நல்ல பலன் கிடைக் கும். அதிமதுரத்தை எருமைப்பாலில் அரைத்து வாரத்திற்கு மூன்று முறை தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.

முடி வளர்க்கும் மருந்துகள்

பூண்டை உலர்த்திப் பொடி செய்து அதைத் தேனில் கலந்து வழுக்கையின் மீது பூசி வந் தால் முடி வளரும். இலந்தை இலையை அரைத்து அதன் சாற்றை வழுக்கை உள்ள இடத்தில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அரளிச் செடியினை கீறி பால் எடுத்து தடவி வர புழுவெட்டினால் ஏற்படும் வழுக்கைக்கு நல்ல பயன் கிட்டும்.

மன அழுத்தம் தவிர்க்கவும்

மன அழுத்தமானது முடி உதிர காரணமாக கருதப்படுகிறது. எனவே அமைதியான சூழலில் முடி அமர்ந்து தியானம் மேற்கொள்வது மன அழுத்தம் போக்கும். இதனால் முடி உதிர்வதும் தவிர்க்கப்படும். முடி கொட்டத் தொடங்கினாலே ரசாயன பொருட்களை தவிர்க்கவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். இயற்கை மூலிகைப் பொருட்களையும், உடலுக்கு குளுமை தரும் பொருட்களையும் பயன்படுத்தவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

Monday 23 January 2012

Thanks for Support

Thanks for Support

Welcome

Dear Friends,

I have created this New BLOG due to my old Blog Name was tooooo big and not searchable. In order to reach all, I have created this New Blog and expecting your Support as usual. Thanks

For your reference my old blog : http://saravanakumarkandasamy.blogspot.com/

Tips to Lose Weight Naturally

மாறிவரும் உணவுப்பழக்கத்தாலும், உடல் உழைப்பு குறைவான பணிச் சூழல் காரணமாகவும் உடல் எடை அதிகரிப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. குண்டான உடலை குறைக்க இன்றைக்கு பல்வேறு ஆலோசனைகள் தெரிவிக்கப்படாலும், நம்முடைய உடல் மீது அக்கறை கொண்டு அதை குறைக்க வேண்டும் என்று மனதார நினைத்தால் மட்டுமே உடல் எடையை குறைக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள். பணம் செலவில்லாமல் இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்க அழகியல் வல்லுநர்கள் தரும் ஆலோசனைகளை தெரிந்து கொள்ளலாம்.

மனசால நினைக்கனும்

நம்முடைய உடல் எடையை குறைக்கவேண்டுமெனில் உளரீதியாக நினைக்க வேண்டும் என்கின்றனர் வல்லுநர்கள். அப்பொழுதுதான் நாவை கட்டுப்படுத்தமுடியும். அதை விடுத்து கண்ட நேரத்தில் கண்டதையும் சாப்பிட்டுவிட்டு பின்னர் உடல் எடையை குறைக்க முயற்சி எடுப்பதில் எந்த பலனும் இல்லை என்கின்றனர் நிபுணர்கள். எனவே உடல் எடை குறைப்பு பயிற்சியை முதலில் நம்மிடம் இருந்தே தொடங்கவேண்டும்.

நமக்கான உணவு எது?

நம்முடைய உடலுக்கு தகுந்த உணவு எது என்பதை நாம் தேர்ந்தெடுத்து உண்ணவேண்டும். ருசிக்காக கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்பதை விடுத்து சத்தான உணவுகளை, குறைந்த கலோரி உள்ள உணவுகளை உண்ணவேண்டும் அப்பொழுதுதான் உடல் எடை எளிதாக குறையும். பாஸ்ட் புட் உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும் என்பது நிபுணர்களின் அறிவுரை.

நார்ச்சத்துள்ள உணவுகள்

உடல் எடை குறைய முதலில் கவனம் செலுத்தவேண்டியது உணவு. அதுவும் சத்தான ராகி, கோதுமை, ஓட்ஸ் உள்ளிட்ட நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணவேண்டும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். இது உடலுக்கு தேவையான சத்துக்களை நீண்ட நேரம் எடுத்துக்கொள்வது பசி தூண்டும் உணர்வையும் கட்டுப்படுத்துகிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும்.

தண்ணீர் குடிங்க

உடல் எடையை குறைப்பதில் தண்ணீரின் பங்கு மிக முக்கியமானது. எனவே உணவுக்கு முன்னரே தண்ணீரை குடித்தால் பசி கட்டுப்படும் உணவும் குறைவாக எடுக்கும். இதனால் உடலுக்கு குறைந்த அளவு கலோரியே கிடைக்கும். தண்ணீரானது உடல் எடையை கட்டுக்குள் வைக்கும்.

மெதுவா சாப்பிடுங்க

உணவை நன்றாக அரைத்து மென்று உண்பது உடலுக்கு ஏற்றது. ஏனெனில் ஜீரணத்திற்குத் தேவையான என்சைம்கள் நாவில் இருந்துதான் கிடைக்கின்றன. எனவே சத்தான உணவுகளை அள்ளி விழுங்காமல் நன்றாக மென்று அரைத்து உண்பது அதிக அளவு உணவு உட்கொள்வதை தடுக்கும். உடல் எடையும் கட்டுப்படும்.

நொறுக்குத் தீனிக்கு பை

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று முடிவு செய்த பின்னர் நொறுக்குத் தீனிக்கு பை சொல்வது அவசியட். எனவே குக்கீஸ், சாக்லேட், சிப்ஸ் போன்றவைகளை தவிர்த்து சுகர் ஃப்ரி சுயிங்கம் மெல்லுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

குறைந்த உப்பு, சர்க்கரைக்கு நோ

தினமும் உபயோகிக்கும் சர்க்கரையின் அளவை குறைத்துக்கொள்வது உடலுக்கு நல்லது என்கின்றனர் நிபுணர்கள். ஏனெனில் நாம் எடுத்துக்கொள்ளும் சர்க்கரை உடலின் கலோரியை அதிகரிக்கிறதாம். ஜூஸ், மில்க்ஷேக் போன்றவற்றிர்க்கு சர்க்கரை உபயோகிக்காமல் பருகுவது உடல் எடையை குறைக்கும் என்பது நிபுணர்களின் அறிவுரை. அதேபோல் உப்பின் அளவையும் குறைத்தே உபயோகிக்க வேண்டும் என்பது அவர்களின் ஆலோசனையாகும்.

