About Me

My photo
I am an IT professional, Nowadays our Lifestyle is changed a lot and of course we are chasing money. In India More than 7 crore people affected by Diabetes, High Cholesterol and infertility due to their Poor Food Habits &amp Lifestyle. This Blog is very useful for youngsters to lead good Lifestyle and be healthy and students to choose career courses.Work hard, but make time for your love, family and friends. Nobody remembers Powerpoint presentations on your Final Day.I believe Life is ours and we only Live our Life.... Thanks for visiting and welcome you to visit again. WHO LOVES GOD ARE SEARCHING GOD, WHO LOVES PEOPLE ARE LIVING AS GOD - SK ( Reach me @ +91 9791139942 to lead Healthy Family Life )

Thursday 20 August 2015

Siru thaniya food


தமிழர் விருந்து! - சிறு தானியங்கள் சிறப்பான உணவுகள்

''அன்னம் எப்படியோ, எண்ணம் அப்படியே! உணவின் தூய்மை உணர்ந்து, வாழ்வை எளிமையாக்கும் உன்னதப் பாதை, சிறுதானிய உணவு முறையில் பொதிந்துள்ளது''
 - நம்மாழ்வார்.
நாம் உண்ணும் உணவு குறித்த அக்கறையும் மரபு வழி அறிவும் மிக உயர்ந்தது. நம் மரபு முறை உணவுகள், வெறும் பசி போக்குவதாக மட்டுமல்லாமல், நமக்கு ஆற்றல் தருபவையாகவும் அரு மருந்தாகவும் பயன்படுகின்றன.
ஏழைகளின் உணவாக இருந்த தினை, கம்பு, சோளம், கேழ்வரகு, சாமை, வரகு, குதிரைவாலி போன்றவை, இன்று வசதியானவர்களின் உணவாக, வியாதியஸ்தர்கள் உண்ணும் உணவாக மாறிவருகின்றன. நாளுக்கு நாள் அவற்றின் விலையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
தேவை அதிகமாகவும் உற்பத்தி குறைவாகவும் இருப்பதால்தான், இந்த நிலை. விவசாயிகள், பணப் பயிரை விவசாயம் செய்வதால், நமது பாரம்பரிய உணவுகள் அழிந்துவருகின்றன. ஆதித் தமிழர்களின் ஆரோக்கியமே, நமது சிறுதானிய உணவில்தான் அடங்கி இருந்தது.  
நிலம், நீர், காற்று மாசு அடைவதால், சுற்றுச்சூழல் சீர்கேடு அதிகரித்து வருகிறது. இதுகுறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் விதமாகவும்; மனிதர்களுக்கு, சுற்றுச்சூழல் குறித்த விழிப்பு உணர்வை உண்டாக்கி, பாரம்பரிய உணவு முறைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாகவும், சென்னை லயோலா கல்லூரியில், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் கடந்த வாரம், 'ஐம்பூதச் சுற்றுச்சூழல் திருவிழா’ அமர்க்களமாக நடந்தது.
தமிழர்களின் பாரம்பரிய சிறுதானிய உணவுகள் குறித்தும், சுற்றுச்சூழல் சார்ந்தும் விழிப்பு உணர்வை மக்களிடையே ஏற்படுத்தும்விதமாக நடத்தப்பட்ட இந்தத் திருவிழாவில், இயற்கையாக விளைவிக்கப்பட்ட உணவே ஆரோக்கியமானது என்று விளக்கும் வகையில், சிறுதானிய விருந்தும் நடந்தது.
விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு, விருந்தில் பரிமாறப்பட்ட ருசிமிகுந்த சிறுதானிய உணவுகளை, அனைவரும் வீட்டிலேயே செய்து, ருசித்து, ஆரோக்கியம் பெற, 'டாக்டர் விகடன்’ இணைப்பாக வழங்குகிறோம்.
சிறந்த சிறு தானியச் சிற்றுண்டிகளை வழங்கியிருக்கிறார், சித்த மருத்துவர் கு. சிவராமன். அதோடு, இதில் இடம்பெற்ற மற்ற உணவு வகைகளைப் படைத்தவர், திருமணங்களுக்கும், விழாக்களுக்கும் நமது பாரம்பரிய உணவைச் சமைத்துத் தரும் ராஜமுருகன். உணவக மேலாண்மை மற்றும் கலை அறிவியல் படித்துவிட்டு, சிறுதானிய உணவின் மீது உள்ள அக்கறையில், முழுமூச்சாக இறங்கிவிட்டார் இந்த இளைஞர். இந்த உணவுகளில் பயன்படுத்தியுள்ள சிறுதானியங்களின் பலன்களை, நமக்கு விளக்குகிறார் சித்த மருத்துவர் வேலாயுதம்.    

மருந்து வாங்கச் செலவிடும் பணத்தில், சிறுதானியங்களை வாங்கிச் சமைத்து உண்ணும் பழக்கத்தை, நாம், நம் குழந்தைகளுக்கு ஏற்படுத்தித் தருவோம். அடுத்த தலைமுறையை, ஆரோக்கியமுள்ள தலைமுறையாக உருவாக்குவோம்!

