About Me

My photo
I am an IT professional, Nowadays our Lifestyle is changed a lot and of course we are chasing money. In India More than 7 crore people affected by Diabetes, High Cholesterol and infertility due to their Poor Food Habits &amp Lifestyle. This Blog is very useful for youngsters to lead good Lifestyle and be healthy and students to choose career courses.Work hard, but make time for your love, family and friends. Nobody remembers Powerpoint presentations on your Final Day.I believe Life is ours and we only Live our Life.... Thanks for visiting and welcome you to visit again. WHO LOVES GOD ARE SEARCHING GOD, WHO LOVES PEOPLE ARE LIVING AS GOD - SK ( Reach me @ +91 9791139942 to lead Healthy Family Life )

Monday 19 December 2016

Health guide

நம்மை காக்கும் இம்யூனிட்டி! - ஹெல்த்தி வழிகாட்டி


ல்லா நோய்களும், எல்லோரையும் இலக்காக்குவது இல்லை. ‘‘நான் ஆஸ்பத்திரி பக்கம் போயே, 10 வருஷம் ஆச்சு’’ என்கிறார் ஒருவர். அதே ஊரில் இன்னொருவருக்குப் புதுப் புதுப் பெயர்களில் காய்ச்சல் வந்து போகிறது. ஊரில் எந்தக் காய்ச்சலையும் அறிமுகப்படுத்தும் முதல் நபராக அவர் இருக்கிறார். இதற்கு என்ன காரணம்? இரண்டாம் நபருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லை. எனவே, நோயை எதிர்த்துப் போராட சக்தி இல்லாமல், அவரது உடல் எல்லா நோய்களையும் தனக்குள் தங்க அனுமதிக்கிறது. ஒரு வீட்டில் நுழையும் ‘டெங்கு கொசு’ அனைவரையும் கடித்தாலும், அதில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவருக்கு மட்டுமே, டெங்கு காய்ச்சல் வரும். எதிர்ப்பு சக்தி வலுவாக இருப்பவருக்கு வராது. இதுதான் நோய் எதிர்ப்பு சக்தியின் வலிமை.

மனித உடல் ஓர் அற்புத இயந்திரம். இயந்திரங்கள் பழுதானால், அவற்றால் தாமாகவே சரியாக முடியாது. ஆனால், நம் உடல் அப்படி அல்ல. அது தன்னைத் தானே பழுது பார்த்துக்கொள்வதோடு, மீண்டும் அந்தப் பிரச்னை வராது இருப்பதற்காகத் தயாராகிறது. உடலின் இந்தப் பேராற்றல்தான் `நோய் எதிர்ப்பு சக்தி'.  

உடல் எப்போதும் வலிமையோடும் ஆரோக்கியத்தோடும் இருக்க வேண்டியது அவசியம். இதற்கு உணவு மட்டும் போதாது. நம் பழக்கவழக்கங்கள், வாழ்க்கைமுறை, உடற்பயிற்சி என அனைத்தும் ஒன்றிணையும் போதுதான் நோய் எதிர்ப்பு சக்தியின் ஆற்றல் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப் பதற்கான வழிமுறைகளை விவரிக்கிறார் பொதுநல மருத்துவர் முத்தையா. சக்தி தரும் உணவுகள் பற்றி பட்டியலிடுகிறார் ஆயுர்வேத மருத்துவர் வெங்கடேஷ்வரன். அவற்றின் பலன்களைச் சொல்கிறார், உணவியல் நிபுணர் அனிதா.

நோய் எதிர்ப்பு சக்தி

நம் ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் (WBC) இருக்கும். இதுதான் நோய்க் கிருமிகளை அழிக்கும் சக்திகொண்டது. 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஒரு மைக்ரோ லிட்டரில் 3500-16,000 அளவிலும், பெரியவர்களுக்கு 3500-11,000 என்ற அளவிலும் இருக்கும். வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்தால், கிருமிகளுக்கு எதிராகப் போராடும் சக்தியை நம் உடல் இழந்துவிடும். ஒருவருக்கு சளி, காய்ச்சல் போன்ற பிரச்னைகள் திரும்பத் திரும்ப வருகிறது என்றால், அவர் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர் என அர்த்தம். நோய் எதிர்ப்பு சக்தி என்பது, நம் உடலின் இயல்பான ஒன்று. உணவு, வாழ்க்கைமுறை, உடற்பயிற்சி எனப் பல வழிகளில் நாம் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற்று, ஆரோக்கியமாக வாழலாம்.

பிறந்த குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் முதிர்ச்சி அடைந்திருக்காது. எனவே, தாய்ப்பால் வழியாகக் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. அதனால்தான், `குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் மட்டுமே அளிக்க வேண்டும். அதன் பிறகு, தாய்ப்பால் புகட்டுவதுடன், வேறு உணவுகளையும் அளிக்கலாம். கட்டாயம் ஓராண்டு வரை தாய்ப்பால் புகட்ட வேண்டும்’ என்கின்றனர் மருத்துவர்கள்.

அதேபோல், நமக்கு வயதாகும்போது நமது நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கும் வயதாகிறது. இதனால், வயதானவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும். முதுமையில், அலர்ஜி அல்லது சுவாசத் தொற்று உண்டாகும். எனவே கவனம் தேவை.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கான காரணங்கள்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் வைட்டமின்கள்

வைட்டமின் சி: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதில் மிக முக்கியமானது வைட்டமின் சி. வைட்டமின் சி குறையும்போது, நோய் எதிர்ப்பு சக்தியும் குறைய ஆரம்பிக்கும். வைட்டமின் சி மாத்திரைகள் ஜலதோஷத்தைத் தடுப்பதற்கும் குணப்படுத்துவதற்கும் நல்ல நிவாரணி என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு, சராசரியாக 500 மி.கி அளவு வைட்டமின் சி மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும். 