உடற்பயிற்சி தேவை

உடற்பயிற்சி என்றாலே ஜிம் போய்தான் செய்யவேண்டும் என்பதில்லை. வீட்டிலேயே எளிமையான எக்ஸர்சைஸ்களை செய்யலாம். இதனால் உடலில் தேங்கும் தேவையற்ற கலோரிகள் எரிக்கப்படுவதோடு, உடல் நலமும் பாதுகாக்கப்படும். உடல் பருமனால் இருதயம் தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன. அவற்றை தவிர்க்க நடந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு வாகனங்களை பயன்படுத்தாமல் நடந்தே செல்லலாம். அதனால் கலோரியும் எரிக்கப்படும், உடலும் சிக் என்று ஆகும்.

புரதம் அவசியம்

உடல் எடையை குறைக்கிறேன் பேர்வழி என்று சத்தான உணவுகளை தவிர்க்க வேண்டாம். அது உடலின் பலத்தை குறைத்துவிடும். உடலின் திசுக்களுக்கு தேவையான புரதச்சத்து நிறைந்த உணவுகளை அவசியமான அளவில் உட்கொள்ள வேண்டும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். முட்டையின் வெள்ளைக்கரு தினமும் எடுத்துக்கொள்ளலாம். மஞ்சள் கருவை தவிர்த்து விடலாம். ஏனெனில் அதில் அதிக அளவு கொழுப்பு சத்து உள்ளது.

Health Benefits of Making Love

தம்பதியரிடையே ஏற்படும் நெருக்கமான அன்னியோன்யமான செயல்களால் மன அழுத்தம் குறைவதோடு உயர்ரத்த அழுத்த நோய் குணமடைவதாக உளவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தம்பதியரிடையே ஏற்படும் சர்வரோக நிவாரணியாக உள்ளது என்கின்றனர் ஆய்வாளர்கள். ஜெர்மனியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தம்பதியர் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். ஒரு வார காலத்திற்கு தம்பதியர் ஒருவரை ஒருவர் கைகளை இறுகப்பற்றுவது முதல் உறவு வரையிலான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் உடல் ரீதியான தொடர்பால், கார்டிசோல் எனப்படும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஹார்மோன் சுரப்பது குறைவாக இருப்பது தெரிய வந்தது.

நோய் எதிர்ப்பு சக்தி

உறவின் மூலம் டிஹெஇஏ எனப்படும் (Dehydroepiandrosterone) ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறதாம். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறதாம். மேலும் பாதிப்படைந்த தசை செல்கள் சரியாவதோடு, சருமத்திற்கும் பளபளப்பு ஏற்படுகிறது.

ஆயுள் அதிகரிக்கும்

உறவின் போது ஏற்படும் ஆர்கஸம் வாழ்வின் ஆயுளை நீடிக்கச் செய்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். தம்பதியரின் நெருக்கம், உடலில் புத்துணர்ச்சியை ஏற்படுத்துதோடு, கண்ணின் மணியை விரியச்செய்கிறது. இதனால் பார்வையை விரிவடைகிறது. நீரிழிவு போன்ற நோய்களைக் கூட தாம்பத்ய உறவு குணப்படுத்துகிறதாம். புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்துவதோடு அறவே குணப்படுத்தவும் செய்கிறதாம். மார்பகப் புற்றுநோயை குணப்படுத்துவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

மூளைக்கு புத்துணர்ச்சி

உறவின் போது ரத்த ஓட்டம் அதிகரித்து மூளைக்கு ரத்த ஓட்டம் சீராக கிடைக்கச் செய்கிறது. இதன் மூலம் மூளை புத்துணர்ச்சியடைவதோடு உடல் உறுப்புகள் சுறுசுறுப்படைகின்றன. உடலில் கழிவுகள் எளிதில் வெளியேற்றப்படுவதால் உடலும், உள்ளமும் லேசான உணர்வை பெறுகின்றன.

இளமை தரும் மருந்து

30 நிமிட உறவானது உடலில் 85 கலோரிகளை எரித்து உடலை கட்டுகோப்பாக வைக்கின்றதாம். எனவே செக்ஸ் மிகச்சிறந்த எக்ஸர்சைஸ் என்கின்றனர் ஆய்வாளர்கள். இது உடல் ரீதியான பிரச்சினைகளை போக்குவதோடு உள்ளரீதியான இறுக்கத்தையும் அகற்றுகிறது என்பது உளவியலாளர்களின் கருத்து.

வலிநிவாரணி

தாம்பத்யமானது வலி நிவாரணியாக திகழ்கிறது. உறவின் மூலம் ஹார்மோன் சுரப்பு அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறதாம். இது தலைவலி, தசைவலி போன்றவைகளையும் நீக்கும் வலிநிவாரணியாகவும் விளங்குகிறது.

ரத்த அழுத்தம் கட்டுப்படும்
தாம்பத்ய உறவின் மிக முக்கியமான நன்மையாக மன அழுத்தம் குறைவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்து நாட்டில் நடைபெற்ற ஆய்வில் மன அழுத்தமான சூழலில் இருந்த தம்பதியர் உறவிற்குப்பின் தங்களின் மன அழுத்தம் குறைந்த தாக தெரிவித்தனர். அவர்களின் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது கண்டறியப்பட்டது. எனவே காதலுக்கும், மன அழுத்தத்திற்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது. நெருக்கமான உறவு கொள்வதன் மூலம் , மன அமைதி ஏற்படுவதோடு ஆரோக்கியமான உடல்நலம் ஏற்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Medicinal Benefits of Taro (Senai kilangu)

இன்றைய உணவுப்பழக்கத்தினால் எண்ணற்றோர் இதயநோய், நீரிழிவு, புற்றுநோய் போன்ற வற்றினாலும், வயிறு தொடர்புடைய நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இயற்கையே எண்ணற்ற மருந்துகளை உற்பத்தி செய்து அளிக்கிறது.