சிறுதானிய உணவு வகைகள்
தினை அல்வா
தேவையானவை: தினை அரிசி மாவு - 200 கிராம், வெல்லம் - 200 கிராம், ஏலக்காய்த் தூள் - அரை தேக்கரண்டி, சுக்குத்தூள் - 2 சிட்டிகை, முந்திரி, திராட்சை, பாதாம் பருப்பு - தலா 10 கிராம், நெய் - 100 கிராம்.
செய்முறை: தினை அரிசி மாவுடன் வெல்லம், தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும். சட்டியில் சிறிது நெய்யை விட்டு சூடாக்கி, கரைத்து வைத்துள்ள மாவை, சிறிது சிறிதாக விட்டு, நன்றாகக் கிளறவும். கட்டியாகாமல் பார்த்துக்கொள்ளவும். இடைவிடாமல் சிறிது சிறிதாக நெய் சேர்க்கவும். அல்வா, சட்டியில் ஒட்டாமல் வரும்போது, நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம், திராட்சை, சுக்குத் தூள் மற்றும் ஏலக்காய்த் தூள் தூவி இறக்கவும்.
பலன்கள்: புரதச் சத்து, மாவுச் சத்து மற்றும் நார்ச் சத்து அதிகம் நிறைந்த சிறுதானியம் இது. இதனுடன் இனிப்புப் பொருள் சேர்ப்பதால், அதில் உள்ள நுண் சத்துக்கள் அதிகமாகும். வைட்டமின்கள் நிறைந்த உணவு.  
சிறுதானிய இடியாப்பம்
தேவையானவை: சாமை அரிசி - ஒரு குவளை, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சாமை அரிசியை 2 மணி நேரம் நன்றாக ஊறவிடவும். ஊறிய அரிசியை நன்கு மிருதுவாக, சிறிது உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும். மாவு கெட்டியாக இருப்பது நல்லது. உடனே இந்த மாவை இட்லித் தட்டில், இட்லி போல நன்கு வேகவிடவும். பிறகு இதனை, இடியாப்ப அச்சில் பிழிந்து எடுக்கவும்.
பலன்கள்: சாமையில் நார்ச் சத்து அதிகம் உள்ளது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். எண்ணெய் சேர்க்காமல், நீராவியில் வேகவைப்பதால், உடலுக்கு நன்மை பயக்கும்.  
காய்கறிக் கூட்டுக் குருமா
தேவையானவை: கேரட், பீன்ஸ், நூக்கல், வெங்காயம், தக்காளி - தலா 100 கிராம் (நறுக்கியது), இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி, சோம்பு, பட்டைப் பொடி - தலா சிறிதளவு, மிளகாய்த் தூள், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 4 மேசைக்கரண்டி. அரைக்க: தேங்காய் - 1 (துருவியது), முந்திரி - 10 கிராம், சோம்பு - 5 கிராம். தாளிக்க: ஏலக்காய், பிரிஞ்சி இலை - தலா இரண்டு, கிராம்பு - ஐந்து, பட்டை, சாதிபத்திரி - சிறிதளவு.
செய்முறை:  எண்ணெயைச் சூடாக்கித் தாளித்து, நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி, நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்து நன்கு வதக்கவும். சிறிது தண்ணீர், சோம்பு, பட்டைப் பொடி, மிளகாய்த் தூள் சேர்த்து வேகவிட்டு, அரைத்த மசாலாப் பொருட்களைச் சேர்த்து, நன்றாகக் கொதிக்கவிட்டு இறக்கவும்.
பலன்கள்: இவை கிழங்கு அல்லாத இயற்கை முறை பசும் காய்கறிகளாக இருக்க வேண்டும். அனைத்துக் காய்கறிகளும் சேரும்போது, கால்சியம், பொட்டாசியம், சோடியம், தாது உப்புகள் நிறைந்து இருக்கும். அவை நமது உள் உறுப்புக்குத் தேவையான நுண் சத்துக்களைக் கொடுக்கும். நார்ச் சத்தும் நிறைந்துள்ளது.
சாமை, காய்கறி பிரியாணி
தேவையானவை: சாமை அரிசி - 500 கிராம், வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், சௌசௌ - தலா 100 கிராம் (நறுக்கியது), பச்சைப்பட்டாணி - 50 கிராம், தயிர் - அரை கோப்பை, இஞ்சி, பூண்டு விழுது, புதினா - தேவையான அளவு,  சோம்பு, பட்டைப்பொடி - 2 மேசைக்கரண்டி, மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு. தாளிக்க: நெய் - 100 மி.கி, ஏலக்காய், பிரிஞ்சி இலை, கிராம்பு - தலா 2, பட்டை, சாதிபத்திரி - சிறிதளவு.
செய்முறை: நெய்யைச் சூடாக்கி, தாளிக்கக் கொடுத்த பொருட்களை, சிவக்க வறுத்துக்கொள்ளவும். இதில் சோம்பு, பட்டைப்பொடியைச் சேர்த்து, இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி, புதினாவைச் சேர்க்கவும்.  நன்றாக வதங்கியதும், தக்காளி சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை வதக்கவும். நறுக்கிய காய்கறிகள், பச்சைப்பட்டாணி சேர்த்து மிளகாய்த் தூள், உப்புடன் ஒரு லிட்டர் (5 டம்ளர்) தண்ணீர் சேர்த்து வேகவிடவும். பாதி வெந்ததும் தயிர் சேர்த்து வேகவிடவும். சாமை அரிசியைச் சேர்த்து வேகவிடவும். பிரியாணி பதம் வந்ததும் எடுக்கவும்.
பலன்கள்: அனைத்துக் காய்கறிகளும் சேர்வதால், எல்லாச் சத்துக்களும் கிடைக்கின்றன. அதனுடன் சாமை சேர்வதால், நார்ச் சத்தும் கிடைத்து, உடல் வலுவைக் கூட்டுகிறது. காய்கறிகள், பட்டாணி சேர்ப்பதால், ஆரோக்கியம் கூடுகிறது.
வாழைத்தண்டுப் பச்சடி
தேவையானவை: தயிர் - ஒரு கோப்பை, பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - அரைக் கோப்பை, நறுக்கிய கொத்தமல்லித் தழை - சிறிது, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தயிரை நன்கு கலக்கி, மற்ற பொருட்களையும் சேர்த்து, பிரியாணியுடன் பரிமாறவும்.
பலன்கள்: வாழைத்தண்டில் நார்ச் சத்து அதிகம் உள்ளது. குடலில் உள்ள கழிவைச் சுத்தப்படுத்தி வெளியேற்றும். உடலில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாவைப் பாதுகாக்கும். சிறுநீரகக் கல், பித்தப்பையில் உள்ள கல்லைக் கரைக்கும் தன்மை வாழைத்தண்டுக்கு உண்டு. மலச்சிக்கல், சிறுநீரகப் பிரச்னையைச் சரிசெய்யும்.
மாப்பிள்ளை சம்பா சாம்பார் சோறு
தேவையானவை: மாப்பிள்ளை சம்பா அரிசி - 500 கிராம், நாட்டுக் காய்கறிகள் - 400 கிராம், துவரம் பருப்பு - 150 கிராம், மஞ்சள் தூள் - 2 சிட்டிகை, கடுகு, சீரகம், மிளகு, வெந்தயம் - அரை தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் - 3, தக்காளி - 2, சின்ன வெங்காயம் - 100 கிராம், பூண்டு - 20 பல், சாம்பார் பொடி - 3 மேசைக்கரண்டி, புளி - ஒரு எலுமிச்சை அளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு, கறிவேப்பிலை - ஒரு ஆர்க், கொத்துமல்லி- சிறிது.
செய்முறை: மாப்பிள்ளைச் சம்பா அரிசியுடன் மூன்று பங்கு தண்ணீர், சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு குழைய வேகவைக்கவும். துவரம் பருப்புடன், சீரகம், மிளகு, கறிவேப்பிலை, மஞ்சள்தூள், சிறிது எண்ணெய், வெந்தயம், தக்காளி சேர்த்து நன்கு குழைய வேகவிடவும். எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்துக் காய்கறிகளை சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியதும் சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும். பிறகு, அதனுடன் கரைத்த புளித்தண்ணீர் சேர்த்து, நன்கு வேகவைக்கவும். வேகவைத்த பருப்பையும் காய்கறியுடன் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். இந்தச் சாம்பார் கலவையைக் குழைய வேகவைத்த சோறுடன் சேர்த்துக் கலக்கவும். நறுக்கிய கொத்தமல்லியைத் தூவவும்.
பலன்கள்: மாப்பிள்ளைச் சம்பாவை, மணிசம்பா என்றும் கூறுவார்கள். நீரிழிவு நோய்க்கு நல்லது. மாவுச் சத்து மற்றும் புரதச் சத்து, அனைத்தும் சரிவிகிதத்தில் நிறைந்த உணவு இது.
கதம்பக்காய்க் கூட்டு
தேவையானவை: சுரைக்காய், பீர்க்கன், புடலை, மஞ்சள் பூசணி, வெள்ளைப் பூசணி, அவரைக்காய், தக்காளி, கொத்தவரை, காராமணி, சின்ன வெங்காயம் (நறுக்கியது) - 100 கிராம், பாசிப்பருப்பு - 200 கிராம், நல்லெண்ணெய் - 3 மேசைக்கரண்டி, கடுகு, உப்பு - சிறிது, உளுந்து, கடலைப் பருப்பு - 2 தேக்கரண்டி,
பச்சைமிளகாய் - 5, மஞ்சள் தூள் - சிறிது, இஞ்சி, பூண்டு விழுது - இரண்டு மேசைக்கரண்டி, கல் உப்பு - தேவையான அளவு.
செய்முறை: எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு இவற்றைத் தாளித்து, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். மற்ற காய்களைச் சேர்த்து வதக்கி, வெந்ததும், வேகவைத்த பாசிப்பருப்பைச் சேர்த்துப் பரிமாறவும்.
பலன்கள்: எல்லாக் காய்கறிகளும் கலந்து இருப்பதால், அனைத்துச் சத்துக்களும் நிறைந்தது இந்தக் கூட்டு. நுண் சத்துக்கள் அதிகம் காணப்படுகிறது. தாது உப்புகளும் அதிகம் நிறைந்திருப்பதால் உடலுக்கு எல்லா நன்மைகளூம் கிடைக்கும்.
குதிரைவாலி தயிர் சோறு
தேவையானவை: குதிரைவாலி அரிசி - 500 கிராம், பால் - ஒரு கோப்பை, தயிர் - அரை கோப்பை, உப்பு - தேவையான அளவு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, மாதுளை, இஞ்சி - சிறிதளவு.
செய்முறை: குதிரைவாலியைச் சுத்தம் செய்து மூன்று கோப்பை நீர் சேர்த்து, நன்கு வேகவைத்துக் கொள்ளவும். சோறு குளிர்ந்த பிறகு, பால் மற்றும் தயிர் சேர்த்து, கையால் நன்றாக கலக்கி உப்பு சேர்க்கவும். கொத்தமல்லி, மாதுளை, கறிவேப்பிலை, நறுக்கிய இஞ்சி சேர்த்துப் பரிமாறவும்.
பலன்கள்: அரிசியை விட மேலானது, இந்தக் குதிரைவாலி. நார்ச் சத்து அதிகம் நிறைந்து, உடல் வலிமையைத் தரக்கூடியது. அதிகம் ஆரோக்கியம் நிறைந்தது. இதனுடன் தயிர் சேரும்போது 'லாக்டோபாசிலஸ்’ (lactobacillus) என்ற வயிற்றுக்கு தேவையான பாதுகாப்பு பாக்டீரியாவை தருகின்றது. வயிற்றில் சுரக்கக்கூடிய அமிலத் தன்மையைக் குறைத்து வயிற்றுப் புண்ணைச் சரிசெய்யும்
இஞ்சி  நெல்லிக்காய் ஊறுகாய்
தேவையானவை: இஞ்சி, நெல்லிக்காய் - தலா 100 கிராம், பூண்டு - 50 கிராம், வெல்லம் - சிறிது, மிளகாய்த் தூள் - 3 மேசைக்கரண்டி, மஞ்சள் தூள் - 2 மேசைக்கரண்டி, வெந்தயம் (வறுத்துப் பொடித்தது), நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: இஞ்சியைத் தோல் சீவி, பூண்டுடன் அரைத்துக்கொள்ளவும். எண்ணெயைச் சூடாக்கி, இஞ்சி, பூண்டு விழுது, வேகவைத்து மசித்த நெல்லி, வெல்லம், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, வறுத்துப் பொடித்த வெந்தயம் சேர்த்து எண்ணெய் மிதக்கும் வரை வதக்கவும்.
பலன்கள்: இஞ்சியை 'அமிர்த மருந்து’ என்று சித்த மருத்துவத்தில் கூறுகின்றனர். பித்தத்தைத் தன்னிலைப்படுத்தி, மஞ்சள் காமாலை வராமல் தடுக்கும். கல்லீரலை சிறப்பாகச் செயல்பட வைக்கும். செரிமானத்தைத் தூண்டும். ரத்தக் கொதிப்பைக் குறைக்கும். நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகப்படுத்தும். இஞ்சி நெல்லி இரண்டையும் ஊறுகாயாகச் செய்யும்போது, அதன் நுண் சத்துக்கள் பாதுகாக்கப்படுகின்றது.
சோள தோசை
தேவையானவை: சோளம் - 500 கிராம், உளுந்து - 100 கிராம், வெந்தயம் - 2 மேசைக்கரண்டி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சோளம், உளுந்து, வெந்தயம் இவற்றை ஊறவைத்து, தனியாக தோசைமாவு பதத்துக்கு அரைத்து உப்பு சேர்த்துக் கலந்துகொள்ளவும். ஐந்து முதல் ஆறு மணி நேரம் புளிக்கவைத்து தோசையாக ஊற்றி எடுக்கவும்.
 