பெரிய நெல்லிக்காய், கொய்யாப்பழம் போன்றவற்றில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது, சளி முதல் புற்றுநோய் வரை நோய் வராமல் பாதுகாக்கும்.
வைட்டமின் ஏ மற்றும் டி: வைட்டமின் ஏ மற்றும் டி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கின்றன. வைட்டமின் ஏ பார்வைக் குறைபாடுகளைப் போக்குகிறது, வைட்டமின் டி எலும்பு உறுதித் தன்மைக்கு அவசியமாகிறது. 
வைட்டமின் ஏ நிறைந்த அகத்திக்கீரை, முருங்கைக்கீரை, சுண்டைக்காய், கேரட், தக்காளி, பொன்னாங்கண்ணிக்கீரை, பசுநெய், வெண்ணெய் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 

பசலைக்கீரை, அரைக்கீரை, காலிஃப்ளவர், சுண்டை வற்றல், ஆட்டு ஈரல், எள், பால், தயிர், நெல்லிக்காய் போன்றவை ரத்த விருத்திக்கு மிகவும் அவசியம். சர்க்கரை வள்ளிக்கிழங்கு, காளான் போன்றவை குழந்தைகளுக்கு ஏற்றவை.
வைட்டமின் பி: பி6 வைட்டமின் நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு உயிரி ரசாயன விளைவுகளுக்கு (biochemical reactions) உதவுகிறது. சில வகை பி வைட்டமின்கள்,  ரத்த அணுக்கள் உற்பத்திக் குறைபாட்டை சரிசெய்யப் பயன்படுகின்றன. இவை, ரத்தசோகை மற்றும் நரம்பு மண்டலப் பாதிப்பை சீர்செய்யும். 

வைட்டமின் இ: சிறந்த ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்படும். புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது. முதுமை அடைதலையும் குறைப்பிரசவத்தையும் தடுக்க உதவுகிறது.
துத்தநாகம்: நம்முடைய செல்கள் ஃபிட்டாக இருந்தால்தான், நோய்க்கிருமிகளுக்கு எதிராகச் செயல்பட முடியும். இதற்கு, துத்தநாகம் அவசியம். வைரஸ் கிருமிகளை எதிர்க்கும் ஆற்றலை துத்தநாகம் அளிக்கிறது. 

கடலைப் பருப்பு, உலர்ந்த தேங்காய், எள் போன்றவற்றில் துத்தநாகம் உள்ளது.

மக்னீசியம்: இது இல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தி முழுமை பெறாது. உடலில் நடக்கும் 300-க்கும் மேற்பட்ட உயிரி மாற்றங்களுக்கு இது அவசியம். சிறுநீரகம் உள்ளிட்ட ஒவ்வோர் உறுப்பின் ஆரோக்கியமான செயல்பாட்டுக்கும் இது அவசியம். கீரைகள், கோதுமைப் புல், நட்ஸ், விதைகள் போன்றவற்றில் மக்னீசியம் நிறைவாக உள்ளது.

தடுப்பூசிகள்
உயிரைப் பறிக்கும், உடல் உறுப்புகளை செயலிழக்கச் செய்யும் மிக மோசமான கிருமிகளுக்கு எதிராகத் தற்போது தடுப்பூசிகள் வந்துவிட்டன. இவை, குறிப்பிட்ட சில மோசமான நோய்களின் பாதிப்பில் இருந்து நம்மைக் காக்கின்றன.
குழந்தைகளுக்கு 15 வயது வரையிலும், பெண்களுக்குக் கர்ப்பக் காலத்திலும், இருபாலருக்கும் முதுமையின்போதும் போடப்படும் பிரத்யேகத் தடுப்பூசிகள் உள்ளன. குறிப்பாக, டெட்டனஸ், ரேபிஸ், இன்ஃபுளூயன்சா, ஜுரத்துக்கான தடுப்பு ஊசிகள், ஆஸ்துமா, சர்க்கரைநோய் போன்ற வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிமோனியா தடுப்பூசி ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

நோய் எதிர்ப்பு சக்தி மேம்பட...

 பிறந்த குழந்தைகளுக்குத் தாய்ப்பாலே போதுமான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுத்துவிடும். அதுவே, முதல் ஒரு வருடத்துக்கு சின்ன அம்மை, தட்டம்மை, மணல்வாரி அம்மை உட்பட சில நோய்களில் இருந்து காக்கும் ஆற்றல் உடையது.  

 பெரிய குழந்தைகளுக்கு, தயிரையும் யோகர்ட்டையும் கொடுக்கலாம். இதில் உள்ள புரோபயாட்டிக், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். 

 சிறுநீரகக் கல் உருவாகி அவதிப்படுபவர்கள் வாழைத்தண்டு, முள்ளங்கி போன்ற காய்கறி உணவுகளை உண்டால் கல் சேர்வதைக் குறைக்கலாம்.