காட்டுப்பகுதிகளில் செழித்து வளர்ந்திருக்கும் மெருகன் கிழங்கு சமைத்து சாப்பிடுவதற்கு ஏற்றது அல்ல என்றாலும் சித்தமருத்துவதில் அதிக அளவு பயன்படுகிறது. இது உடல்சூடு, வயிற்றுவலி, மூலம் உள்ளிட்ட எண்ணற்ற நோய்களை போக்க வல்லது. இதனை சூரணமாகவோ, லேகியமாகவோ, தயாரித்து சாப்பிடலாம். இதற்கு உலக்கை, முசலம், கந்த புட்வி, என்ற பெயர்களும் உண்டு. இதனை வெருகன் கிழங்கு என்று அழைப்பர்.

உடல்சூடு தணிக்கும்

வெருகன் கிழங்கை சுத்தம் செய்து துண்டுகளாக்கி, நன்கு காயவைத்து இடித்து பொடியாக்கிச் சலித்து சூரணமாகத் தயாரிக்கலாம். அதிகமாக உடல் சூடு உள்ளவர்கள் இந்த தூளை பசும்பாலில் கலந்து காய்ச்சி சிறிது கற்கண்டையும் சேர்த்து சாப்பிடலாம்.

மூலநோய்க்கு மருந்து

வெருகன் கிழங்கு தூளை சிறிதளவு வாயில் போட்டு வெந்நீர் அருந்த வேண்டும். இதுஅனைத்து வகை மூல நோய்களையும் குணமாக்க வல்லது. இது மூலநோய் மட்டுமின்றி மேக நோய்களையும் குணமாக்கும். இருமல் போக்கும்

ஈளை இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் இஞ்சிச் சாற்றுடன் இந்த சூரணத்தைக் கலந்து சாப்பிட்டால் தொல்லை நீங்கும்.

வயிறு நோய்கள் தீரும்

வயிற்றுவலி, வயிற்று உப்பிசம், பொறுமல்,அசீரணம்,வயிற்றுப்போக்கு, போன்ற நோய்களுக்கு இந்தச் சூரணத்துடன் சுக்குத்தூள் மற்றும் சர்க்கரைக் கலந்து சாப்பிட வயிறு தொடர்புடைய நோய்கள் தீரும்.

இதயநோய் தீரும்

மெருகன் கிழங்கில் உள்ள சோடியம் உடலில் உள்ள கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க வல்லது. ஹைபர் டென்சன் எனப்படும் உயர் ரத்த அழுத்த நோயை குணமாக்கும். இதில் உயிர்ச்சத்துக்கள் சி,ஈ, ஆகியவை காணப்படுகின்றன. இதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடென்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். இது இதயநோயை தடுக்கும்.

இதனை சூரணமாக மட்டுமின்றி லேகியமாகவும் சாப்பிடலாம். இம்மருந்து சாப்பிடும்போது அதிக காரம், புளி சேர்க்கக் கூடாது. மிளகு எலுமிச்சைச் சேர்க்கலாம். எண்ணெயும் சேர்க்கக் கூடாது. நெய் சேர்த்துக் கொள்ளலாம்.

Medicinal Benefits of illuppai Poo

Medicinal Benefits of Pumpkin

அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் காய்கறிகளில் பூசணிக்கு முக்கிய இடமுண்டு. சாம்பார், பச்சடி, கூட்டு என பல விதமாக சமைக்கப்படும் பூசணிக்காய் இனிப்பு நிறைந்தது. இதில் நீர்ச்சத்தும், உயிர்ச்சத்துக்களும், தாது உப்புக்களும் அதிகம் காணப்படுகின்றன. உடல் சூட்டை தணிக்கும் இக்காய் சிறுநீர் வியாதிகளை தீர்க்கும் என்று சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே மெக்ஸிகோ நாட்டில் பூசணி விதையில் இருந்து மருந்தாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

பூசணிக்காயில் மஞ்சள் நிறமுள்ள கல்யாண பூசணியும், வெண்மை நிறமுள்ள பூசணியும் காணப்படுகிறது. பூசணிக்காயின் சதைப் பகுதியும், விதைகளும் மருத்துவத்தில் பயன்படுகின்றன.

பெண்களுக்கு ஏற்ற வெண் பூசணி

வெண்பூசணிக்காயின் சாறு 30 மில்லியளவு எடுத்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இதய பலவீனம் நீங்கும். ரத்தசுத்தியாகும். பெண்களின் வெள்ளைப் போக்கு நீக்கவும் வெண்பூசணி பயன்படுத்தப்படுகிறது.

நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது. ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் உதவும்

கொடிய நோய்களுக்கு மருந்து

வெண்பூசணி நெய் அல்லது கூழ்பாண்ட கிருதம் என்ற இந்தப் பூசணி நெய்யைச் சாப்பிட்டு வந்தால் சூலை நோய்கள் நிவர்த்தியாகும். தோல் நோய்கள், பெண்குறிப் புற்று முதலியன நீங்கும். உடல் சூடு, சூட்டுடன் எரிச்சல், நீர்க்கட்டு, நீர்க்குத்து முதலியன ஆண்களுக்கும், பெண்களுக்கும் நிவர்த்தியாகும். அஸ்திவெட்டை, கிராணிக்கழிச்சல், எலும்புருக்கி முதலிய கொடிய நோய்கள் நிவர்த்தியாகும்.

உடல் வலி நீக்கும்

ஆண்டுக்கணக்கில் உடல் வலியால் அவதிப்படுபவர்கள் பூசணிக்காயை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல்வலி தீரும். புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்கு சிகிச்சையளிக்கும்போது தினசரி பூசணிக்காய் சேர்த்து சமைத்த உணவைக் கொடுக்க புத்தி சுவாதீனம் படிப்படியாக மாறி நல்ல நிலைமைக்குத் திரும்பும்.

பூசணிக்காயின் சதைப் பகுதியை எடுத்து வேகவைத்து சிறிது கற்கண்டு சேர்த்து தினம் மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பாதிப்பால் ஏற்பட்டு வரும் மஞ்சள் காமாலை நோய் குணமாகும். தடையில்லாமல் சிறுநீர் வெளியேறும்.