பலன்கள்: ''பஞ்சம் தங்கிய உணவு'' என்று சோளத்தை, கிராமத்தில் சொல்வார்கள். நாட்டில் பஞ்சம் இருக்கும்போது பசியை நீக்கிய தானியம் இது. மாவுச் சத்து மற்றும் புரதச் சத்து அதிகம் உள்ளது. நார்ச் சத்தும் நிறைந்து உள்ளது.
நிலக்கடலைத் துவையல்
தேவையானவை: வறுத்துத் தோல் நீக்கிய நிலக்கடலை - 250 கிராம், பூண்டு - 10 பல், புளி - சிறிது அளவு, மிளகாய், சின்ன வெங்காயம் - தலா இரண்டு, உப்பு - சிறிதளவு. தாளிக்க: எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி, கடுகு, உளுந்து - அரை தேக்கரண்டி, கறிவேப்பிலை சிறிதளவு.
செய்முறை: கடலையை நீர் சேர்த்து அரைத்து, பிற பொருட்களுடன் சட்னி பதத்தில் அரைத்து, தாளித்துப் பரிமாறவும்.
பலன்கள்: இதில் நல்ல கொழுப்பு,  புரதமும் அதிகம் நிறைந்துள்ளது. நிலக்கடலையை, உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது உடலுக்கு நல்லது. பசி எடுப்பதைக் கட்டுப்படுத்தும். சர்க்கரை நோயாளிகள் தாராளமாக சாப்பிடலாம்.  
சாமை மிளகுப் பொங்கல்
தேவையானவை: சாமை அரிசி - 500 கிராம், பாசிப்பருப்பு - 250 கிராம், இஞ்சி (துருவியது) - இரண்டு தேக்கரண்டி, நெய் - 3 மேசைக்கரண்டி, முந்திரி - 10 கிராம், சீரகம் - 2 தேக்கரண்டி, மிளகு - 3 தேக்கரண்டி, கல் உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பாசிப்பருப்பை தண்ணீரில் நன்றாக ஊறவைக்கவும். இதனுடன் கல் அரித்த சாமை அரிசி, உப்பு கலந்து குக்கரில் மூன்று விசில் வைத்து வேகவிடவும். நெய்யைச் சூடாக்கி சீரகம், மிளகு, முந்திரி, இஞ்சி தாளித்து வேகவைத்த சாமையுடன் நன்கு கலக்கவும். சுவையான சாமைப் பொங்கல் தயார்.
பலன்கள்: எல்லாத் தாது உப்புகளும் நிறைந்தது சாமை. மாவுச் சத்தும் இதில் அதிகம்.  அதனுடன் நெய் சேரும்போது உடலுக்கு நல்லது. நெய் ரத்தத்தில் கொழுப்பாகப் படிந்துவிடாமல் ஆற்றலாக மாறுவதற்கு சோளம் உதவுகிறது. மிளகு, செரிமானத்தைச் சரிசெய்யும். குடலில் உள்ள நச்சுத் தன்மையை நீக்கும்.
தினை கதம்ப இனிப்பு
தேவையானவை: தினை மாவு - 350கிராம், நெல் அரிசி மாவு - 50கிராம், வெல்லம் -   400கி, பால் - 300 மி.கி, ஏலக்காய் தூள் - அரை தேக்கரண்டி, நெய் - 150 மி.கி.
செய்முறை: நெய்யைத் தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் தோசை மாவுப் பதத்தில் கலக்கிக் கொள்ளவேண்டும். அடி கனமான பாத்திரத்தில் நெய்யை சூடாக்கி மாவுக் கலவையை ஊற்றி வேகவிடவும்.  எல்லாம் சேர்ந்து சுருண்டு, நெய் கலவையிலிருந்து வெளி வரும் வரை மெள்ளக் கிளறவும்.
சுவையான கதம்ப இனிப்பு தயார்.
தினை காரப் பணியாரம்
தேவையானவை: தினை அரிசி - 500 கிராம், உளுந்து - 250 கிராம், வெந்தயம் - 3 தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு, கடுகு, சீரகம் - ஒரு தேக்கரண்டி, சின்ன வெங்காயம் - 250 கிராம், மிளகாய் - 4, எண்ணெய், கறிவேப்பிலை - தேவையான அளவு, சீரகம் - சிறிதளவு.
செய்முறை: தினை அரிசி, உளுந்து, வெந்தயம் முதலியவற்றை மூன்று மணி நேரம் ஊறவைத்து, நன்றாகப் பதமாக அரைக்கவும். இதனுடன் உப்பு சேர்த்து ஆறு முதல் எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும். சிறிதளவு எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, சீரகம், மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலையைத் தாளித்து, புளித்த மாவுடன் சேர்த்துக் கலக்கவும். பணியாரச் சட்டியில் எண்ணெயைத் தடவி, கலந்த மாவை ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.
கடலைத் துவையல், புதினாத் துவையல், தேங்காய்ச் சட்னியுடன் தொட்டுச் சாப்பிட சுவையாகவும் சத்தாகவும் இருக்கும்.
பலன்கள்: தினை காரப் பணியாரத்தில் புரதம் மற்றும் நார்ச் சத்து அதிகம் உள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல பலன் தரும். குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச் சத்து உணவாக இருக்கும். காரப் பணியாரம் செய்து கொடுத்தால், விரும்பிச் சாப்பிடுவார்கள்.
சாமைக் காரப் புட்டு
தேவையானவை: சாமை அரிசி மாவு - 500 கிராம், எண்ணெய் - 3 மேசைக்கரண்டி, கடுகு - சிறிதளவு, உளுந்து - ஒரு தேக்கரண்டி, கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி, சீரகம் - ஒரு தேக்கரண்டி, கறிவேப்பிலை - சிறிதளவு, கொத்தமல்லி (பொடியாக நறுக்கியது) - சிறிதளவு, தக்காளி (பொடியாக நறுக்கியது) - 1, சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 250 கிராம், காய்ந்த மிளகாய் - 4, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சாமை அரிசி மாவைச் சலித்து, அதனுடன் சீரகம், சிறிது உப்பு கலந்து புட்டு பதத்துக்குப் பிசைந்து, ஐந்து நிமிடங்கள் ஊறவைத்து, ஆவியில் 10 நிமிடங்கள் வேகவிடவும். கடாயில் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், மிளகாய், தக்காளி, உப்பு முறையே சேர்த்து, நன்கு சுருண்டு வரும் வரை வதக்கவும். பின், வேகவைத்த சாமைப் புட்டைச் சேர்த்து நன்கு கலக்கவும். கொத்தமல்லியைத் தூவி இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் மூடி வேகவிட்டு எடுக்கவும்.
பலன்கள்: நீராவியில் வேகவைத்த உணவு என்பதால், உடலுக்கு நல்லது. விரைந்து செரிக்கும் தன்மை கொண்டது. காரம் சேர்ப்பதால், மேலும் சுவை அதிகமாகும்.
முக்கனிப் பழக்கலவை
தேவையானவை: மாம்பழம் - 3, வாழைப்பழம் - 5, பலாச்சுளை - 10, தேன் - தேவையான அளவு.
செய்முறை: மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம் ஆகிய மூன்றையும் நன்றாக மசித்துக்கொள்ள வேண்டும்.  பலாச்சுளை நன்கு பழுத்த பழமாக இருக்க வேண்டும். அதனுடன் தேன் சேர்க்கும்போது மேலும் சுவையாக இருக்கும்.
பலன்கள்: நமது பாரம்பரிய உணவு விருந்தில் முக்கிய இனிப்பு உணவு இவை. பொட்டாசியம் அதிகம் நிறைந்தது. .இதயத்தைப் பாதுகாக்கும். மாம்பழமானது ஆண்மையைப் பெருக்கும். அதிகப்படியான உடல் பலத்தைத் தரும். அதில் சூடு அதிகம். அந்தச் சூட்டை, பலாப்பழம் குளிர்ச்சி செய்யும். இந்த மூன்றையும் கலவையாகச் சாப்பிடும்போது, உடல் சமநிலை அடையும்.
வரகு போண்டா
தேவையானவை: வரகு அரிசி மாவு - 300 கிராம், கடலை மாவு - 200 கிராம், மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி, சின்னவெங்காயம் - 100 கிராம், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி, சீரகத்தூள் - சிறிதளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, கொத்தமல்லி - ஒரு சிட்டிகை, பெருங்காயம் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.  
செய்முறை: எண்ணெய் தவிர்த்து அனைத்து பொருட்களையும் ஓன்றாகக் கலந்து, சிறிது தண்ணீர் சேர்த்து போண்டா மாவுப் பதத்துக்கு கட்டி தட்டாமல் பிசைந்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, மாவை உருட்டிப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
பனிவரகு கட்லட்
தேவையானவை: உருளைக்கிழங்கு - 200 கிராம், பட்டாணி, காரட், பீன்ஸ், வெங்காயம் - 100 கிராம் (பொடியாக நறுக்கியது), இஞ்சி, பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி, சீரகம் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 2 மேசைக்கரண்டி, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் - தேவையான அளவு.
செய்முறை:  உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து, நன்றாக மசித்துக்கொள்ளவும். காரட், பீன்ஸை மிகப் பொடியாக நறுக்கி சிறிது உப்பு சேர்த்து பட்டாணியுடன் வேகவைக்கவும். இதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது, சீரகம், மசித்த உருளைக்கிழங்கு சேர்த்துப் பிசைந்துகொள்ளவும். நீர்க்க இருந்தால், இதனுடன் சிறிது பொட்டுக்கடலை பொடி சேர்க்கலாம்.
இதை நீள்வட்ட வடிவத்தில் உருண்டையாகப் பிடித்து கொள்ளவும்.  தீயை மிதமாகவைத்து, முறுகலாக இரண்டு பக்கமும் பொரித்து எடுக்கவும்.
பலன்கள்: வரகில் புரதச் சத்தும், நார்ச் சத்தும் அதிகம் நிறைந்துள்ளது. உடலுக்கு நல்ல வலு சேர்க்கும்.
தினைப் பாயசம்
தேவையானவை: தினை - 250 கிராம், பனை வெல்லம் - 200 கிராம், பால் - 250 மி.லி., முந்திரிப் பருப்பு - 15, ஏலக்காய் - 5, உலர்ந்த திராட்சை - 15, நெய் - 2 தேக்கரண்டி.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் 4 கோப்பை தண்ணீர்விட்டு, அதில் தினையைப் போட்டு நன்கு வெந்ததும்,  வெல்லத்தைத் தூளாக்கிப் போடவும். 10 நிமிடம் மெல்லிய சூட்டில் வேகவிட்டு, கடைசியாகப் பால் சேர்க்கவும். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து போடவும். கடைசியாக ஒரு கலக்குக் கலக்கி இறக்கும்போது, ஏலக்காயைப் பொடித்து சேர்க்கவும்.  
பலன்கள்: இனிப்பில் ஏலக்காயைக் கடைசியாகப் போடுவது வெறும் வாசத்துக்கு மட்டும் அல்ல. இனிப்பின் சளி பிடிக்கும் தன்மையையும் செரிக்கத் தாமதிக்கும் மந்தத் தன்மையையும் ஏலம் சரிக்கட்டிப் பாதுகாக்கும்.
சோளப் பணியாரம்
தேவையானவை: சோளம் - ஒரு கோப்பை, உளுந்து - கால் கோப்பை, வெந்தயம் - சிறிதளவு, சின்ன வெங்காயம் - ஒரு கையளவு, பச்சை மிளகாய் - காரத்துக்கேற்ப, கல் உப்பு - ருசிக்கேற்ப.
செய்முறை: சோளம், உளுந்து, வெந்தயம் மூன்றையும் நான்கு மணி நேரம் ஊறவைத்து, இட்லிக்கு அரைப்பதுபோல அரைத்து, உப்புச் சேர்த்துக் கரைத்து, ஏழு மணி நேரம் புளிக்க வைக்கவும். பிறகு வெங்காயம், மிளகாய் சேர்த்து பணியாரம் சுட்டால், அது காரப் பணியாரம்.
மாறாக, இந்த அரைத்த மாவில் தேவைக்கு ஏற்ப பனை வெல்லத்தைக் கரைத்து சேர்த்து, ஏலக்காய்த்தூளைப் போட்டு, கலந்து பணியாரம் சுட்டால் அது இனிப்புப் பணியாரம்.
பலன்கள்: உடல் எடையை உரமுடன் ஏற்றும் தன்மை சோளத்துக்கு உண்டு. 'என் குழந்தை குண்டாக வேண்டும்’ என ஆதங்கப்படும் தாய்மார்கள், சோளத்தில் காரப் பணியாரமும் இன்னொரு நாள் பனை வெல்லம் சேர்த்து இனிப்புப் பணியாரமும் செய்து கொடுக்கலாம். ஆரோக்கியத்துடன், குழந்தையின் உடல் எடையும் கண்டிப்பாகக்கூடும்.   எலும்பில் ஏற்படும் சுண்ணாம்புச் சத்துக் குறைவினால் வரும் ஆஸ்டியோபோரோசிஸ் உள்ள பெண்களுக்குச் சோள உனவு சிறந்தது. இது தரும் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், நார்ச்சத்துக்கு இணையே இல்லை.  
குறிப்பு: ஏற்கெனவே தோலில் கரப்பான், சோரியாசிஸ், ஒவ்வாமை போன்ற நோய் இருப்பவர்கள் மட்டும், சோளம் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
கைகுத்தல் அரிசி இட்லி
தேவையானவை: கைக்குத்தல் மாப்பிள்ளைச் சம்பா சிகப்பரிசி - ஒரு கிலோ, கறுப்பு உளுந்து - 200 கிராம், வெந்தயம் - ஒரு மேசைக்கரண்டி, உப்பு - தேவையான அளாவு.
செய்முறை: அரிசி, உளுந்து, வெந்தயத்தைத் தனித்தனியாக ஊறவைத்து, இட்லிக்கு அரைப்பது போல அரைத்து, உப்பு சேர்த்துக் கரைக்கவும். உளுந்தைத் தோல் நீக்காமல், அப்படியே அரைக்க வேண்டும். மறுநாள், வழக்கம்போல இட்லித் தட்டில் ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.
பலன்கள்: வைட்டமின் 'பி’, ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்டுகள் செரிந்த பாலிஃபீனால் உளுந்து தோலில் உண்டு. கைக்குத்தல் அரிசியில் இரும்புச் சத்து, நார்ச் சத்துடன், வைட்டமின் 'பி 1 உண்டு. பாலிஃபீனால், பீட்டா கரோட்டின் நிறைந்த சத்தான இட்லி.
குறிப்பு: மாப்பிள்ளைச் சம்பாவுக்குப் பதிலாக, தினை அரிசி சேர்த்துச் செய்தால் தினை இட்லி. ஆனால், எதுவானாலும் உளுந்தைத் தோலோடுதான் அரைக்க வேண்டும். இந்த இரண்டு இட்லிகளையுமே சூடாகச் சாப்பிட வேண்டும். ஆறினால் விரைத்துவிடும். மீண்டும் சுடவைத்து சாப்பிட்டால்தான் நன்றாக இருக்கும்.
தினை அதிரசம்
தேவையானவை: தினை அரிசி - ஒரு குவளை, பனை வெல்லம் - இனிப்புக்கு ஏற்ப, ஏலக்காய்த் தூள் - ஒரு சிட்டிகை, எள் - ஒரு தேக்கரண்டி, நெய் - ஒரு மேசைக்கரண்டி, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: தினை அரிசியைக் கழுவி ஒரு மணி நேரம் ஊறவைத்து, பிறகு ஒரு வெள்ளைத் துணியில் உலர்த்தி பொடித்துக்கொள்ளவும். பனை வெல்லத்தை பாகு காய்ச்சவும். பிறகு தினை அரிசி மாவில் கொஞ்சம் எள், ஏலக்காய்த் தூளைப் போட்டு, அதில் இந்தப் பாகை ஊற்றி, மாவை மிருதுவாகப் பிசைந்துவைக்கவும். ஒரு நாள் விட்டு, மறுநாள் அதில் சிறிது நெய் விட்டு, சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, இலையில் வைத்துத் தட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். 'தினை அதிரசம்’ தயார்.
பலன்கள்: வளரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு; பெரியோருக்கும்தான். பூசிய உடல்வாகைக் கொண்டவர்கள், 'இனிப்பான’வர்கள் மருத்துவரிடம் இருந்து விலகி இருப்பதற்கான வழியும்கூட. அரிசி - வெல்ல அதிரசத்தைக் காட்டிலும், தினை அதிரசத்தில் சுவையும் அதிகம்; நலமும் ஏகம்.
குதிரைவாலி வெண்பொங்கல்
தேவையானவை: குதிரைவாலி அரிசி - ஒரு கோப்பை, பாசிப் பருப்பு - கால் கோப்பை, மிளகு - ஒரு தேக்கரண்டி, மஞ்சள்தூள் - 2 சிட்டிகை, நெய் - ஒரு மேசைக்கரண்டி, வறுத்த முந்திரிப் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி, கறிவேப்பிலை - 2 ஆர்க், நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: குதிரைவாலி, பாசிப்பருப்பு, மிளகு, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, வழக்கமான பொங்கல் தயாரித்துக்கொள்ளுங்கள். நெய்யில் மிளகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, மேலே மிதக்கவிட வேண்டும். மேலே கொஞ்சம் வறுத்த முந்திரிப் பருப்புகளைத் தூவிச் சாப்பிடலாம். இதன் சுவை, மீண்டும் மீண்டும் குதிரைவாலியைத் தேட வைக்கும்.
பலன்கள்: சுவையிலும் மருத்துவத்தன்மையிலும் ஈடு இணையற்றது. புரதம், இரும்புச் சத்து, உயிர்ச் சத்துகளும் அதிகம். எல்லாவற்றையும்விட நார்ச் சத்து மிக அதிகம். தொற்றாநோய்க் கூட்டங்களான சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, புற்றுநோய், இதய நோய்களைத் தவிர்க்க மிக அவசியமானது நார்ச் சத்து. கரையும் நார்கள், இதய நாளங்களில் படியும் கொழுப்பைக் கரைக்கவும் சர்க்கரை திடீர் என ரத்தத்தில் உயராமல் இருக்கவும் பெருமளவு பயனாவதை உறுதிப்படுத்துகின்றன. ஆக, நார்ச் சத்து மிக முக்கியமான ஒரு சத்து. அளவில்லா நார்ச் சத்தைச் சுமந்து இருக்கும் வரகும் சாமையும் குதிரைவாலியும் அற்புதமான தானியங்கள்.