 கோடைக்காலத்தில், வெயிலில் வெளியே செல்ல நேர்பவர்கள் சிறிது உப்பு குறைவாக சேர்க்கப்பட்ட மோர் குடிப்பது அவசியம்.
 வயதானவர்களுக்கு ஏற்படும் ஞாபகமறதியைத் தடுப்பதற்கு, தனிமையைத் தவிர்ப்பது நல்லது. ஞாபகசக்தியைக் கூட்டுவதற்கு, உணவில் வல்லாரைக்கீரையைச் சேர்த்துக்கொள்ளலாம்.
வெயிட் லிஃப்ட்டிங் செய்பவர்கள், ஜிம் பயிற்சிகளில் ஈடுபடுபவர்கள், விளையாட்டு வீரர்கள் நல்ல கொழுப்பு அதிகம் உள்ள பிஸ்தா, பாதாம், வால்நட் முதலியவற்றைத் தினமும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

வாழ்க்கைமுறை

ஆரோக்கியமான உணவுகள், முறையான உடற்பயிற்சி, சரியான ஓய்வு மூன்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

உடலுக்குத் தேவையான புரதம், வைட்டமின்கள், கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, தாதுஉப்புக்கள், நீர்ச்சத்து, நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்த சமச்சீரான உணவை உண்ணவேண்டியது முக்கியம். இந்த சமச்சீர் உணவில் மாற்றம் ஏற்படும்போது, உடலுக்குத் தேவையான ஆற்றல் விகிதத்திலும் மாற்றம் ஏற்படும். எனவே, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படும்.
ஏதேனும் ஓர் உடற்பயிற்சி, விளையாட்டில் ஈடுபடுவது உடலையும் மனதையும் ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்க மிகவும் உதவும். உடற்பயிற்சி, உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான சுலபமான வழியாகவும் இருக்கிறது. 

நடைப்பயிற்சி, ஜாகிங், நீச்சல், சைக்கிளிங் போன்ற கார்டியோ பயிற்சிகள் நமது இதயத்தையும் நுரையீரலையும் மேம்படுத்தும்; மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்; அதன் மூலம் உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டி,  முழு உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் பெரிதும் உதவுகின்றன.

மனித உடலுக்கு உழைப்பைப்போலவே ஓய்வும் முக்கியம். ஓய்வின்போதுதான் உடல் தன்னைப் புதுப்பித்துக்கொண்டு, இறந்த செல்களை நீக்கி, புதிய செல்களை உருவாக்கி வளர்சிதை மாற்றத்தைச் செய்துகொள்கிறது. இதனால், நோய் எதிர்ப்பு மண்டலம் மேம்படுகிறது. உறக்கம் கெடும்போது, வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படுவதால், நோய் எதிர்ப்பு சக்தியும் குறைகிறது. இதனால், ஒபிஸிட்டி முதல் நரம்புப் பிரச்னைகள் வரை ஏற்படுகின்றன.

இயற்கையோடு இயைந்த வாழ்க்கைமுறை ஆரோக்கியம் காக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவும். உதாரணமாக, பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தாமல் இருப்பது, மண் பாத்திரங்களில் சமையல் செய்வது, ஆர்கானிக் காய்கறிகள், பழங்களைப் பயன்படுத்துவது போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 

வெயிலில் உடலுக்குத் தேவையான வைட்டமின் டி உள்ளது. இது, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். தோல் நோய்கள் உட்பட பல்வேறு பிரச்னைகளில் இருந்து காக்கும். தினமும் குறைந்தது 15-20 நிமிடங்களாவது வெயில் உடலில் படும்படி இருப்பது மிகவும் நல்லது.

ஃப்ரிட்ஜில் பதப்படுத்திய பொருட்களைத் திரும்பத் திரும்ப எடுத்துச் சூடாக்கி உண்பதைத் தவிர்க்க வேண்டும். இப்படிச் சாப்பிடும்போது உணவுப்பொருளில் வேதி மாற்றம் ஏற்பட்டு உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும்.

நடப்பது உடலுக்கு மிகவும் நல்லது. ஒன்றிரண்டு மாடி உள்ள கட்டடங்களில் லிஃப்ட்டைப் பயன்படுத்தாமல், படிகளை உபயோகிப்பது ஆரோக்கியத்துக்கு நல்லது.

புகைபிடிப்பதும், மது அருந்துவதும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு எமன். எனவே, இவற்றைத் தவிர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தி மேம்படவும் ஆரோக்கிய வாழ்வு அமையவும் மிகவும் முக்கியம்.

ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள்

தினசரி கொதிக்கவைத்து ஆறவைத்த குடிநீரைப் பருகுவது நல்லது. சராசரியாக இரண்டு, மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

ஒரே மாதிரியான உணவு உண்பதைத் தவிர்த்துவிட்டு, அனைத்துவிதமான உணவுகளையும் தேவையான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அனைத்து விதமான சத்துக்களும் கிடைக்கும்.
வானவில் வண்ணக் காய்கறிகள், பழங்களை தினம் ஒரு வண்ணம் என உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

சராசரியாக ஒரு நாளைக்கு ஆணுக்கு 60 மி.கி, பெண்ணுக்கு 50 மி.கி புரதச்சத்து அவசியம். பருப்பு மற்றும் பயறு வகைகளில் புரதச்சத்து அதிகமாக உள்ளது. மாமிச உணவுகளைக் காட்டிலும், மிகவும் அதிகமாக சோயாபீன்ஸில் புரதம் உள்ளது. 

சோயா, கறுப்பு உளுந்து, கொள்ளு, பச்சைப் பயறு, பட்டாணி, ராஜ்மா, கடலைப் பருப்பு போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் உட்கொள்ள வேண்டும்.

மாவுச்சத்தும் அவசியம். மைதா போன்ற சத்துஇல்லாத, அதிக அளவில் பக்குவப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

சிறுதானியங்கள், தீட்டப்படாத அரிசி மற்றும் முழுக்கோதுமை போன்ற தானியங்கள் மிகச்சிறந்தவை.
கொழுப்புச்சத்து மிகவும் அவசியம். கொழுப்பை முற்றிலுமாகத் தவிர்ப்பது தவறு. குறைந்தது 10 - 20 சதவிகிதக் கொழுப்புச்சத்து அவசியம். இதற்கு, நாம் தினசரி பயன்படுத்தும் கடலை எண்ணெயும் நல்லெண்ணெயுமே போதுமானவை. ஒருவருக்கு, ஒரு நாளைக்கு, நான்கு டீஸ்பூன் எண்ணெய் போதுமானது.