எழில் கூட்டும் பூசணி

பூசணிக்காயைச் சாறு எடுத்து 30 மில்லி முதல் 60 மில்லி வரை வைத்துக்கொண்டு இதில் தேன் ஒரு தேக்கரண்டி சேர்த்து தினசரி கொடுத்து வந்தால், ஒல்லியான சிறுவர்களுக்கு சதைப்பிடிப்பு ஏற்படும். அழகான தோற்றத்திற்கும், எடை அதிகரிப்பதற்கும் நோய் எதிர்ப்புச் சக்தி கூடி ஆரோக்கியமான உடல் தேறவும் நல்ல பலனைக் கொடுக்கும்.

பூசணிக்காய் சாறு 30 மில்லியளவு சர்க்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வர வலிப்பு நோயின் தீவிரம் குறைந்துவிடும். நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண் மேகவெட்டை, பிரமேக நோய் ஆகியவை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும்.

தாது விருத்தி தரும்

பூசணிக்காயின் விதைகளைச் சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேக புஷ்டி உண்டாகும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தி மிகுதியாக உண்டாகும். உடல் சூட்டைத் தணிக்கும். பித்த நோயைக் கண்டிக்கும். பித்த வாந்தியை நிறுத்தும்.

பூசணி விதையை பொடி செய்து வைத்துக்கொண்டு வேளைக்கு 10 கிராம் அளவில் தினசரி இருவேளை சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா குணமாகும். சுவாச உறுப்புக்கள் பலப்படும். இருதய பலவீனம் நீங்கி பலப்படும். நல்ல பசியுண்டாகும். மலச்சிக்கல் நீங்கும்.

சிறுநீரக நோய்கள்

சிறுநீரகச் செயல்பாடு குறைந்தவர்களுக்கு பூசணிக்காயில் 25 கிராம் அளவிற்கு வெட்டி எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்து வடிகட்டி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகச் செயல்பாடு சீராக அமையும்.

சிறுநீரகம் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் பூசணிக்காய்ச் சாறு 120 மில்லியில் ஒரு தேக்கரண்டி சர்க்கரையும், இரண்டு தேக்கரண்டி தேனும் கலந்து சாப்பிட்டு வந்தால், நோய்கள் முழுமையாக நிவர்த்தியாகும்.

பூசணிக்காய் லேகியம்

பூசணிக்காயில் மருத்துவக் குணங்கள் அதிகம் இருப்பதால் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் லேகியமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த லேகியத்தை தினசரி சாப்பிட்டு வர ரத்தபித்தம், சயம், இளைப்பு, பலவீனம், இதய நோய், இருமல் உள்ளவர்கள் நல்ல நோய் நிவாரணம் கிடைப்பதைத் தெரிந்துகொள்ள முடியும். பூசணி லேகியம் காமாலை நோய், இரத்த சோகை, எலும்புருக்கி நோய், அஸ்தி வெட்டை, பிரமேகத்தால் ஏற்பட்ட வெள்ளை நோய் தீரும். உடல் வலிமை பெறும். தாது விருத்தி ஏற்படும். உடல் பொலிவுறும்.

யார் சாப்பிடக்கூடாது

பூசாணிக்காயை அதிகம் சாப்பிட்டால் பித்தத்தை கிளறி நெஞ்செறிச்சலை ஏற்படுத்தும். வயிற்றில் புளிப்பு ஏற்பட்டு வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு ஏற்படும். மருத்துவ சிகிச்சை பெறுபவர்கள் இக்காயை சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்பட்டு விடும்.

Medicinal Benefits of Poovarasam Poo (Portia tree flower)

இதய வடிவ இலைகளின் நடுவே மஞ்சள் வர்ணத்தில் பூத்துக்குலுங்கும் பூவரசம்பூக்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. இந்த மலர்கள் உண்பதற்கு உகந்தவை என்று சித்தமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பூச்சிக்கடி மற்றும் விஷ வண்டுகடிகளுக்கு மருந்தாக இந்த பூக்களை சித்த மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

சொறி, சிரங்கு

சொறி சிரங்கினால் அவதிப் படுபவர்கள் பூவரசம் பூவை அரைத்து அவற்றின்மீது பூசிவர தோல் மென்மையாகும், சொறி சிரங்கு குணமடையும்.

விஷக்கடி குணமாகும்

பூச்சிக்கடி, வண்டுக்கடி, காணாக்கடி போன்ற பூச்சிகள் கடித்து அதனால் தோலில் ஊறல் நோய் ஏற்படும். அவர்கள் பூவரசம் பூ 25 கிராம் எடுத்து நசுக்கி, பழகிய மண்சட்டியில் போட்டு, 200 மில்லிலிட்டர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். நீர் பாதியாக சுண்டும் போது இறக்கி வடிகட்டி காலை மாலை வேளைக்கு இரண்டு அவுன்ஸ் குடிக்கவேண்டும். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தினமும் இதுபோல புதிதாக கஷாயம் தயாரித்து குடித்து வரவேண்டும். பின்னர் மூன்று நாட்கள் இடைவெளி விட்டு, மறுபடியில் மூன்றுநாட்கள் சாப்பிடவேண்டும். இதனால் விஷக்கடி மூலம் ஏற்பட்ட ஊறல், தடிப்பு, அரிப்பு, மயக்கம், சோம்பல் போன்றவை நீங்கும். இந்த கஷாயம் உட்கொள்ளும் போது எண்ணெய், கடுகு தாளிக்காமல் சாப்பிடவேண்டும். மீன், கருவாடு சேர்க்கக் கூடாது.