அசைவ உணவு
சாமை, கோழி ஊன்சோறு (பிரியாணி)
தேவையானவை: சாமை அரிசி - 500 கிராம், நாட்டுக் கோழிக்கறி - 500 கிராம், வெங்காயம், தக்காளி - 100 கிராம் (நறுக்கியது), இஞ்சி, பூண்டு விழுது - இரண்டு மேசைக்கரண்டி, சோம்பு, பட்டைப்பொடி - சிறிதளவு, தயிர் - அரைக் கோப்பை, புதினா - ஒரு கைப்பிடி அளவு, எலுமிச்சைச்சாறு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு. தாளிக்க: நெய் - 100 மி.லி., கிராம்பு - 5, ஏலக்காய், பிரிஞ்சி இலை - தலா 2, பட்டை, சாதிபத்திரி - சிறிதளவு.
செய்முறை: கோழிக்கறியைச் சுத்தப்படுத்தி, தயிர், உப்பு, மஞ்சள்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கி, 10 நிமிடங்கள் ஊறவிடவும். நெய்யைச் சூடாக்கி, தாளிக்கும் பொருட்களைச் சிவக்க வறுத்துக்கொள்ளவும். பின் சோம்பு, பட்டைப் பொடியைச் சேர்த்து, இஞ்சி, பூண்டு விழுதையும் சேர்த்து நன்கு வதக்கவும். நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். பின் புதினாவைச் சேர்த்து வதக்கி, தக்காளி சேர்த்து நன்கு சுண்டும் வரை வதக்கவும். ஊறவைத்த கறியைச் சேர்த்துக் கிளறவும். பாதி வெந்ததும் கழுவிய சாமை அரிசியை (அரிசிக்கு இரண்டு மடங்கு நீர்) சேர்த்து வேகவிடவும்.  
பலன்கள்: நாட்டுக்கோழி உடல் சூட்டை அதிகரிக்கச் செய்யும். உடல் வலிமையைக் கூட்டும். ஆண்மையைப் பெருக்கும். அதனுடன் சாமை சேர்வதால், நார்ச் சத்து முழுதாகக் கிடைத்து உடல் பலத்தைக் கூட்டும்.
சிறுதானியங்களின் சிறப்பு
தினை
10ஆயிரம் ஆண்டுகளாக, கிழக்கு ஆசியாவில் பயிரிடப்படும் தானிய வகைகளில் தினையும் ஒன்று. தினை உற்பத்தியில் இந்தியா, முதல் இடம் வகிக்கின்றது. குழந்தை பெற்ற தாய்க்கு, தினையைக் கூழாக்கித் தருவது தமிழர் மரபு. கப நோயைத் தீர்க்கும். புரதம், நார்ச் சத்து, மாவுச் சத்து, கொழுப்புச் சத்து, கனிமச் சத்து, இரும்புச் சத்து மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்தது. வாயுத் தொல்லையைச் சரி செய்யும்.
குதிரைவாலி
மானாவாரி நிலத்தில் விளையக்கூடிய தானியம்தான், குதிரைவாலி. குறைந்த நாட்களில் விளைச்சல் தரும் பயிர். இதன் கதிர், குதிரையின் வால் போன்ற அமைப்பு கொண்டது. இதில் - இரும்புச் சத்து, நார்ச் சத்து, சுண்ணாம்புச் சத்து நிறைந்துள்ளது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு.
கம்பு  
அதிக அளவில் பயிரிடப்படும் சிறுதானியங்களில் கம்புதான் முதல் இடம் வகிக்கின்றது. வறண்ட பகுதியில்கூட விளையும் தன்மை கம்புக்கு உண்டு.  அதிகத் தட்பவெப்ப சூழலிலும், குறைவான சத்துள்ள நிலத்திலும் விளையக்கூடிய தன்மை உண்டு. கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் இதில் மிக அதிகம்.
சோளம்
அமெரிக்கர்கள் அதிக அளவு பயன்படுத்தும் தானியத்தில் சோளமும் ஒன்று. இந்தியாவில் தமிழகத்தில் பொங்கல் திருநாளன்று கிராமங்களில் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதில் நாட்டுவகைச் சோளம் மிகவும் சுவையாக இருக்கும். சோளத்தில் அதிக அளவு மாவுச் சத்து, கொழுப்பு மற்றும் புரதம் நிறைந்துள்ளது.
வரகு
பல நாடுகளில் வரகுதான் பாரம்பரிய உணவாகப் பயன்பாட்டில் உள்ளது. வரகு தானியத்தின் தோலில், ஏழு அடுக்குகள் உண்டு. இதைப் பறவைகள், ஆடு, மாடுகளால் உண்ண முடியாது. கிராமங்களில் உரலில் இட்டு வெகுநேரம் இடிப்பார்கள். வறண்ட பகுதியில் கூட விளையக்கூடிய தன்மை இதற்கு உண்டு. இதன் விதை ஆயிரம் வருடங்கள் வரைக்கும் முளைப்புத் திறன் கொண்டது. இதில் அதிக அளவு நார்ச் சத்து மற்றும் மாவுச் சத்து உண்டு. சீக்கிரத்திலேயே செரித்துவிடும் தன்மை இதன் சிறப்பு.  
கேழ்வரகு
ஒரு காலத்தில் இதை ஏழைகளின் உணவு என்று கூறுவார்கள். ஆனால் இன்று வசதியானவர்களும், வியாதியஸ்தர்கள் உண்ணும் உயிர் நாடி உணவாக மாறிவிட்டது. மிகவும் வெப்பமான பகுதியிலும் விளையும் தன்மை கேழ்வரகுக்கு உண்டு. உடலுக்கு நல்ல உறுதியைக் கொடுக்கும். 
 குழந்தைகளுக்குக் கூழாகவும், பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு தோசை, இட்லி, இனிப்பு வகைகளாகவும் செய்து கொடுக்கலாம்.  

Monday 3 August 2015

what is diabetes with FAQ

சர்க்கரையை வெல்வது சாத்தியமே!



ஒருகாலத்தில், 'பணக்காரர்களின் வியாதி' என்று அழைக்கப்பட்டது சர்க்கரை நோய். ஆனால் இன்றோ, சர்க்கரை நோயாளிகள் இல்லாத வீடே இல்லை என்ற அளவுக்கு சர்க்கரை நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதை 'வாழ்க்கைமுறை நோய்' என்று கூறுவர். சர்க்கரை நோய் எல்லோருக்கும் வரும் என்று இல்லை. அப்படியே வந்தாலும் தடுத்துவிடலாம். நாம் சாப்பிடும் உணவு, வாழ்க்கைமுறை, உடற்பயிற்சி, சுற்றுச்சூழல் போன்ற காரணிகள், சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை முடிவு செய்கின்றன. ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை மேற்கொண்டால் சர்க்கரை நோயைத் தடுக்க முடியும்.


கிட்டத்தட்ட ஆறரைக் கோடி இந்தியர்களுக்கு சர்க்கரை நோய் உள்ளது. 7.7 கோடி இந்தியர்கள், சர்க்கரை நோய் வருவதற்கான எல்லைக்கோட்டில் உள்ளனர். 2030-ல் இது 8.7 கோடியாக அதிகரித்துவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இனியாவது நாம் ஆரோக்கிய வாழ்வை மேற்கொண்டால் சர்க்கரை நோய் வராமல் காத்துக்கொள்ளலாம்.

சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை பெருகிவிட்டதால், இதைச் செய்யுங்கள், அதைச் செய்யுங்கள் என்று ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்தவகையில் ஆலோசனைகளை அள்ளி வீசுகின்றனர். எதையாவது செய்து நோயைக் குணப்படுத்திவிட வேண்டும் என்று மக்களும் இருக்கின்றனர்.

சர்க்கரை நோய் பற்றிய தெளிவான விவரங்களை டாக்டர்கள் இங்கே அலசுகின்றனர். இந்தக் கையேடு, சர்க்கரை நோயின் பிடியிலிருந்து நம்மை காப்பதுடன், ஆரோக்கியமான வாழ்வுக்கும் நம்மை வழிநடத்தும்.


---------------------------------------------------------
சர்க்கரை நோய் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன என்பது பற்றி முதலில் சர்க்கரை நோய் சிறப்பு நிபுணர் கருணாநிதி பேசுகிறார்.