வேப்பிலைத் தண்ணீர்க் குளியல், வேப்பிலையை அரைத்துப் பூசுவது, மஞ்சளை அரைத்துப் பூசுவது, பயத்தம் பருப்பு மாவு, சீயக்காய் போன்றவற்றைப் பயன்படுத்துவது நல்லது.

மஞ்சள், இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், ஏலம் போன்றவற்றை தினசரி சேர்த்துவர அவை எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நம்மை நோயில் இருந்து பாதுகாக்கும். மஞ்சள் தூளை வீட்டில் தயாரிப்பது நல்லது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிற்றுண்டிகள்

ருப்பு அடை, காய்கறி தோசை, ராகி அடை, வெண்பொங்கல், சாம்பார், வெந்தயக்களியுடன் கருப்பட்டி, நல்லெண்ணெய். 

மாதம் ஒரு முறை வேப்பம்பூ ரசம்.

குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்குச் சத்துமாவுக் கஞ்சி, இட்லி, சாம்பார், சட்னி. இட்லி மாவுடன் கொத்தமல்லி, கேரட், பீன்ஸ் கலந்துகொள்வது நல்லது.
வாரம் ஒரு முறை சுண்டை வற்றல் குழம்பு (பொரித்த சுண்டை வற்றல்).

முருங்கைக்கீரை சூப், காளான் சூப், காய்கறி சூப்.

ருப்பு, பூண்டு, மிளகு, சீரகம் சேர்த்த ரசம். தக்காளி, பூண்டு, மிளகு சேர்த்த ரசம். நெல்லிக்காய்த் துவையல், கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை சேர்த்த துவையல்.

யிர், குடலில் உள்ள நன்மை செய்யக்கூடிய பாக்டீரியாக்களைப் பாதுகாக்கும்.

தேங்காய், பருப்பு, பசுநெய் சேர்த்துச் செய்த பொன்னாங்கண்ணிப் பொரியல்.

வெள்ளைச் சீனி சேர்க்காத தேநீர்.

சைவ உணவு உண்பவர்கள் குளிர்காலங்களில் நாட்டுக்கோழி சூப் சாப்பிடலாம்.

தவிர்க்க வேண்டியவை...
பேக்கரி உணவுகளான கேக், பன், பிரெட், நூடுல்ஸ், ஜங்க் ஃபுட்ஸ், குளிர்பானங்கள், பாக்கெட்டில் அடைத்த சிப்ஸ்கள், சாக்லேட், மிட்டாய்கள், செயற்கைச் சுவை சேர்க்கப்பட்ட சைவ, அசைவ உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும்.

உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்க,  ஊறுகாய், சிப்ஸ், அப்பளம், வற்றல், கருவாடு போன்ற உப்பு அதிகமாக உள்ள பண்டங்களைத் தவிர்க்கவேண்டியது அவசியம்.


நோய் எதிர்ப்பு சக்திக்கு... 

எனர்ஜி டிரிங்க்ஸ் 

கொரிமேட்டோ ஜூஸ்

தேவையானவை: கொத்தமல்லி இலை - 1 கப், தக்காளி - 4, புதினா - 1 கைப்பிடி, எலுமிச்சைப்பழச் சாறு - 2 டீஸ்பூன், சீரகத்தூள், உப்பு - தலா 1/4 டீஸ்பூன், பனங்கற்கண்டு அல்லது தேன் - தேவையான அளவு.
செய்முறை: கொத்தமல்லி, தக்காளி, புதினா, எலுமிச்சைப்பழச் சாறு, சீரகத்தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்க வேண்டும். பின், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வடிகட்டவும். இறுதியாக, வடிகட்டிய சாறுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து நன்றாகக் கலக்கிப் பரிமாறவும்.

பலன்கள்: தக்காளியில் வைட்டமின் ஏ மற்றும் சி அதிக அளவில் உள்ளன. இவை, நம் உடலில் உள்ள நோய்க்கிருமிகளின் தாக்குதலைத் தடுக்கும். புதினா இலையில் உள்ள வைட்டமின் பி மற்றும் இரும்புச்சத்து, காய்ச்சல், காமாலை போன்றவற்றைக் குணமாக்கும். கொத்தமல்லியில் உள்ள ஏ,பி,சி சத்துக்கள், மாலைக்கண் நோய், சிறுநீரகக் கோளாறு முதலியவற்றைப் போக்கும்.

கிவி ஜூஸ்

தேவையானவை: கிவிப் பழம் - 4, இஞ்சித் துருவல் - 1/4 டீஸ்பூன், பனங்கற்கண்டு / தேன் - தேவையான அளவு.
செய்முறை: கிவிப் பழத்தைத் தோல் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக்கி இஞ்சித் துருவலுடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். பின், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வடிகட்டவும். இறுதியாக, வடிகட்டிய சாறுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்தால் சுவை பிரமாதமாக இருக்கும்.

பலன்கள்: கிவிப் பழத்தில் கொழுப்புச்சத்து மிகவும் குறைந்த அளவில் உள்ளது. உடல் எடையைக் குறைக்க உதவும். கிவியில் உள்ள வைட்டமின் சி, நோயைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது. இஞ்சி, மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நேரங்களில் அடிவயிற்றில் உண்டாகும் வலிகளைக் குறைக்கிறது.