மூட்டு வீக்கம்

வயதான காலத்தில் மூட்டுப் பகுதியில் நீர் கோர்த்து வீக்கத்தால் அவதிப்படுபவர்கள், பூவரசம் பூவுடன் சமஅளவு, காய் பட்டை, எடுத்து அரைத்து நல்ல எண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி,மூட்டு வீக்கங்கள் மேல் பூசிவர வீக்கம் குணமடையும்

Medicinal Benefits of Spinach

பசுமையான கீரைகளில் உயிர்சத்துக்கள், தாதுஉப்புகள், கால்சியம், இரும்புச்சத்துக்கள் அடங்கியுள்ளன. மாமிச உணவுகளை உண்ணும் போது கிடைக்கும் சக்தி கீரை உட்கொள்பவர்களுக்கும் கிடைக்கிறது. கீரையானது உடல் சூட்டை தணிக்கு உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. அதிகம் கேள்விப்பட்டிராத சில வகை கீரைகளில் காணப்படும் மருத்துவ குணங்களை காணலாம்.

பண்ணைக்கீரை

பண்ணைக்கீரையை பருப்புடன் சேர்ந்து கடைந்து சாப்பிட உடல் பலம் பெரும். இது உடல் சூட்டை தணித்து சமநிலையில் வைக்கும். சொறி, சிரங்கு இரணம் இவைகளை ஆற்றும்.

பாற்சொறிக்கீரை

பாற்சொறிக்கீரையுடன் துவரம் பருப்பு, பாசிப்பருப்பு சேர்ந்து கடைந்து சாப்பிடுவார்கள். சீதபேதியுடன் கஷ்டப்படுபவர்கள் இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர சீதபேதி குணமாகும். குடலில் ஏற்பட்டுள்ள புண்ணை ஆற்றும். உடலில் தேஜஸ் உண்டாகும்.

வள்ளைக்கீரை

கொடி இனத்தைச் சேர்ந்த இந்த கீரை பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் நல்லது. இதனை பருப்புடன் சேர்த்து சாப்பிட மகப்பேறு தாய்மார்களுக்கு பால் சுரக்கும். உடலில் புதிய ரத்தத்தை உண்டாக்கும். உடல் பலம் பெரும். நீரிழிவு என்னும் சர்க்கரை வியாதியுள்ளவர்கள் தொடர்ந்து இதனை சாப்பிட்டு வர சர்க்கரையை குறைத்துவிடும்.

சேம்புக்கீரை

சேம்பங்கிழங்கின் இலையான இந்த கீரையை சமைத்து உண்டால் மூலநோய் குணமாகும். கூட்டு, பொரியல், துவட்டல் செய்து சாப்பிட்டால் அனைத்து வகை மூல வியாதிகளும் குணமடையும்.

Medicinal Benefits of illuppai Poo

ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூக்கள் என்பார்கள். இலுப்பை பூக்கள் அந்த அளவிற்கு இனிப்புத்தன்மை கொண்டவை. இலுப்பைப்பூ பச்சையாகச் சாப்பிட ருசியாக இருக்கும். இலுப்பைப்பூவைக் காயவைத்து பலவகையான பலகாரங்களைச் செய்யலாம். இலுப்பை எண்ணெய் ஏழைகளின் நெய் எணப்படுகிறது. இது சமையலில் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்தபூக்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளன.

ரத்த விருத்தி மருந்து

இலுப்பைப்பூக்கள் மனிதருக்கும், கால்நடைகளுக்கும், ரத்த விருத்தி மருந்தாகப் பயன்படுகிறது. இலுப்பைப்பூக்களை குடிநீரில் போட்டு காய்ச்சி குடிக்க இருமல், காய்ச்சல், நீர் வேட்கைப் போகும்.

மூச்சிரைப்பு நீங்கும்

இரைப்பு ஏற்படும் சமயங்களில் இலுப்பைப் பூவை பால்விட்டு அரைத்து பாலில் கலக்கிக் கொடுக்க இரைப்பு நீங்கும். காய்ந்த பூவை வதக்கி வீக்கங்களுக்கு ஒத்தடமிட அந்த இடத்தில் வியர்வை தோன்றி வீக்கம் குறையும். வயதானவர்களுக்கு கால்களில் அரிப்பும், புண்ணும் தோன்றலாம். அவர்கள் இலுப்பைப்பூ கசாயத்தை புண்களில் தடவிவர அரிப்பு நீங்கும். புண்கள் ஆறும்.

Medicinal Benefits of Tutthi flower

பட்டாம்பூச்சிகள் பறந்து அமரும் துத்திப்பூக்கள் காணும் இடமெங்கும் கண்ணுக்கு இதமாய் மலர்ந்து சிரிக்கும். குப்பை மேடுகள், சாலையோரங்கள் என பல இடங்களிலும் வளர்ந்துள்ள துத்திச் செடியில் உள்ள பூக்கள் எண்ணற்ற மருத்துவ குணமுடையவை. ரத்தம் தொடர்புடைய நோய்களை போக்கி நெஞ்சுக்கு இதம் தரும்.

ஆண்மை பெருகும்

துத்திப்பூக்களைச் சேகரித்து துவரம்பருப்புடன் கூட்டாகச் சமைத்து கடைந்து உணவுடன் சாப்பிட்டு வந்தால் ரத்தவாந்தி, ரத்தபேதி, சளியில் ரத்தம், சிறுநீரில் ரத்தம் எதுவாயினும் குணமாகும். ஆண்மை பெருகும்.

இரைப்பு நோய்

துத்திப்பூக்களைச் சேகரித்து, காம்பு நீக்கி நிழலில் காயவைத்து சூரணம் தயார் செய்து சமஅளவு சர்க்கரை கலந்து அரை தேக்கரண்டியளவு சூரணத்தை காலை, மாலை பாலில் பருக இரைப்பு மறையும். காசம் என்ற எலும்புருக்கி நோய் நீங்கும்.

மூலநோய் கட்டுப்படும்

ஒரு கைப்பிடியளவு துத்திப்பூவை பறித்து பசும்பாலில் போட்டு சிறிதளவு சர்க்கரை சேர்த்து ஒரு வாரம் பருகி வர மூலநோய் கட்டுப்படும்.

ரத்தவாத்தி நீங்கும்

அரைக் கைப்பிடியளவு துத்திப் பூக்களை சேகரித்து ஒரு சட்டியில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி 4 மணிக்கொரு முறை அரை டம்ளர் வீதம் பருகி வந்தால் ரத்த வாந்தி நிற்கும்.