"நாம் சாப்பிடும் உணவானது, உடலில் உள்ள திசுக்களுக்கு ஆற்றல் அளிக்கும் வகையில் குளுகோஸாக (சர்க்கரை) மாற்றப்பட்டு ரத்தத்தில் கலக்கிறது. தவிர, கல்லீரலும் குளுகோஸை உற்பத்தி செய்கிறது. இந்த குளுகோஸ், திசுக்களுக்கு ஆற்றல் அளிப்பதற்காக ரத்தத்தில் கலக்கிறது.

இந்த குளுகோஸை திசுக்களுக்கு கொண்டுபோய் சேர்க்கும் பணியை, இரைப்பைக்கு அருகில் உள்ள கணையம் என்ற உறுப்பில் சுரக்கப்படும் இன்சுலின் என்ற ஹார்மோன் செய்கிறது.

ஒருவருக்குப் போதிய அளவு இன்சுலின் சுரக்கவில்லை என்றாலோ, அல்லது சுரக்கப்படும் இன்சுலின் போதிய அளவு ஆற்றல்கொண்டதாக இல்லை என்றாலோ, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து பிரச்னையாகிறது. இதையே 'சர்க்கரை நோய்’ என்கிறோம். வளர்ச்சிதை மாற்ற நோய்களின் தொகுப்பான இதை, ஒரு 'நோய்' என்று கூறுவதைவிட, இன்சுலின் சமச்சீரற்ற நிலையால் ஏற்படும் பாதிப்பு என்று கூறுவது சரியாக இருக்கும்.

சர்க்கரை நோயானது இதய நோய்கள், பார்வை இழப்பு, சிறுநீரக செயல் இழப்பு, ரத்தக் குழாய் பாதிப்பு, நரம்பு மண்டலப் பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.

தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், பசி ஆகிய மூன்றும் சர்க்கரை நோயின் அறிகுறிகள்.

சர்க்கரை நோயால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதற்கு உடல் பருமனே முக்கிய காரணம்.

டைப் 1 சர்க்கரை நோய், டைப் 2 சர்க்கரை நோய், கர்ப்பகாலத்தில் ஏற்படும் சர்க்கரை நோய் என்று சர்க்கரை நோய் மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. தவிர சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை என்று ஒரு வகையும் உள்ளது. இதைப் 'பிரீ டயாபடிஸ்’ என்று கூறுவோம்.



டைப் 1 சர்க்கரை நோய்

நம்முடைய உடலானது, இன்சுலினை முற்றிலும் சுரக்காத நிலையை டைப் 1 சர்க்கரை நோய் என்கிறோம். இது பெரும்பாலும் குழந்தைகளுக்கே ஏற்படுகிறது. உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியானது, இன்சுலினை சுரக்கும் சுரப்பிகளை 'கிருமிகள்' என்று நினைத்து தாக்கி, அழித்துவிடும். இதனால் இன்சுலின் சுரப்பு முற்றிலும் தடைபட்டுபோகும். இவர்கள், வாழ்நாள் முழுக்க தினமும் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். அல்லது இன்சுலின் பம்ப் பொருத்திக்கொள்ள வேண்டும்.

டைப் 2 சர்க்கரை நோய்

உலக அளவில் காணப்படும் 90 சதவிகித சர்க்கரை நோயாளிகள், இந்த வகையைச் சேர்ந்தவர்கள்தான். இதில் நம் உடல் இன்சுலினை உற்பத்தி செய்யும். ஆனால் அது குறைந்த அளவாகவோ, அல்லது தேவையான ஆற்றல் இல்லாததாகவோ இருக்கும். பெரும்பாலும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு இந்த வகை சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். இவர்கள், உடல் எடையைக் குறைப்பது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைத் தொடர்ந்து கண்காணித்துக் கட்டுக்குள் வைத்திருப்பது, உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் மருந்துகள் மூலம் மேலும் பிரச்னை வராமல் தடுக்கலாம்.

கர்ப்பகால சர்க்கரை நோய்

சில பெண்களுக்குக் கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய சர்க்கரை நோய் இது. சில கர்ப்பிணிகளுக்கு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும். அதை ஈடுகட்டும் வகையில், அவர்கள் கணையத்தால் இன்சுலினைச் சுரக்க முடியாமல் இருக்கும். இதை 'கர்ப்பகால சர்க்கரை நோய்' (Gestational diabetes) என்கிறோம்.

பெரும்பாலான கர்ப்பகால சர்க்கரை நோயை ஆரோக்கியமான உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சியின் மூலம் கட்டுப்படுத்தலாம். வெறும் 10 முதல் 20 சதவிகிதத்தினருக்கே ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த மாத்திரை மருந்து தேவைப்படுகிறது. பிரசவத்துக்குப் பிறகு இந்தச் சர்க்கரை நோய் மறைந்துவிடும்.

கர்ப்பகால சர்க்கரை நோயை ஆரம்பத்திலேயே கண்டறியாவிட்டால், பிரசவ நேரத்தில் பிரச்னையை ஏற்படுத்தலாம். வழக்கமாக இருக்க வேண்டியதைவிட, அந்த சிசுவின் எடையும் அதிகமாக இருக்கலாம்.


பிரீ டயாபடிஸ் (Prediabetes)

சர்க்கரை நோயாளிகள் 6.5 கோடி பேர் இருக்கிறார்கள் என்றால், 7.5 கோடிக்கும் மேற்பட்ட பிரீடயாபடிஸ் (Prediabetes)நிலையில் மக்கள் உள்ளனர். இவர்கள் சர்க்கரை நோயாளிகள் இல்லை. ஆனால், மதில் மேல் பூனை போல் சர்க்கரை நோய் வரலாம், வராமலும் தடுக்கலாம் என்ற நிலையில் உள்ளவர்கள்.



இவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு என்பது சராசரிக்கும் (NORMAL)அதிகமாக இருக்கும், அதே நேரத்தில் சர்க்கரை நோய் என்று குறிப்பிடும் அளவுக்குக் குறைவாக இருக்கும். இவர்கள், உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மருந்து மாத்திரைகள் மூலம் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி, சர்க்கரை நோய் வராமல் தடுத்துவிட முடியும்.

--------------------------------------------------------------------

சர்க்கரை நோயை எப்படிக் கண்டறிவது?

சாதாரண ரத்த பரிசோதனை

ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கணக்கிடுவதன் மூலம் சர்க்கரை நோயைக் கண்டறியலாம். ஒருவருக்கு ரத்தத்தில் 200 மில்லிகிராம் / டெசி லிட்டர் என்ற அளவில் இருந்தால் - அவருக்கு சர்க்கரை நோய் உள்ளது என்று அர்த்தம். 140 - அதற்கு கீழ் இருந்தால் 'இயல்பான நிலை' என்று அர்த்தம். ஒருவருக்கு 140-க்கு மேல் சர்க்கரை அளவு செல்லும்போது, அவருக்கு சர்க்கரை நோய் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த மற்றொரு பரிசோதனைக்குப் பரிந்துரைக்கப்படும்.

இதன்படி, சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் ரத்தம் பரிசோதனை செய்யப்படும். இதில் 140-க்கும் குறைவாக இருந்தால் அது சராசரி. 200-க்கு மேல் இருந்தால் சர்க்கரை நோய். இதிலும் குழப்பம் என்றால், அடுத்தக்கட்டப் பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்படும்.

ஹெச்பிஏ1சி (HbA1c)பரிசோதனை

நம்முடைய ரத்தத்தில் ரத்தச் சிவப்பு அணுக்கள் உள்ளன. குளுகோஸானது இந்தச் சிவப்பு அணுவில் எளிதில் ஒட்டிக்கொள்ளும். இந்தச் ரத்த சிவப்பு அணுக்கள் எட்டு முதல் 12 வாரங்கள் வரை இருக்கும். அதன் பிறகு அவை அழிக்கப்படும். இந்தச் ரத்த சிவப்பு அணுவைப் பரிசோதனைசெய்வதன் மூலம், எட்டு முதல் 12 வாரங்களில்ல் ஒருவரது ரத்தத்தில் சர்க்கரை அளவு எவ்வளவு என்பதைக் கண்டறிய முடியும். பரிசோதனை முடிவில் 6.5 சதவிகிதத்துக்கு மேல் என்று வந்தால், அவருக்கு சர்க்கரை நோய். 5.7 முதல் 6.4 சதவிகிதம் வரை இருந்தால், சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை. 5.7 சதவிகிதத்துக்கும் கீழ் இருந்தால், அது இயல்பான அளவு (Normal).

சிலர், சர்க்கரை நோய் ரத்தப் பரிசோதனைக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் இருந்தே சரியான உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சிகள் மேற்கொண்டு சர்க்கரை அளவைக் கட்டுக்குள் கொண்டுவருவர். இவர்களுக்கு பரிசோதனை செய்யும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு சரியாக உள்ளதுபோல தோன்றும். இந்த ஹெச்பிஏ1சி பரிசோதனை செய்வதன் மூலம், மூன்று மாதக் காலத்து சர்க்கரை அளவைக் கணக்கிடலாம்.

சர்க்கரை நோய்க்கான காரணிகள்

உடல் பருமன்

டைப் 2 சர்க்கரை நோய் வருவதற்கு, உடல் பருமன் மிக முக்கியமானக் காரணம். கொழுப்புமிக்க திசுவானது இன்சுலினை ஏற்க முடியாத நிலைக்கு செல்கிறது.

வயது

45 வயதைக் கடந்தவர்களுக்கும், வயதானவர்களுக்கும் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. உடற்பயிற்சியைக் குறைத்துக்கொள்வது, எடை அதிகரிப்பது போன்ற காரணங்களால் இது ஏற்படுகிறது. இன்றைய வாழ்க்கைமுறை மாற்றங்கள் காரணமாக, 25 வயதினருக்குக்கூட சர்க்கரை நோய் வருகிறது.



துடிப்பற்ற வாழ்க்கை முறை

உடற்பயிற்சியின்றி, உட்கார்ந்த அல்லது படுத்த நிலையிலேயே இருப்பது, டைப்2 சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும். துடிப்பான வாழ்க்கைமுறையானது உடலில் கொழுப்பு சேர்வதைக் குறைக்கிறது, குளுகோஸின் பயன்பாட்டை அதிகரிக்கிறது.

மரபியல்

குடும்பத்தில் பெற்றோருக்கு சர்க்கரை நோய் இருந்தால் பிள்ளைகளுக்கும் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. பெற்றோருக்கு இருவருக்கும் சர்க்கரை நோய் இருந்தால், அவர்களின் பிள்ளைகளுக்கு சர்க்கரை நோய் வர 80-90 சதவிகிதம் வாய்ப்பு உள்ளது. பெற்றோரில் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருந்தால், பிள்ளைகளுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு 60 சதவிகிதமாக உள்ளது.

மன அழுத்தம் (Stress)

இன்றைய இளைஞர்களுக்கும்கூட சர்க்கரை நோய் வருவதற்கு மன அழுத்தம் மிக முக்கியக் காரணமாக இருக்கிறது. நம் உடலில், கவுன்டர் ரெகுலேட்டரி ஹார்மோன்ஸ் (counter regulatory hormones)என்று சில ஹார்மோன்கள் உள்ளன. இதில் முக்கியமானது கார்டிசால் (cortisol). மன அழுத்தம் உள்ளவர்களுக்கு இந்த கார்டிசால் அளவு அதிகமாக இருக்கும். இன்சுலின் செயல்பாட்டைக் குறைக்கும்.