கேட்டி - டாட்டி மிராக்கிள்

தேவையானவை: 
கேரட் துருவல் - 1 கப், தக்காளி - 3, நறுக்கிய வெள்ளரிக்காய் - 1 கப், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், பனங்கற்கண்டு - தேவையான அளவு.
செய்முறை: கேரட், தக்காளி, வெள்ளரிக்காய், எலுமிச்சைப்பழச் சாறு, பனங்கற்கண்டு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்க வேண்டும். பின், வடிகட்டி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து காலை நேர உணவுடன் எடுத்துக்கொள்ளலாம்.
பலன்கள்: வைட்டமின் ஏ, சி நிறைந்த ஜூஸ் இது. எளிதில் செரிமானம் ஆகும். காசநோய், நுரையீரல் நோய், ஆஸ்துமா போன்ற மூச்சுக்குழல் நோய்களைக் குணமாக்கும். கேரட்டில் உள்ள பீட்டாகரோட்டின் கண்புரை நோய் வராமல் பாதுகாக்கும். வெள்ளரி, உடலுக்குக் குளிர்ச்சியைத் தந்து, சிறுநீர் வெளியேற உதவும். கண்பொங்குதல் பிரச்னை நீங்கும்.

ஆப்பிள் - கேரோ பன்ச்

தேவையானவை: தோல், விதை நீக்கிய ஆப்பிள் - 1 கப், கேரட் துருவல் - 1/2 கப், எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்,  பட்டைத்தூள் - 1 சிட்டிகை, இஞ்சி - சிறு துண்டு, தேன் - தேவையான அளவு.
செய்முறை: கேரட், இஞ்சி, பட்டைத்தூள் உடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு விழுதாக அரைத்து வடிகட்டி தனியாக வைக்க வேண்டும். பின், ஆப்பிளுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து அரைத்து வடிகட்டி, சாறு எடுக்க வேண்டும். இப்போது, இரண்டு சாறுகளையும் ஒன்று சேர்த்து, தேவையான அளவு தண்ணீர், தேன் விட்டு, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து அருந்தலாம். இனிப்பு வேண்டாம் என்பவர்கள் தேன் சேர்க்காமலே அருந்தலாம்.
பலன்கள்: கேரட்டில் உள்ள பொட்டாசியம், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க உதவும். ரத்தப் புற்றுநோயைக் கட்டுப்படுத்த உதவும். இஞ்சி, இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பைக் கரைக்கும். மெத்தத்தில் இந்த ஜூஸ், இதய நோய் மற்றும் புற்றுநோய் பாதிப்பு வராமல் தடுக்கும், சருமத்தைப் பொலிவாக்கும்.

கரம் மசாலா சர்பத்

தேவையானவை: பட்டை - 2 துண்டு, கிராம்பு, ஏலக்காய் - தலா 4, பிரிஞ்சி இலை - 2, ரோஜா மொக்கு - 1, எலுமிச்சைச் சாறு, பனங்கற்கண்டு - தேவையான அளவு.
செய்முறை: பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை மற்றும் ரோஜா மொக்கு ஆகியவற்றை வாணலியில் போட்டு லேசாக வறுத்து எடுக்கவும். ஆறியதும், மிக்ஸியில் போட்டு மசாலாப் பொடியாக அரைத்து வைத்துக்கொள்ளவும். ஒரு கப் தண்ணீரைக் கொதிக்கவைத்து, அதில் இரண்டு டீஸ்பூன் அரைத்த மசாலா பொடியைச் சேர்க்கவும். பின், நன்றாகக் கலந்து ஒரு கொதிவந்ததும் மூடிவைத்து, நன்கு ஆறவிடவும். ஆறிய மசாலா டிகாக்‌ஷனை வடிகட்டி, அதனுடன் எலுமிச்சைச் சாறு, பனங்கற்கண்டு சேர்த்துத் தேவையான அளவு தண்ணீர் கலந்து ஐஸ் கட்டிகள் சேர்த்து அருந்தலாம்.

பலன்கள்: எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலுக்கு கிளென்சராக செயல்படும். பட்டை, செரிமானத்துக்கு உதவும். இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும். உடல் எடையைக் குறைக்கும். சளித் தொல்லையைக் கட்டுப்படுத்தும். வாய் துர்நாற்றம், பல் தொடர்பான பிரச்னைகளுக்கு நல்லது.

லெமன் மின்ட் கூலர்

தேவையானவை: புதினா - 1 கப், எலுமிச்சைப்பழச் சாறு - 2 டீஸ்பூன், இஞ்சி - 1 சிறு துண்டு, உப்பு - 1/4 டீஸ்பூன், கற்கண்டு - தேவையான அளவு.
செய்முறை: புதினா, எலுமிச்சைச் சாறு, இஞ்சி, உப்பு, கற்கண்டு சேர்த்து அரைக்க வேண்டும்.  பின், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வடிகட்டவும். மாலை நேர எனர்ஜி டிரிங்க் ரெடி!

பலன்கள்: எலுமிச்சையில் உள்ள கால்சியம், எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. எலுமிச்சையில் உள்ள பாஸ்பரஸ், மக்னீசியம், புரோட்டீன், கார்போஹைட்ரேட் உடல் எடையைக் குறைக்கவும் செரிமானத்துக்கும் உதவுகிறது. காய்ச்சல், ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி நிவாரணம் தருகிறது. மூட்டுவலி, உடல் தசைகளில் வலி போன்றவற்றைச் சரிசெய்கிறது. புதினாவில் உள்ள இரும்புச்சத்து, ரத்த விருத்திக்கு உதவுகிறது.

தேங்காய்ப்பால் கூலர்

தேவையானவை: தேங்காய்த் துருவல் - 1 கப், வெள்ளரிக்காய் - 1/2 கப், பனங்கற்கண்டு - தேவையான அளவு.
செய்முறை: தேங்காய்த் துருவல், வெள்ளரிக்காய், பனங்கற்கண்டு சேர்த்து நன்றாக அரைக்கவும். இதை வடிகட்டி, காலை நேரத்தில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலுக்குக் குளிர்ச்சியாக இருக்கும்.