Household Remedies and its Uses in Emergency

அடுப்பங்கரையில் உள்ள அஞ்சரைப்பெட்டியில் உள்ள பொருட்கள் சமையலுக்கு மட்டுமல்ல உடல் நலம் காக்கும் உண்ணத மருந்தாகவும் பயன்படுகிறது. கடுகு,சீரகம், மிளகு, வெந்தயம், மஞ்சள் என வகை வகையாய் இடம் பெற்றிருக்கும் அஞ்சரைப்பெட்டியை அருமருந்து பெட்டி என்றே கூறலாம்.

மஞ்சள்

நோய் எதிர்ப்பு குணம் மஞ்சளில் அதிகம் உண்டு. வயிற்றுப் புண்களை குணமாக்கும். உடலில் அடிபட்ட காயங்களில் சிறிதளவு மஞ்சளை எடுத்து பூசினால் ரணம் குறையும். சளியை போக்கும்

கடுகு

கடுகு சிறுத்தாலும் காரம் போகது என்பார்கள். அந்தளவிற்கு நோய் தீர்க்கும் சக்தி கடுகுக்கு உண்டு. அனைத்துவகை உணவுப் பொருளும் சமைத்து முடித்தவுடன் சுவைக்காக தாளித்து கொட்டப்படும் கடுகு விஷபேதி, வயிற்றுவலி,ஜன்னி போன்ற நோய்களுக்கு ஏற்றது.

வெந்தயம்

உடல் சூட்டை குறைக்கும். நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாகும்

சீரகம்

உடலின் உள்ளே உள்ள நச்சுக்களை அகற்றுவதில் சீரகத்திற்கு ஈடு இணை இல்லை. இது அஜீரணம்,வயிற்றுவலி, பித்தமயக்கம் முதலிய நோய்களை போக்கும்.

மிளகு

திரிகடுகத்தில் ஒன்றாகிய மிளகு வயிற்றுக் கோளாறுகளை சீராக்கி பசியை அதிகரிக்கச்செய்யும். இது தொண்டை கமறலுக்கும், மூலரோகங்களுக்கும் ஏற்றது.

பெருங்காயம்

சாம்பார், ரசம் முதலியவற்றில் வாசனைக்காக பயன்படுத்தப்படும் பெருங்காயம் வயிறு தொடர்பான நோய்களைப் போக்கும். வயிற்றுப்பொருமல், வயிற்றுவலி போன்ற நோய்களுக்கு ஏற்றது. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் சாதாரணமாக இவற்றை கொடுக்கலாம்.

லவங்கம், கிராம்பு

அசைவ சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் பட்டை, கிராம்பு போன்றவை அஜீரணத்தைப் போக்கும், வாந்தியை நிறுத்தும்.

Medicinal Benefits of Aavaaram Poo (Tanners Cassia)

தரிசு நிலங்களிலும் வயல் வரப்புகளிலும் வளர்ந்து பொன் மஞ்சள் நிறத்தில் பூத்துக்குலுங்கும் ஆவாரையின் அழகில் மயங்காத கவிஞர்களே இல்லை. மிக்க்கொடிய வறட்சியையும் தாங்கி தன்னிச்சையாக வளரக்கூடியது. ஆவரையின் பூ,காய்,பட்டை,வேர்,இலை ஆகிய ஐந்து உறுப்புகளும் சேர்ந்து ஆவரைப் பஞ்சாங்கம் என்று அழைக்கப்படுகிறது.

சகல நோய் நிவாரணி

ஆவாரைப்பஞ்சாங்கத்தை தினம் ஒரு மேஜைக்கரண்டியளவு எடுத்து வாயில் போட்டு வெந்நீர் பருகிவர சர்க்கரை நோய் உடல் சோர்வு, நாவறட்சி, அடங்காத தாகம், தூக்கம் இன்மை உடல் இளைத்தல்,காந்தல் நீங்கும்.

துர்நாற்றம் நீக்கும்

'ஆவாரைப் பூத்திருக்க சாவரைக் கண்டதுண்டோ?" என்ற பழமொழியில் இருந்து ஆவரம்பூவின் மருத்துவ குணங்களை அறியலாம். சிலருக்கு உடலில் கற்றாழை நாற்றம் வீசும். அவர்கள் ஆவரம் பூவை உணவில் சேர்த்துக்கொள்ள உடல் கற்றாழை நாற்றம் நீங்கும். உடல் பொன்நிறமாகும். ஆவாரம் பூவுடன் ஊறவைத்த பாசிப்பயறு சேர்த்து அரைத்து குளித்தால் நமைச்சல் துர்நாற்றம் நீங்கும்

உடல்சூடு குறைய

உடல் சூட்டினால் அவதிப்படுபவர்கள் ஆவாரம் பூ கஷாயம் தவறாமல் குடித்து வர சூடு தணிந்து குளுமை அடையும். ஆவாரம் பூவை ஊறவைத்து குடிநீர் தயாரித்து அருந்த நாவறட்சி நீங்கும்.

கண் எரிச்சல் நீங்கும்

உடல் சூட்டினால் கண் சிவந்து விடும். அவர்கள் ஆவாரம் பூவை உலர்த்திப் பொடித்து நீர் விட்டு அரைத்துக் குழப்பி படுக்கும் முன் கண் புருவத்தின் மீது பற்றுப் போட சிவப்பு மாறும்.

நீரிழிவு நோய் கட்டுப்படும்

ஆவாரம் பூக்களையும், கொழுந்தையும் சேர்த்து வெயிலில் காயவைத்து தூள் செய்து அதில் நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து கஷாயம் இறக்கி பால் சேர்த்து பருகிவந்தால் நீரிழிவு நோய் படிப்படியாக குடியும்.

ஆவாரம் பூக்களை சேகரித்து பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டாக சமைத்து சாப்பிட சர்க்கரை நோயின் தாக்கம் குறையும்.