-------------------------------------------------------------------

சர்க்கரை நோயைத் தவிர்க்கலாம்

சர்க்கரை நோயைத் தெரிந்துகொள்ளுதல்:

சர்க்கரை நோய் வராமல் எப்படித் தடுக்க வேண்டும் என்பதை, முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். இதுபற்றி முழுமையாகப் புரிந்துகொண்டால் மட்டுமே அதைத் தடுப்பதற்கான முயற்சியில் முழுமையாக ஈடுபட முடியும்.

1.உணவு கட்டுப்பாடு:

அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உணவில் சமைக்கப்பட்ட உணவின் அளவைக் குறைத்துக்கொள்ளுங்கள். அரிசி சாதத்தை குறைத்து அதற்குப்பதில், ஒரு கப் காய்கறி அல்லது பழங்களைச் சாப்பிடுங்கள். சாப்பிடுவதற்கு முன்பு ஒரு கிளாஸ் தண்ணீர் அருந்துங்கள். இது உங்கள் பசியைக் குறைத்து, உணவு எடுத்துக்கொள்ளும் அளவைக் குறைக்கும். உணவில் 40 முதல் 50 சதவிகிதம் அளவுக்கு மாவுச் சத்தும், 20 சதவிகிதத்துக்கு புரதச் சத்தும், 20 சதவிகிதத்துக்குக் கொழுப்புச் சத்தும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். மூன்று வேளை சாப்பிடுவதற்குப் பதில், அதை ஐந்து அல்லது ஆறு சிறிய பகுதி களாகப் பிரித்துச் சாப்பிடுங்கள்.

2.நார்ச் சத்து உணவு:

தினசரி உணவில் நார்ச் சத்து அதிக அளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். இது, உங்களின் செரிமான மண்டலம் சிறப்பாக செயல்பட உதவும். டைப் 2 சர்க்கரை நோய் வருவதில் இருந்து பாதுகாக்கும்.
ஒரு நாளைக்கு குறைந்தது 25 முதல் 30 கிராம் அளவுக்கு நார்ச் சத்துள்ள உணவை எடுத்துக்கொள்ளுங்கள். இது உங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

3.துடிப்பான வாழ்க்கைமுறை:

உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இல்லாதவர்கள் இனியாவது தினமும் உடற்பயிற்சி செய்யத் தொடங்குங்கள். தினமும் உடற்பயிற்சி அல்லது நீச்சல் பயிற்சி செய்வதன் மூலம் ஆரோக்கியமான எடையைப் பெறுவதுடன், ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். தினமும் குறைந்தது 30 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்வதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கலாம். எளிய பயிற்சிகள் செய்தாலே போதுமானது. உடற்பயிற்சி செய்ய முடியவில்லை என்றால், குறைந்தது நடைப் பயிற்சியாவது செய்யலாம்.

4.எடைக் குறைப்பு:

உங்கள் உயரத்துக்கு ஏற்ற எடை (பி.எம்.ஐ.) உள்ளதா என்பதை முதலில் கண்டறியவேண்டும்.  பி.எம்.ஐ. அளவு 18.5-க்கு கீழ் இருந்தால் சராசரி எடையைவிடக் குறைவு. 18.5 முதல் 24.9 வரை இருந்தால் அது சராசரி. 25 முதல் 29.9 வரை இருந்தால் உடல் எடை அதிகம், 30-க்கு மேல் இருந்தால் உடல் பருமன் என்று அர்த்தம். உங்கள் பி.எம்.ஐ. அளவு எப்போதும் 18.5 முதல் 24.9-க்குள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் குறைக்கும் ஒவ்வொரு கிலோ எடையும் உங்களுக்கான சர்க்கரை நோய் வாய்ப்பை மட்டுமல்ல, இதய நோய், உயர் ரத்த அழுத்தத்துக்கான வாய்ப்பைக் குறைக்கும்.

5.காலை உணவைத் தவிர்க்க வேண்டாம்:

காலை 7 மணி, மதியம் 12 மணி மற்றும் இரவு 7 மணிக்கு, நம்முடைய உடலின் வளர்ச்சிதை மாற்ற விகிதம் (மெட்டபாலிசம் ரேட்) உச்சத்தில் இருக்கும். இந்த நேரத்தில் சாப்பிடும்போது கூடுதல் உழைப்பு இன்றியே 500 கலோரி வரையிலான ஆற்றல் எரிக்கப்படும். இதனால் உடல் எடை அதிகரிப்பது தவிர்க்கப்படும்.

6.கொழுப்புச் சத்துள்ள உணவைத் தவிர்க்க வேண்டும்:

துரித உணவுகள் மற்றும் ஜங்க் ஃபுட்களில் அதிக அளவில் கொழுப்பு உள்ளது. இந்த உணவு வகைகளில் கெட்டக் கொழுப்பும் அதிகமாக இருப்பதால், உடலில் கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்துவிடும். மேலும், இது ரத்தத்தில் சர்க்கரை அளவையும் பாதிக்கும். இதுபோன்ற உணவுகளைத் தவிர்த்துவிட்டு, எண்ணெய் குறைவாக வீட்டில் சமைத்த உணவையே சாப்பிடுங்கள். மாதத்துக்கு ஒருமுறை வெளியில் சாப்பிடுவது தவறு இல்லை. சாப்பிட்டதும் அந்தக் கலோரிகளை செலவிடும் வகையில் ஏதேனும் பயிற்சியில் ஈடுபடுவது அவசியம்.

7.சர்க்கரை அதிகம் உள்ள பானங்களைத் தவிர்த்துவிடுங்கள்


தாகமாக இருக்கிறது என்றால், தண்ணீர், பால், மோர், இளநீர் போன்றவற்றைப் பருகலாம். அல்லது சர்க்கரை சேர்க்கப்படாத பழச்சாறு அருந்தலாம். சோடா, குளிர்பானங்கள், எனர்ஜி டிரிங்ஸ் போன்றவற்றில் அதிக அளவில் சர்க்கரை உள்ளது. இந்த இனிப்புமிக்க பானங்கள், உங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும் என்பதால் - இதைத் தவிர்த்துவிடுங்கள்.

8.சைவ உணவு நல்லது

அசைவ உணவுகள் என்னதான் சுவையானது என்றாலும், அதைத் தினமும் எடுத்துக்கொள்ளாதீர்கள். இது சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கும். அதற்குப்பதில் அதிக அளவில் பச்சைக் காய்கறிகளை எடுத்துக்கொள்ளுங்கள். இது உங்கள் உடலுக்குத் தேவையான வைட்டமின், தாது உப்புக்களை அளிப்பதுடன், சர்க்கரை நோய் வராமலும் காப்பாற்றும்.

9.மன அழுத்தம் வேண்டாம்

அதிக அளவிலான மன அழுத்தம் உங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்கிறது. எனவே, யோகா, உடற்பயிற்சி, தியானப் பயிற்சி மூலம் உங்கள் மன அழுத்த அளவைக் குறையுங்கள்.

10.தொடர் மருத்துவப் பரிசோதனை

சர்க்கரை நோய், சத்தமின்றி வரக்கூடியது. இதன் அறிகுறிகளை பெரும்பாலானவர்கள் உணர்வது இல்லை. எனவே இதை 'சைலன்ட் கில்லர்’ என்பர். எனவே, குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கண்டறியும் ரத்தப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். இந்தப் பரிசோதனையானது ப்ரீடயாபடிஸ் உள்ளதா என்பதைக் கண்டறிய உதவும். சர்க்கரை நோய் வராமல் தடுக்கும்.

11.க்ரீன் டீ பருகுங்கள்

தினமும் க்ரீன் டீ பருகுவது உங்கள் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற உதவும். இதில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுவதுடன், சர்க்கரை நோய் வராமல் காக்கும்.

12.புகை  மதுப் பழக்கத்தைக் கைவிடுங்கள்

புகைப்பிடிக்கும் நேரத்தில் ரத்த அழுத்தம் தற்காலிகமாக அதிகரிக்கும். சிகரெட் புகைப்பது இதயத் துடிப்பு, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. ஆக்சிஜன் அளவைக் குறைக்கிறது. இதயத் தசைகளைப் பாதிக்கிறது. அதேபோல, மதுப் பழக்கமும் சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்தத்துக்கு வழிவகுக்கிறது.

13.பதப்படுத்தப்பட்ட உணவைத் தவிர்ப்போம்

இன்றைக்கு உடனடி உணவு என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட நூடுல்ஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்களைக்கொண்டு விரைவாக சமைத்துச்  சாப்பிடும் பழக்கம் இன்று அதிகமாக உள்ளது. இந்த உணவுகள் சுவையாக, பார்க்க நல்ல நிறத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக அதில் சேர்க்கப்படும் பொருட்கள் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைக்கு வழிவகுத்துவிடுகிறது. ஆனால், வீட்டிலேயே உணவுகளைத் தயாரித்து சாப்பிடும்போது, அதில் நாம் என்ன சேர்க்கிறோம், எவ்வளவு சேர்க்கிறோம், அவை ஆரோக்கியமானதுதானா என்பதை நாம் அறிவோம். வீட்டில் சமைத்த உணவுகளைச் சாப்பிடுவது சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்தத்தில் இருந்து பாதுகாக்கும். இதுவரை சர்க்கரை நோய் வராமல் தடுக்க வேண்டிய வழிமுறைகளைப் பற்றி பார்த்தோம். இனி, சர்க்கரை நோய் வந்தால், அவர்களுக்கு எந்த மாதிரியான பிரச்னைகள் வரும், அதை எப்படி எதிர்கொள்வது என்பதைப் பார்க்கலாம்.
----------------------------------------------------------------

பாதிப்புகள்

சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்காவிட்டால், அது கண், கால், சருமம், இதயம், பல் ஈறுகள், நரம்பு மண்டலம், சிறுநீரக செயலிழப்பு, நரம்பு மண்டல பாதிப்பு என்று உடலின் பல்வேறு பகுதிகளைப் பாதிக்கும்.

சிறுநீரகத்தில் ஏற்படும் பாதிப்புகள்

டாக்டர் விஜயகுமார், சிறுநீரகவியல் மருத்துவர்

"ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், அது சிறுநீரகத்தைப் பாதித்து ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட வழிவகுக்கும். சர்க்கரை நோயால் சிறுநீரகம் பாதிக்கப்படுவதை 'டயாபடிக் நெப்ரோபதி' (Diabetic nephropathy). என்போம்.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போது, சிறுநீரகமானது கூடுதலாக வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் கூடுதல் பளு காரணமாக, தன் செயல்பாட்டையே நிறுத்திவிடுகிறது. நோய்க்கான அறிகுறிகள் வெளியே தெரிவதற்கு முன்பே இந்தப் பிரச்னை தொடங்கிவிடுகிறது. ஆரம்ப கட்டத்தில் சிறுநீருடன் புரதம் வெளியேறும். இதை, சிறுநீர் பரிசோதனை செய்வதன் மூலம் ஆரம்ப நிலையிலேயே கண்டறியலாம். அவ்வப்போது ரத்தப் பரிசோதனை செய்வதன் மூலம் சிறுநீரகத்தின் செயல்பாட்டைக் கண்டறிந்து ஆரம்ப நிலையிலேயே சரிப்படுத்தலாம்.

சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருப்பது, மாத்திரை- மருந்துகளை எடுத்துக்கொள்வது, ஆரோக்கிய உணவுப்பழக்கவழக்கம் ஆகியவை மட்டுமே சர்க்கரை நோயால் சிறுநீரகம் பாதிக்காமல் இருக்க வழியாகும்."


பல்  ஈறுகளில் ஏற்படும் பிரச்னை

டாக்டர் எம்.எஸ்.ரவி வர்மா, பல் மருத்துவர்

"சர்க்கரை நோயால் கண், சிறுநீரகம், பாதம் ஆகியவை பாதிக்கப்படுவதைப் போன்று அதிகம் பாதிக்கப்படுவது ஈறுகள்தான். சர்க்கரை நோய் அதிகரிக்கும்போது, பல் ஈறுகள் பலவீனம் அடைந்து பல் ஆடுதல் பிரச்னை ஏற்படும். பல்லுக்கும் ஈறுக்கும் இடையே சிறிய வாய்க்கால் போன்ற அமைப்பு உள்ளது. இது, 1.2 மி.மீ. அளவுக்கு ஆழமாக இருக்கும். இங்குதான் பற்களைப் பாதுகாக்கும் திரவம் சுரக்கிறது. பற்களில் உணவுத் துகள்கள், காரை படியும்போது ஈறு பாதிக்கப்படும். பல்லையும் எலும்பையும் இணைக்கும் தொடர்பு துண்டிக்கப்படும். இந்த ஆழமானது 3 முதல் 4. மி.மீ. அளவுக்கு ஆழமாவதை 'கம் பாக்கெட்’ என்று சொல்வோம். இந்த பாக்கெட்டில் நோய்த் தொற்று ஏற்படும்போது அது சர்க்கரை நோயின் பாதிப்பையும் அதிகரிக்கிறது. எனவே, பல்லில் நோய்த் தொற்று வராமல் பாதுகாப்பது மிகவும் அவசியம்.

தினந்தோறும் இரண்டு முறை பல் துலக்க வேண்டும். பற்களுக்கு இடையில் உள்ள அழுக்கை அகற்ற 'ஃபிளாசிங்'  மற்றும் 'இன்டர் டென்டல் பிரஷ்ஷிங்' செய்ய வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்."


காலில் ஏற்படும் பாதிப்புகள்

டாக்டர் சரவணன், வாஸ்குலர் மற்றும் டிராஸ்பிளான்ட் சர்ஜன்

"சர்க்கரை நோயாளிகளுக்கு டயாபடிக் நியோரோபதி (Diabetic neuropathy)  காரணமாக அழுத்தத்தைத் தாங்கக்கூடிய கால் பகுதியில் அடிக்கடி புண் ஏற்படும். ஒவ்வொரு ஆறாவது சர்க்கரை நோயாளிக்கும் பாதப் புண் பிரச்னை ஏற்படுகிறது. இதனால் கால் துண்டிக்கும் அளவுக்குப் பிரச்னை செல்கிறது. உலக அளவில் கால் துண்டிப்பு செய்வதற்கு, 85 சதவிகிதம் அளவுக்கு பாதங்களில் ஏற்படும் புண்ணே காரணமாக உள்ளது.

கால்களை தினசரி கவனித்தல்: வெட்டுக்காயங்கள், வெடிப்புகள், கொப்புளங்கள், சிவந்துபோய் இருத்தல், வீக்கம், நகங்களில் பிரச்னை உள்ளதா என்பதை தினசரி கவனிக்க வேண்டும். கண்ணாடி உதவியுடனோ அல்லது அடுத்தவர் உதவியுடனோ அடிப்பாதங்களைப் பார்க்க வேண்டும். ஏதேனும் வித்தியாசமாக இருந்தால், உடனடியாக டாக்டரை அணுக வேண்டும்.

அன்றாடம் கால்களைக் கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். மிதமான வெந்நீரைப் பயன்படுத்த வேண்டும். கால்களை மென்மையான துணி அல்லது பஞ்சு வைத்து கழுவ வேண்டும். அழுத்தமாகத் துடைக்காமல் ஒற்றிஒற்றி ஈரத்தை எடுக்க வேண்டும். கால் விரல்களுக்கு இடையே ஈரம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

வெறும் காலுடன் நடக்கக் கூடாது. வீட்டில்கூட செருப்பு அணிந்து நடக்க வேண்டும். புகை பிடிக்கக் கூடாது. இதனால், கால்களில் ரத்த ஓட்டம் குறையும்."


கண்ணில் ஏற்படும் பாதிப்புகள்

டாக்டர் திரிவேணி, கண் நோய் சிகிச்சை நிபுணர்

"சர்க்கரை நோயாளிகளுக்கு "கண் புரை நோய், குளுக்கோமா மற்றும் விழித்திரை பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். சர்க்கரை நோயாளிகளிடம் மிகச் சாதாரணமாகக் காணக்கூடியது டயாபடிக் ரெட்டினோபதி. பார்வை இழப்புக்கான முன்னணிக் காரணங்களில் இதுவும் ஒன்று. விழித்திரையில் உள்ள ரத்த நாளங்களில் மாற்றம் ஏற்படுத்தும் நோய் இது. கண்ணுக்குள் ரத்த நாளங்கள் வீங்கி, திரவம் கசியத் தொடங்கும். காலப்போக்கில் விழித்திரையில் ரத்த ஓட்டத்தைக் கடுமையாகப் பாதிக்கும். ரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனிகள் மற்றும் சிரைகள் பலவீனமடைந்து பழுதடையும்.

ஆரம்பத்தில் எந்த அறிகுறியும் தெரியாது. கவனிக்காமல் விட்டால் பார்வை பறிபோய்விடும். பார்வை ஆரம்பத்தில் சிறிது மங்கலாகத் தெரியும், திடீரென பார்வை போதல், ஒளியைச் சுற்றி வட்டங்கள் தெரிதல், கண் கூசுதல் போன்றவையும் ஏற்படலாம்.

'மாக்யுலா' என்பது கண்ணில் துல்லியமான, நேரடியான பார்வை ஏற்படும் பகுதி. இந்தப் பகுதியில் கசியும் திரவம் மாக்யுலாவை வீங்கச் செய்யும். இதனால் பார்வை மங்கலாகும். இந்த நிலையை மாக்யுலர் எடிமா என்கிறோம். டயாபடிக் ரெட்டினோபதி உள்ளவர்களுக்கு எந்தக் கட்டத்திலும் இந்த நிலை ஏற்படலாம்.

இதைத் தவிர்க்க நோயாளிகள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கண்களைப் பரிசோதித்துக்கொள்ளவேண்டும்.  ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்தும், ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதும் பார்வைக் கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்."

------------------------------------------------------------------

சர்க்கரை நோய்  சில சந்தேகங்கள்

சந்தேகம் 1: சர்க்கரையை அதிகம் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வரும்.

நாம் சாப்பிடும் ஒவ்வோர் உணவும் சர்க்கரையாக (குளுகோஸாக) மாற்றப்படுகிறது. எனவே, என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பது முக்கியம். அதிக அளவில் சாப்பிடும்போது கூடுதல் கலோரிகள், அதாவது உங்கள் உடலுக்கு தேவையில்லாத ஆற்றல் கிடைக்கிறது. இந்தக் கூடுதல் கலோரிகள் கொழுப்பாக சேமித்துவைக்கப்படுகிறது. இதனால் உடல்பருமன் ஏற்படும். இது பிற்காலத்தில் சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும்.

சந்தேகம் 2: சர்க்கரை நோயாளிகள் பிரத்யேகமான சர்க்கரை நோய் சிறப்பு உணவுகள் எடுக்க வேண்டும்.

சர்க்கரை நோயாளிகளுக்கென தனியே சமைக்க வேண்டும் என்று இல்லை. அவரவருக்கு ஏற்ற ஆரோக்கியமான டயட் பின்பற்றினால் போதுமானது. சர்க்கரை நோயாளிகளுக்கு என்று பிரத்யேகமான உணவு ஏதும் இல்லை. சர்க்கரை அளவை அதிகரிக்காத எந்த உணவையும் எடுத்துக்கொள்ளலாம்.

சந்தேகம் 3: சர்க்கரை நோயாளிகள் இனிப்பு, சாக்லேட் சாப்பிடக் கூடாது.

தினசரி உணவு அட்டவணைக்கு உட்பட்டு அல்லது போதுமான உடற்பயிற்சி செய்பவர்கள் இனிப்பு வகைகளை சாப்பிடலாம்.

ஆரோக்கியமான உணவு அத்தனைக்கும் தீர்வு!


சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு முறைகளை பட்டியலிடுகிறார், டயட்டீஷியன் லட்சுமி.

"சர்க்கரை நோயாளிகள் சகிக்க முடியாத அளவுக்கோ அல்லது விருந்து போன்ற உணவையோ உட்கொள்ளக் கூடாது. பிரத்யேகமான உணவுப் பழக்கத்தை பின்பற்றினாலே போதும். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தாலோ, அல்லது குறைந்தாலோ நீங்கள் சரியான மாத்திரை மருந்து மற்றும் உணவை எடுத்துக்கொள்ளவில்லை என்று அர்த்தம்.

நாம் உட்கொள்ளும் உணவு விரைவாக செரிமானமாகி ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும். இந்த உணவுகளை 'ஹை கிளைசமிக் (High glycemic) உணவுகள்' என்போம். இத்தகைய உணவுகளை குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும். குறைவான கிளைசமிக் உணவு என்பது சமைக்கப்படாதது, அதிக நார்ச் சத்து மிக்கது.



தவிர்க்க வேண்டியவை:

சர்க்கரை மற்றும் ஹை கிளைசமிக் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அதாவது, சர்க்கரை, இனிப்பு வகைகள், தேன், ஜாம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, ஊட்டச்சத்து பானங்கள், குளிர்பானங்கள், கார்பனேட்டட் பானங்கள், பிஸ்கட், மைதாவில் தயாரிக்கப்படும் கேக், பிரெட், பன், பீட்சா, பர்கர் போன்றவை.

இதேபோல, கொழுப்பு அதிகம் உள்ள வெண்ணெய், சீஸ், டால்டா, முட்டை மஞ்சள் கரு, நண்டு, இறால், ஆடு, மாட்டு இறைச்சி, மூளை, கல்லீரல், சிறுநீரகம் போன்ற இறைச்சி வகைகளைத் தவிர்க்க வேண்டும்.



குறைந்த அளவில் எடுத்துக்கொள்ள வேண்டியவை:

தேங்காய், எள், முந்திரி மற்றும் நெய், உருளைக்கிழங்கு, சேனைக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு.

10 நாட்களுக்கு ஒருமுறை என்ற அளவில் வாழைப் பழம் (பாதி அளவு), சப்போட்டா (1), மாம்பழம் (1-2 துண்டுகள்), சீத்தா பழம் (1), உலர் பழங்கள் (4-5) எடுத்துக்கொள்ளலாம்.

அசைவம் சாப்பிடுபவர்கள், வாரத்துக்கு இரண்டு முறை தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சி (80 கிராம்) அல்லது மீன் (100 கிராம்) எடுத்துக்கொள்ளலாம்.


எடுத்துக்கொள்ள வேண்டியவை:

தினசரி குறைந்த அளவில் எடுத்துக்கொள்ள வேண்டிய பழங்களை, பழச்சாறாக இல்லாமல் கடித்து சாப்பிட வேண்டும்.