பலன்கள்: 
முகம் பளபளப்பு பெற வெள்ளரிக்காய் உதவுகிறது. தேங்காய்த் துருவல், வாய்ப்புண் மற்றும் குடல்புண்ணைக் குணமாக்க உதவுகிறது. தேங்காயில் அதிக அளவு மாங்கனீஸ் நிறைந்து உள்ளது. இதில் உள்ள தாமிரம் மற்றும் வைட்டமின் சி, சருமத்தை மென்மை அடையச் செய்கிறது. ரத்தசோகையைச் சரிசெய்யும். உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவும். எலும்புகளை உறுதியாக்கும்.

நெல்லிக்காய் ஜுஸ்

தேவையானவை: நெல்லிக்காய் - 3, துளசி, புதினா - ஐந்து இலைகள், இளநீர், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: நெல்லிக்காயைத் தோல் சீவி மிக்ஸியில் போட்டு, இளநீர் ஊற்றி அரைக்க வேண்டும். இதில், உப்பு, துளசி, புதினா இலைகள் சேர்த்து அருந்தலாம்.

பலன்கள்: செரிமானப் பிரச்னைகள் தடுக்கப்படும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை எடுத்துக்கொண்டால், புற்றுநோய், இதயப் பிரச்னைகள் வராது. தொண்டைத் தொற்றுகளை நீக்கக்கூடியது. உடல் எடையைக் குறைக்க உதவும். கல்லீரலைச் சுத்தம் செய்யும். உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்கள் உப்பையும், சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையையும் சேர்க்கக் கூடாது.

கேரட் ஜூஸ்

தேவையானவை: கேரட் - 6, தண்ணீர் - தேவையான அளவு.  

செய்முறை: கேரட்டைக் கழுவி, சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக நறுக்கி, தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டிப் பருக வேண்டும்.
பலன்கள்: ஆன்டிஆக்ஸிடன்ட், வைட்டமின் ஏ, சி, கே, வைட்டமின் பி8, ஃபோலேட் நிறைவாக உள்ளன. புற்றுநோய் செல்கள் வளர்ச்சியைத் தடுக்கும். குறிப்பாக, `லுக்கீமியா’ எனப்படும் ரத்தப்புற்றுநோயைத் தடுக்கும். மூளை வளர்ச்சிக்குப் பெரிதும் பங்களிக்கிறது. மறதி நோயான அல்சைமரைத் தடுக்கும். உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்றது.

ஸ்ட்ராபெர்ரி திராட்சை மிக்ஸ்டு ஜூஸ்

தேவையானவை:  ஸ்ட்ராபெர்ரி - 200 கிராம், திராட்சை - 50 கிராம், தேன் - சிறிதளவு.

செய்முறை: ஸ்ட்ராபெர்ரி மற்றும் திராட்சைப் பழத்தை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து, தேன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்ட வேண்டும். குளிர்ச்சிக்காக, சிறிது ஐஸ் கட்டிகள் சேர்த்துக்கொள்ளலாம்.
பலன்கள்: திராட்சை, ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின் சி நிறைவாக உள்ளது. இதனால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகள், புற்றுநோய் செல்களைத் தடுக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்களான, அந்தோசயனின் (Anthocyanin) மற்றும் எல்லாஜிக் அமிலம் (Ellagic Acid) இதில் அதிக அளவில் உள்ளன. நியாசின், ஃபோலிக் அமிலம், ரிபோஃப்ளேவின் முதலான வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் சத்துக்களும் இதில் அதிக அளவில் இருக்கின்றன. மாங்கனீஸ், பொட்டாசியம், மக்னீசியம், துத்தநாகம், கால்சியம் ஆகிய தாதுஉப்புகள் ஓரளவு கிடைக்கும். தொடர்ந்து சீரான இடைவேளைகளில் இந்த ஜூஸைக் குடித்துவந்தால், இதய நோய்கள் வராது. இளமைப் பொலிவு கிடைக்கும்.

அன்னாசி - புதினா ஜூஸ்

தேவையானவை: அன்னாசிப் பழத்துண்டுகள் - 200 கிராம், புதினா - 10 கிராம், சர்க்கரை அல்லது தேன், ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு.
செய்முறை: அன்னாசி, புதினா, சர்க்கரை அல்லது தேன் மற்றும் ஐஸ் கட்டிகள் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து, மிக்ஸியில் நன்றாக அரைத்து, வடிகட்டி அருந்த வேண்டும்.

பலன்கள்: வைட்டமின் சி மற்றும் பி6 நிறைந்த ஜூஸ். பீட்டாகரோட்டின் மற்றும் பொட்டாசியம், மக்னீசியம் போன்ற தாதுஉப்புகள் இதில் உள்ளன. புதினா, இருமலுக்கும் ஆஸ்துமாவுக்கும் மிகவும் நல்லது. தொண்டைக் கமறல், முகப்பரு இருப்பவர்கள், இந்த ஜூஸில் புதினாவை அதிக அளவு சேர்த்துப் பருகலாம். தோல் வறட்சி இருப்பவர்கள், உடலில் உள்ள நச்சுக்கள், மலச்சிக்கல் நீங்க, இந்த ஜூஸைப் பருகலாம். ஓர் உணவு வேளைக்கும் மற்றொன்றுக்கும் இடைப்பட்ட நேரத்தில் அருந்தலாம். ஆன்டிஆக்ஸிடன்ட் அதிக அளவு இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதுடன், புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும் ஆற்றலும் இந்த ஜூஸுக்கு உண்டு.