மூலம் குணமடையும்

ஆவரம் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து, அதனுடன் அதே அளவு அருகம் புல்லை வேருடன் சேகரித்து சுத்தம் செய்து இடித்து சூரணம் செய்து இரண்டு தூளையும் ஒன்றாய் கலந்து ஒரு சீசாவில் போட்டு வைக்கவும். தினமும் காலை, மாலை, அரைத்தேக்கரண்டியளவு பசு நெய் சேர்த்துக் குழைத்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமடையும்.

Health Benefits of Kodipasalai Keerai

எண்ணற்ற சத்துக்களும் சுவையும் நிறைந்த கொடி பசலை தரையோடு கொத்து கொத்தாக சிறு செடி போல வளரும் இதுவும் பசலை வகையைச் சேர்ந்த்துதான். இலங்கையில் அதிகம் பயிரிடப்பட்ட இந்த கீரை தற்போது இந்தியாவில் அதிகம் பயிரிடப்படுகிறது. இந்த இலையுடன் தண்டையும் சமைத்து சாப்பிடலாம். இரண்டிலும் நீர்ச்சத்து அதிகம் காணப்படுகிறது.

கொடி பசலைக்கீரையில் வைட்டமின் ஏ,பி, போன்ற உயிர்ச்சத்துக்களும், சுண்ணாம்பு, இரும்புச்சத்துக்களும், காணப்படுகின்றன. இதனை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள ரத்தம் சுத்தமாகும். புதிய ரத்தம் விருத்தியாகும். மலச்சிக்கல் நீங்கும்.

சிறுபசலைக்கீரை

பசலைக்கீரையில் ஒன்றான சிறுபசலைக்கீரை தரையோடு தரையாக படர்ந்த இருக்கும். குளிர்ச்சியான இடத்திலும், காய்ந்த இடத்திலும் கூட இந்த பசலைக்கொடி படர்ந்திருக்கும். இதன் இலை எள்ளின் உருவத்தில் உருண்டு,திரண்டு, வெந்தயம் அளவில் பருமனாக இருக்கும். இலையும், கொடியும் சிவந்த நிறத்துடன் இருக்கும்.

சிறுபசலைக்கீரையை பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டாக சமைத்து உண்ணலாம். இது தேகத்துக்கு நல்ல பலத்தை தரக்கூடியது. மலச்சிக்கல் உள்ளவர்கள் பசலைக்கீரையை சாப்பிட இளகி குணமாகும். பாலுணர்வை தூண்டக்கூடிய சக்தி இந்த கீரைக்கு உண்டு.

நீர்கடுப்பு குணமாகும்

உஷ்ணம் காரணமாக சிறுநீர் சிவந்து அடிக்கடி இறங்குவது உண்டு. இந்த சமயம் சிறுநீர் துவாரத்தில் எரிச்சல் ஏற்படும். இதை நிறுத்த தரைப்பசலைக்கீரையை மூன்று வேளை சமைத்து சாப்பிட நீர்சுருக்கு குணமடையும்.

உஷ்ணம் காரணமாக வெட்டை, வெள்ளை ஒழுக்கு ஏற்பட்டு சிறுநீர் துவாரத்தில் சதா வெண்ணிறமான நீர் கசிந்து கொண்டிருக்கும். இந்த குறைபாடு உள்ளவர்கள் தரைப்பசலைக்கீரையை மூன்று நாட்கள் சமைத்து சாப்பிட குணமாகும். இது அதிக குளிர்ச்சி தரக்கூடியது என்பதால் சீதாள தேகம் உள்ளவர்கள் இதை சாப்பிடக்கூடாது. சளி, கபம் இருக்கும் போது கீரையை சாப்பிட்டால் அதிகமாகும்.

How to avoid Face Wrinkles

நேரங்கெட்ட நேரத்தில் வேலை, விடியலில் தூங்கி மாலையில் கண்விழிக்கும் கலாச்சாரம் என நகரத்தில் பெரும்பாலோர் வாழ்க்கை நரக வாழ்க்கையாகி வருகிறது. பீஸா, பர்க்கர், என பாஸ்ட்புட் அயிட்டங்களை உண்ணுவதால் உடலுக்கு தேவையான சரிவிகித சத்துக்கள் கிடைக்காமல் இளமையிலேயே முதுமையான தோற்றத்தை அடைகின்றனர் இளம் தலைமுறையினர்.

சிறு வயதிலேயே முகம் முழுவதும் சுருங்கிப்போய் காட்சியளித்தால் யாருக்குத்தான் கவலை ஏற்படாது? உங்கள் கவலையை போக்கி முகச்சுருக்கத்தை மாற்ற உணவியல் வல்லுநர்கள் தரும் ஆலோசனைகளை கேளுங்கள்

அஷ்ட கோணல் யோகா

சாதாரணமாக வீட்டில் அமர்ந்திருக்கும் போது கண்களை உருட்டி நன்றாக நாலாபக்கமும் சுழற்றவேண்டும். இதனால் கண்களை சுற்றியுள்ள சுருக்கம் போகும். பின்னர் வாய்க்குள் நன்றாக காற்றை உறிஞ்சி கன்னத்தை உப்ப வைத்து பின்னர் மெதுவாக விட கன்னத்தில் உள்ள சுருக்கம் நீங்கிவிடும்.

அடிக்கடி முகத்தை அஷ்ட கோணலாக்கி பின்னர் நேராக்கினால் முகஅழகு அதிகமாகும் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இதற்கு பேஷியல் யோகா என்று பெயர் வைத்திருக்கும் யோகா நிபுணர்கள் முகச்சுருக்கத்தைப் போக்க இந்த யோகாவை பரிந்துரைக்கின்றனர். அமெரிக்காவில் ஏற்கனவே பிரபலமாகி சக்கை போடு போட்ட இந்த யோகா பயிற்சிகள் இப்போது தான் ஏனைய நாடுகளுக்கு படிப்படியாக பரவ ஆரம்பித்துள்ளன.