ஆப்பிள், கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, அன்னாசி, நாவல் பழம், பேரிக்காய், அத்தி, மாதுளை, தர்பூசணி ஆகிய பழங்களை குறைந்த அளவில் எடுத்துக்கொள்ளலாம்.



இது வெறும் ஆலோசனைக்குதான். ஒவ்வொருவரின் வயது, செயல்பாடு, எடை, இதர நோய்களைப் பொறுத்து இந்த அளவு மாறுபடும். எனவே, உங்கள் டாக்டர் மற்றும் டயட்டீஷியனின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.

ஆரோக்கியமான உணவுப்பழக்கவழக்கம், உடற்பயிற்சி, மருந்து - மாத்திரைகளை சரியாக எடுத்துக்கொள்வது, குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை என்று இருந்தால் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம்; வந்தாலும் அதை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும்."
------------------------------------------------------------------------------


வீட்டில் உள்ளது எளிய தீர்வு!

சர்க்கரை நோய் குறித்து ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் கௌதமன் கூறுகையில், "மெள்ள மெள்ள உயிரைக் குடிக்கும் சர்க்கரை நோயை, ஆயுர்வேதத்தில் 'பிரமேகம்' என்று சொல்வோம். நோயின் மூலக்காரணம், நோயின் விளைவு, நோயல் ஏற்படும் உடல் மற்றும் செயலில் மாறுபாடுகளை அடிப்படையாகக்கொண்டு இந்த நோயை 20 வகைகளாகப் பிரிக்கலாம். உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, உடல் உழைப்பை அதிகரித்தல் மூலம் சர்க்கரை நோயாளிகளும் மற்றவர்களைப் போல ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ முடியும். உணவில் கறிவேப்பிலை, மஞ்சள், கொத்துமல்லி, பூண்டு, சீரகம், கருஞ்சீரகம், வெந்தயம் போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும்" என்றவர், ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் சில உணவுப் பொருட்களைப் பட்டியலிட்டார். இவற்றை டாக்டர்களின் ஆலோசனையின்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கண்டிப்புடன் கூறுகிறார் டாக்டர் கௌதமன்.


1.நாவல்

சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் முக்கிய மூலிகை, நாவல். நாவல் மரத்தின் இலை, பழம், விதை என ஒவ்வொரு பகுதியும் சர்க்கரை நோயாளிகளுக்கு உதவியாக உள்ளது. நாவல் பழம் எப்போதெல்லாம் கிடைக்கிறதோ, அதை உங்கள் உணவில் ஒரு பகுதியாக மாற்றிக்கொள்ளுங்கள். இந்தப் பழமானது கணையத்துக்கு மிகவும் நல்லது. பழத்தின் விதையை காயவைத்து பொடித்து வைத்துக்கொள்ளுங்கள். இந்தப் பொடியை தினமும் இரண்டு வேளை தண்ணீரில் கலந்து குடித்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.


2.பாகற்காய்

தினமும் பாகற்காய் சாற்றை வெறும் வயிற்றில் குடிப்பதும், வாரத்துக்கு இரண்டு-மூன்று நாட்களுக்கு பாகற்காயை உணவில் சேர்த்துக்கொள்வதும் சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். பாகற்காயின் விதையை நீக்கிவிட்டு, அதனுடன் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டி அப்படியே குடிக்க வேண்டும்.



 3.வெந்தயம்

சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் மற்றோர் உணவுப் பொருள் வெந்தயம். முந்தைய நாள் இரவில் ஒரு டம்ளர் நீரில் இரண்டு ஸ்பூன் வெந்தயத்தைப்போட்டு ஊறவிட வேண்டும். அடுத்த நாள் காலையில், இந்த வெந்தயம் மற்றும் தண்ணீரை வெறும் வயிற்றில் அருந்த வேண்டும். தொடர்ந்து இதைச் செய்துவந்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு தானாக குறையும். இதனுடன் பாலில் இரண்டு ஸ்பூன் அளவுக்கு வெந்தயப் பொடியைச் சேர்த்து பருகுவதும் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

4.கொய்யா

இதில் அதிக அளவில் உள்ள வைட்டமின் சி மற்றும் நார்ச் சத்தானது ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். இருப்பினும், கொய்யாவைத் தோலுடன் சேர்த்து சாப்பிடும்போது அது சர்க்கரை அளவை அதிகரித்துவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, தோலை நீக்கிவிட்டு சாப்பிடலாம். அதற்காக அதிக அளவில் கொய்யா சாப்பிடுவது ஏற்றதும் இல்லை.

5.நெல்லிக்காய்

ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த இந்திய மருத்துவ முறைகளில் பெருமளவில் பயன்படுத்தப்படுவது, அரை நெல்லிக்காய். இதில் அதிக அளவில் வைட்டமின் சி இருப்பதால், நெல்லிக்காயை அரைத்து அதன் சாற்றைக் குடிப்பது கணையத்தைத் தூண்டும். இரண்டு நெல்லிக்காய்களை எடுத்து, அதன் விதையை அகற்றிவிட்டு அரைத்து சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டு டீஸ்பூன் அளவு சாற்றை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். ஒருநாள் பாகற்காய் சாறு, ஒருநாள் நெல்லிக்காய் சாறு என்று குடிக்கலாம். இதைத் தொடர்ந்து செய்துவந்தால் சர்க்கரையை நாம் கட்டுக்குள் வைக்கலாம்.


6.பட்டை

உணவில் சேர்க்கப்படும் 'பட்டை'யைப் பொடி செய்துகொள்ள வேண்டும். நான்கு டீஸ்பூன் பட்டைப் பொடிக்கு, நான்கு டம்ளர் தண்ணீர் சேர்க்க வேண்டும். இதை, குறைந்த அளவு வெப்பத்தில் அரை மணி நேரம் கொதிக்கவிட வேண்டும். பட்டையில் உள்ள ரசாயனம் நீரில் நன்கு கலந்துவிடும். இந்த நீரை ஆறவைத்து அருந்தினால் சர்க்கரை, கட்டுக்குள் இருக்கும்.

7.பூண்டு

பூண்டில் 400-க்கும் மேற்பட்ட ரசாயனங்கள் உள்ளன. இதன் பலன்கள் அளவற்றது. சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆற்றல் பூண்டுக்கும் உள்ளது. சர்க்கரை நோயாளிகள் மருந்துகளுடன், அவர்களுக்கான பிரத்யேக உணவில் பூண்டையும் சேர்த்துக்கொள்ளலாம். இதில் உள்ள சில ரசாயனங்கள், இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது. கல்லீரலானது இன்சுலினின் ஆற்றலை குறைப்பதைத் தவிர்த்து, உடலுக்குப் போதிய அளவு இன்சுலின் கிடைக்கச் செய்கிறது.

--------------------------------------------------------------------------------

சர்க்கரை நோயாளிகள் கவனத்துக்கு:

சர்க்கரை நோயாளிகளுக்கு, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தல் அல்லது சர்க்கரை அளவு குறைதல் என்று இரண்டுவிதமான பிரச்னைகள் ஏற்படலாம்.

ஏன் அப்படி ஏற்படுகிறது எனவும், சர்க்கரை நோயாளிகளின் குடும்பத்தார் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்தும் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் கே.பரணிதரன் விளக்குகிறார்.

"ரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பது மட்டும் பிரச்னை இல்லை. சர்க்கரை அளவு குறைவதுகூட பிரச்னையை ஏற்படுத்தும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போது, அதைக் கட்டுப்படுத்த மருந்துகள் எடுக்கப்படும்.

டைப் 1 சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் எடுத்துக்கொள்வார்கள். இது ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைத்துவிடும். இப்படி ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதை 'ஹைபோகிளைசீமியா' (Hypoglycemia) என்போம்.

இதுதவிர, மது அருந்துதல், சாப்பிடாமல் இருப்பது போன்றவையும் ரத்தத்தில் சர்க்கரை, அளவைக் குறைக்கும். சர்க்கரை நோயுடன், சிறுநீரகப் பிரச்னை இருப்பவர்களுக்கு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவதற்கான வாய்ப்பு அதிகம்.

சர்க்கரை அளவு குறையும்போது சோர்வு, வியர்த்தல், நெஞ்சு படபடப்பு, பசி, மயக்கம், இயல்பாக இருக்க முடியாத நிலை ஏற்படலாம். இந்தப் பிரச்னையைத் தவிர்க்க, சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் எடுத்துக்கொள்ளும்போது, சரியான நேரத்துக்கு சாப்பிட வேண்டும். அப்படி சரியான நேரத்துக்கு சாப்பிட முடியாத சூழ்நிலையில் இருந்தால், பிஸ்கட், சாக்லேட் போன்றவற்றை சிறிது எடுத்துக்கொள்ளலாம். சரியான நேரத்தில் சாப்பிட முடியாதவர்கள் ஹைபோகிளைசீமியா வராமல் தடுக்க டெக்ட்ஸ்ட்ரோஸ் (dextrose)என்ற மாத்திரை எடுத்துக்கொள்ளலாம். இந்த மாத்திரையைப் போட்டுக்கொண்டு சூழ்நிலையைச் சமாளித்துவிட்டு, விரைவாக வந்து சாப்பிட வேண்டும்.

சர்க்கரை அளவு 70-க்கு கீழ் சென்று, மேலே சொன்ன அறிகுறிகள் தோன்றினால், அவர்கள் உடனடியாக சர்க்கரை, சாக்லேட், பிஸ்கட் என, உடனடியாக சர்க்கரை அளவை உயர்த்தும் உணவுப் பொருள் எதையாவது சாப்பிட வேண்டும். அவரால் சாப்பிட முடியாத அளவுக்கு நிலைமை சென்றால், அருகில் உள்ளவர்கள் சர்க்கரை நீர், ஜூஸ் போன்றவற்றை அளிக்கலாம்.

டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும் பிரச்னை பெருமளவு வராது. ஆனால், இவர்கள் காய்ச்சல் போன்ற உடல் நலக் குறைவு நேரத்தில் வழக்கமான 'டோஸ்' எடுத்துக்கொள்ளலாமா, அல்லது குறைவான 'டோஸ்' எடுத்துக்கொள்ளலாமா என்று டாக்டரிம் கேட்டு, அதன்படி மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தச் சர்க்கரை நோயாளிகள் சிகிச்சைமுறையை சரியாகப் பின்பற்றவில்லை எனில், அவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவானது 300-க்கு மேல் சென்றுவிடும். இதை 'ஹைபர்கிளைசீமியா'(Hyperglycemia)என்போம். இவர்களுக்கும் ஹைபோகிளைசீமியா போலவே மயக்கம், குழப்பம் போன்ற அறிகுறிகள் இருக்கும். இந்த அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு கொண்டுசென்று சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.

ஒருவருக்கு சர்க்கரையின் அளவு அதிகரித்துள்ளதா, குறைந்துள்ளதா என்பதை தெரிந்துகொள்ள, ஒவ்வொரு சர்க்கரை நோயாளியின் வீட்டிலும் குளுக்கோஸ் மீட்டர் இருக்க வேண்டியது அவசியம்.

மேலைநாடுகளில் உள்ள சர்க்கரை நோயாளிகள் 'நான் சர்க்கரை நோயாளி' என்று பேட்ஜ் அணிந்திருப்பர். இது அவர்களுக்கு மயக்கம், தன்னிலை இழத்தல் போன்ற பாதிப்பு ஏற்படும்போது காப்பாற்ற உதவியாக இருக்கும். அதேபோல நாமும் பேட்ஜ் அணியலாம்" என்றார்.

- பா.பிரவீன்குமார்