மிக்ஸ்டு ஃப்ரூட்ஸ் ஜூஸ்

தேவையானவை: தோல் நீக்கி, சிறு துண்டுகளாக வெட்டிய அன்னாசிப்பழம் - 50 கிராம், முலாம்பழம்  - பாதி, பப்பாளி - 50 கிராம், நடுத்தர வாழைப்பழம் - 1, பச்சை திராட்சை - 25 கிராம், ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு (விருப்பப்பட்டால்).
செய்முறை: அன்னாசி மற்றும் திராட்சைப் பழத்தை மிக்ஸியில் நன்றாக அரைத்து, வடிகட்டி, சாறு எடுக்க வேண்டும். இதனுடன், முலாம் பழம், பப்பாளி, வாழை மற்றும் ஐஸ் கட்டிகளைச் சேர்த்து, மிக்ஸியில் நன்றாக அரைத்து, வடிகட்டாமல் அருந்த வேண்டும்.

பலன்கள்: ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மலச்சிக்கல், உணவு உண்டவுடன் மலம் கழிக்கும் பிரச்னை (இரிட்டபிள் பவுல் சிண்ட்ரோம்) உள்ளவர்கள், மாதவிடாய் காலத்தில் இருக்கும் பெண்கள், இதய நோயாளிகள் இந்த ஜூஸை அருந்துவது மிகவும் நல்லது. தொடர்ந்து இந்த ஜூஸை எடுத்துக்கொள்வது, புற்றுநோய் ஆபத்தில் இருந்து காக்கும். சர்க்கரை சேர்க்காமல் அருந்த வேண்டும்.

ப்ரைம்ஸ்டோன் ஜுஸ்

தேவையானவை: மாம்பழம் - 1, தோல், விதை நீக்கிய ஆரஞ்சு, சாத்துக்குடி - தலா அரைப் பழம், சர்க்கரை, ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு.
செய்முறை: ஆரஞ்சு, சாத்துக்குடிச் சுளைகளை மிக்ஸியில் அரைத்துச் சாறு எடுக்க வேண்டும். இதனுடன், மாம்பழத்தை தோல், கொட்டை நீக்கி, துண்டுகளாக நறுக்கிப் போட்டு, சர்க்கரை, ஐஸ் கட்டிகள் சேர்த்து, மீண்டும் மிக்ஸியில் நன்றாக அரைக்க வேண்டும்.

பலன்கள்: வைட்டமின் ஏ மற்றும் ஃபிளேவனாய்டு இருப்பதால், கண்களுக்கு மிகவும் நல்லது. பொட்டாசியம் சத்து, இதயம் சீராகச் செயல்பட உதவும். இந்த ஜூஸில் உள்ள தாமிரம், ரத்தச் சிவப்பு அணுக்கள் உற்பத்திக்கு உதவும். அதிக நார்ச்சத்து இருப்பதால், சர்க்கரை சேர்க்காமல் அருந்துவது, கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும். செரிமானப் பிரச்னை இருப்பவர்களும் இந்த ஜூஸ் அருந்தலாம். மூட்டுவலி, இதய நோய் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள், இந்த ஜூஸை அடிக்கடி பருகலாம்.

மிக்ஸ்டு வெஜிடபிள் ஜூஸ்!

தேவையானவை: கேரட், தக்காளி - தலா 3, பீட்ரூட் - 1, பாகற்காய் - சிறியது 1, சுரைக்காய் - சிறியது 1, முட்டைக்கோஸ் - 25 கிராம், இஞ்சி - மிகச் சிறிய துண்டு, ஓமம் - அரை டீ ஸ்பூன்,  எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், மிளகுத் தூள் - அரை டீஸ்பூன், உப்பு, ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு.
செய்முறை: ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிதளவு  தண்ணீர்விட்டு, ஓமத்தை ஊறவைக்க வேண்டும். கேரட், தக்காளி, பீட்ரூட், பாகற்காய், சுரைக்காய், முட்டைகோஸ், இஞ்சி ஆகியவற்றைச் சிறிய துண்டுகளாக வெட்டி, மிக்ஸியில் அரைக்க வேண்டும். இதனுடன், ஓமத் தண்ணீர், எலுமிச்சைச் சாறு, மிளகுத் தூள், உப்பு சேர்த்து, மீண்டும் அரைக்க வேண்டும். தேவைப்பட்டால், ஐஸ் துண்டுகள் சேர்க்கலாம்.

பலன்கள்: இதய நோயாளிகளுக்கு ஏற்ற ஜூஸ். சுரைக்காய் இருப்பதால், உடல்பருமன் இருப்பவர்கள், இந்த ஜூஸைக் குடிக்கலாம். புற்றுநோய் வராமல் தடுக்க, இதை அருந்தலாம். மலச்சிக்கல், ஜீரணக்கோளாறு உள்ளவர்கள், சளியால் அவதிப்படுபவர்கள் (ஐஸ் இல்லாமல்) இந்த ஜூஸைப் பருகலாம். எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க, இந்த ஜூஸ் ஏற்றது.

ஆப்பிள் - பேரிக்காய் ஜூஸ்

தேவையானவை: ஆப்பிள் -1, பேரிக்காய் சிறியது -2.

செய்முறை: ஆப்பிள், பேரிக்காய்களை தோல், விதை நீக்கி, சிறுசிறு துண்டுகளாக வெட்டி, சிறிது நீர் சேர்த்து, மிக்ஸியில் நன்கு அரைக்க வேண்டும். சர்க்கரை தேவை இல்லை; பழங்களின் இனிப்புச் சுவையே போதுமானது.
பலன்கள்: வைட்டமின் ஏ,சி,கே மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட தாதுஉப்புக்கள் இதில் நிறைய உள்ளன. சருமம் பொலிவு பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நோய்கள் அண்டாது. இதய நோயாளிகள், சிறுநீரகத்தில் கற்கள் இருப்பவர்கள், புற்றுநோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் என அனைவருக்கும் ஏற்றது. சர்க்கரை நோயாளிகள் பழங்களை ஜூஸ்செய்து சாப்பிடாமல், அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் இந்த ஜூஸ் அருந்துவது நல்லது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிக அளவு உள்ளது.