சத்தான உணவு சுருக்கம் போக்கும்

வைட்டமின் சத்து நிறைந்த காய்கறி மற்றும் பழங்களை அதிகம் உண்ணுங்கள் ஏனெனில் இது முகச்சுருக்கத்தைப் போக்கும். கறிவேப்பிலையிலுள்ள வைட்டமின் ஏ இளமையான சருமத்தைத் தக்க வைத்துக் கொள்ள உதவும். அடிக்கடி துவையல் செய்து சாப்பிட முகச்சுருக்கம் அண்டாது.துவர்ப்பு சுவை இளமைக்குப் பாதுகாப்பு தரும். வாழைப்பழம், வாழைத்தண்டு, நெல்லிக்காய் போன்ற துவர்ப்பு சுவையுள்ள உணவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

சருமம் பளபளப்பு

வெந்தயக் கீரையை பாசிப்பருப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து மசித்து வாரத்தில் 2 அல்லது 3 தடவை சாப்பிட்டு வந்தால் உடல் குளுமையடைவதோடு முகச் சுருக்கம் மறையும். வாரத்தில் ஒன்றிரண்டு தடவையாவது ஆரஞ்சு, கரட் ஜூஸ் குடித்து வந்தால் சருமம் பொன் நிறமாகும்.

முகத்திற்கு எண்ணெய் மசாஜ்

நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் இரண்டையும் சம அளவு எடுத்து முகம் மற்றும் உடல் முழுவதும் தடவி, சிறிது ஊறவிட்டு கடலை மாவினால் தேய்த்துக் கழுவுங்கள் முகம் புத்துணர்ச்சியடையும். இதே முறையை ஆலிவ் எண்ணெய் அல்லது சுத்தமான தேங்காய் எண்ணெயை பயன்படுத்தியும் செய்யலாம் முகத்தில் இளமை பூரிக்கும்.

Avoid Keeping Meat in Fridge

உணவுப் பொருட்கள் விரைவில் கெட்டுப்போகாமல் பதுகாப்பாக வைத்திருக்க கண்டுபிடிக்கப்பட்டதே ஃப்ரிட்ஜ். ஆனால் சமைக்க சோம்பேறித்தனம் கொண்டவர்களுக்காக கண்டுபிடிக்கப்பட்ட சாதனம் போல் ஆகிவிட்டது ஃப்ரிட்ஜ். நம்மவர்களில் பலருக்கு எது எதையெல்லாம் வைப்பது என்றே வரைமுறையே கிடையாது. எதையும் வீணாக்காமல் சிக்கனமாக இருக்கிறோம் என்ற நினைப்பில் முந்தா நாள் சாம்பார், போனவாரம் வைத்த ரசம், புளித்து போன இட்லி மாவு, பால், காய்கறி,முட்டை, இறைச்சி, குளிர்பானங்கள், என சகலத்தையும் உள்ளே வைத்து ஃபிரிட்ஜை கதற அடித்துவிடுவார்கள். இது மிகவும் தவறானது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

காய்கறி,கீரை மற்றும் இறைச்சி, இட்லி மாவு போன்றவற்றை வார கணக்கில் பிரிட்ஜில் வைத்திருக்காமல் கூடிய வரை ஃபிரஷ்ஷாக பயன்படுத்துவதே நல்லது என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். குறிப்பாக ஃபிரிட்ஜில் வைத்த இறைச்சியை பயன்படுத்துவது வேண்டவே வேண்டாம் என்பதுதான் அவர்களின் முக்கிய அறிவுரை.

நீண்ட நாட்கள் ஃபிரிட்ஜில் வைத்திருக்கும் மாமிசத்தில் பாக்டீரியா உருவாகிவிடும் .அத்தகைய இறைச்சியை சரிவர சமைக்காமல் உண்டுவிட்டால், இரைப்பையில் நோய் தாக்கிவிடும். இதுபோன்ற இறைச்சியை உண்பதினால் இரைப்பை தொடர்பான நோய்கள் ஏற்படுவதோடு மட்டுமல்லாது, ஈரல், சிறு நீரகம் மற்றும் மூளையின் செயல்பாடு ஆகியவற்றின் செயல்பாட்டை பாதிக்கும் என்றும் எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

விஷமாகும் உணவு

இறைச்சியை உடனடியாக கடைகளில் வாங்கிய உடனே வெட்டி வாங்கி சமையலுக்கு பயன்படுத்தினால்தான் அதில் உள்ள புரத சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். அவ்வாறு இல்லாமல் வார கணக்கில் இறைச்சியை ஃபிரிட்ஜில் வைத்து எடுத்து, பின்னர் அதனை சமைப்பதினால் அதிலுள்ள புரத சத்துக்கள் அழிந்துவிடுவதோடு மட்டுமல்லாது, அதன் தூய்மையும் பாதிக்கப்பட்டு, சமயங்களில் அது விஷ உணவாக மாறவும் வாய்ப்புண்டு என்கின்றனர்

உணவியல் வல்லுநர்கள். மொத்தத்தில் ஓட்டல்கள் மற்றும் உணவு விடுதிகளில் பெரும்பாலும் ஃபிரிட்ஜில் வைத்த இறைச்சியே சமைக்கப்படுவதால், ஓட்டல்கள், சிற்றுண்டியகங்கள் மற்றும் திறந்தவெளி உணவகங்களில் வழக்கமாக சாப்பிடும் பழக்கத்தை கைவிடுவதே நல்லது என்கிறார்கள் நிபுணர்கள்!

எளிதில் நோய் தாக்கும்

அதேபோன்று நோய் தாக்கிய ஆடு, மாடு அல்லது கோழி போன்ற இறைச்சியில் வைட்டமின், புரத சத்துக்கள் சிதைந்து போயிருக்கலாம். எனவே இத்தகைய இறைச்சியை ஃப்ரிட்ஜில் வைத்து உண்பதனால் நோய் எளிதில் தாக்கும் அபாயம் உள்ளது என்பதே மருத்துவர்களின் எச்சரிக்கை.

அதேபோல் நாட்கணக்கில் சமைத்து ஃப்ரிட்ஜில் வைத்த உணவை பின்னர் அடிக்கடி எடுத்து சூடு செய்து சாப்பிடுவதை நோய்களை நாமே காசு கொடுத்து அழைப்பதற்கு சமம். எனவே உணவுகளை தினசரி சமைத்து உண்பதே ஆரோக்கியம் என்பது உணவியல் வல்லுநர்களின் அறிவுரையாகும்.