டீடாக்ஸ் டிரிங்க்

தேவையானவை: ஆப்பிள் - 1, தக்காளி - 2, செலரி - 50 கிராம், வெள்ளரிக்காய் (பெரியது) - 1, ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு, தேவைப்பட்டால் - சிறிதளவு தேன்.

செய்முறை: ஆப்பிள், வெள்ளரியைத் தோல் நீக்கி, துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். தக்காளி, செலரியை நன்கு சுத்தம்செய்து துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு, ஐஸ் கட்டிகள் சேர்த்து அரைக்க வேண்டும். வடிகட்டாமல் அப்படியே அருந்தலாம்.
பலன்கள்: நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். புற்றுநோய் செல்கள் வளர்வது தடுக்கப்படும். உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்ற உதவும். செரிமானக் குறைபாடுகளைச் சரிசெய்யும். உடலில் உள்ள செல்களின் வளர்ச்சிக்குத் தேவையான நுண்ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்து உள்ளதால், அடிக்கடி குடித்துவந்தால், தேகம் பொலிவு அடையும். நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னை, ‘டிமென்ஷியா’ எனப்படும் மறதி நோயாளிகளுக்கு, இந்த ஜூஸ் நல்ல பலன் அளிக்கும்.

கறிவேப்பிலை - கொத்தமல்லி ஜூஸ்!
தேவையானவை: கறிவேப்பிலை, கொத்தமல்லி - தலா ஒரு கைப்பிடி,  புதினா - கால் கைப்பிடி, தோல் நீக்கி நறுக்கிய இஞ்சி - சிறிதளவு, எலுமிச்சை - 1/2 பழம், உப்பு அல்லது தேன் - தேவையான அளவு.
செய்முறை: எலுமிச்சையைச் சாறு எடுத்து, தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, இஞ்சி ஆகியவற்றோடு இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, மிக்‌ஸியில் நன்றாக அரைத்து, வடிகட்டாமல் ஒரு பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். இதனுடன், எலுமிச்சைச் சாறு  மற்றும் தேவைப்பட்டால் உப்பு அல்லது தேன் சேர்த்துப் பருகலாம்.

பலன்கள்: வைட்டமின் ஏ, சி, பி காம்ப்ளெக்ஸ் உள்ளன. காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடைப்பட்ட வேளையில், இந்த ஜூஸைக் குடிப்பது நல்லது. சர்க்கரை நோயாளிகள் தேன், உப்பையும், சிறுநீரக நோயாளிகள் உப்பை மட்டும் தவிர்க்கலாம். சிறந்த டீடாக்ஸ் ட்ரிங்க் இது. வடிகட்டிப் பருகினால், சத்துக்கள் பெருமளவு குறைந்துவிடும். எனவே, வடிகட்டாமல் குடிப்பதே நல்லது.

பீட்ரூட் ஜூஸ்

தேவையானவை: பீட்ரூட் - 4, தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை: பீட்ரூட்டை தோல்நீக்கி, சுத்தம்செய்து சிறு துண்டுகளாக நறுக்கி, தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டிப் பருக வேண்டும். வடிகட்டாமல் பருகுவது இன்னும் நல்லது.
பலன்கள்: நார்ச்சத்து, வைட்டமின்கள், மாங்கனீஸ், பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளன. கொலஸ்ட்ராலைக் குறைக்கும், நல்ல கொழுப்பை அதிகரித்து இதயத்தைப் பலப்படுத்தும். ஃபோலிக் அமிலம் இதில் இருக்கிறது. பெண்களுக்கும் கர்ப்பிணிகளுக்கும் அவசியம் ஃபோலிக் அமிலம் தேவை. பீட்ரூட் ஜூஸில் இருந்து கிடைக்கும் ‘பீட்டைன்’ சத்து கல்லீரல் செயல்பாடுகளைச் சீராக்கும். பீட்டாகரோட்டின் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. ஆஸ்துமாவைத் தடுக்கும். வயதானவர்களுக்கு ஏற்படும் பார்வைக் குறைபாட்டைத் தடுக்கும்.

4 ஸ்டார் மிக்ஸ்டு ஜூஸ்

தேவையானவை: ஆப்பிள் - 2, பேரிக்காய் - 2, கேரட் (நடுத்தர சைஸ்) - 1, புதினா - சிறிதளவு, தேன், தண்ணீர் -  தேவையான அளவு.

செய்முறை: ஆப்பிள், பேரிக்காய், கேரட்டை தோல் நீக்கி, சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். புதினா இலைகளை உதிர்த்து, நறுக்கிய துண்டுகளோடு சேர்த்து, தேன், தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து, வடிகட்டி, அருந்த வேண்டும்.
பலன்கள்: வைட்டமின் ஏ, சி நிறைவாக உள்ளதால், கண்களுக்கு நல்லது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கலோரி நிறைந்தது. எனவே, இந்த ஜூஸை இரண்டு உணவுவேளைக்கு இடைப்பட்ட நேரத்தில் குடித்தால், அதிகமாகச் சாப்பிடுவதைத் தடுக்க முடியும். இதில் உள்ள நுண்ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு வலு சேர்க்கும். எனவே, பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு, விளையாட்டு வீரர்களுக்கு ஏற்றது. உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் இருப்பவர்கள் இந்த ஜூஸைக் குடிப்பது நல்லது. அல்சைமர், பார்கின்சன் போன்றவற்றைத் தடுக்கும். கெட்ட கொழுப்பைக் குறைக்கும். உடல்பருமனாக இருப்பவர்கள், தேன் சிறிதளவு மட்டும் சேர்த்து அருந்தலாம்.