About Me

My photo
I am an IT professional, Nowadays our Lifestyle is changed a lot and of course we are chasing money. In India More than 7 crore people affected by Diabetes, High Cholesterol and infertility due to their Poor Food Habits &amp Lifestyle. This Blog is very useful for youngsters to lead good Lifestyle and be healthy and students to choose career courses.Work hard, but make time for your love, family and friends. Nobody remembers Powerpoint presentations on your Final Day.I believe Life is ours and we only Live our Life.... Thanks for visiting and welcome you to visit again. WHO LOVES GOD ARE SEARCHING GOD, WHO LOVES PEOPLE ARE LIVING AS GOD - SK ( Reach me @ +91 9791139942 to lead Healthy Family Life )

Wednesday 12 September 2012

Indian Herbals and its Medicinal Benefits - 4

1. சளித் தொந்தரவு நீக்கும் திப்பிலி

திப்பிலி என்பது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். பொடியாகவும் கிடைக்கும். இது மணமுடைய மெல்லிய தண்டு கொடி வகையை சார்ந்தது. வெப்பமான பகுதிகளில் காணப்படும் திப்பிலி இந்தியாவில் அஸ்ஸாம், மேற்கு வங்காளம்,மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கொங்கன், கேரளாவில் வளர்கிறது.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
இத்தாவரத்தில் எளிதில் ஆவியாகும் எண்ணெய் காணப்படுகிறது. இதில் நீண்ட சங்கிலி அமைப்புடைய ஹைடிரோகார்பன்கள், மனோ மற்றும் செஸ்க்யூடெர்பின்கள்,கெரியோஃபில் லென் போன்றவை உள்ளன. மேலும் பிபிரோலேக்டம் போன்றவையும் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.
கனிகளும் வேரும் மருத்துவத்தில் பயன்படுகின்றன. நாட்டு மருந்து கடைகளில் அதிகம் கிடைக்கும் திப்பிலி மூச்சு உறுப்புகளின் நோய்கள், வயிற்றுப்போக்கு, தோல்நோய்கள்,பித்தநீர்ப்பை நோய்கள்,வலிகளை போக்குவதற்காக பயன்படுத்தப்படுகிறது.
சளித் தொல்லையை குணப்படுத்தும்
சிறிதளவு எடுத்து தேனில் கலந்து இரு வேலையும் கொடுத்தால் , குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உள்ள தொண்டை கட்டு, கோழை, குரல் கம்மல், உணவில் சுவையின்மை ஆகியவை தீரும். இதை சிறிதளவு எடுத்து வெந்நீரில் போட்டு காய்ச்சி வடித்து குடித்தாலும் அனைத்து வியாதிகளும் நீங்கும். தேனுடன் கலந்த பொடி சளி, இருமல், ஆஸ்துமா, விக்கல் ஆகியவற்றை குணப்படுத்தும்.
திப்பிலி கனி, வேர் மற்றும் மிளகு, இஞ்சி ஆகியவை
சமஅளவு கலந்த கலவை குடல்வலி, உப்புசம், இருமல் மற்றும் தொண்டை கரகரப்பு போக்க வல்லது.
குடல்புழுவை அகற்றும்
மிளகுடன் கலந்த திப்பிலி பொடி மயக்கம் மற்றும் உணர்வின்மைகளில் உணர்வு தூண்டும் மூக்குப்பொடியாக செயல்படுகிறது.
குழந்தை பெற்ற பெண்களுக்கு இளம் சூடான நீரில் திப்பிலி பொடியை கலந்து கொடுப்பதால் ரத்தப்போக்கு, காய்ச்சல் குணமாகும். குழந்தைகளின் குடல் நோயில் புழு அகற்றுவியாக திப்பிலி செயல்படுகிறது

2.குண்டு உடலை இளைக்கச் செய்யும் நத்தைச் சூரி

இயற்கையில் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு சித்தர்கள் பல விதமான நோய்களை குணப்படுத்தி வந்துள்ளனர். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும், வலுவையும் கொடுக்கக்கூடிய கற்ப மூலிகைகளைப் பற்றியும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த வகையில் நத்தைச் சூரி என்னும் மூலிகை எண்ணற்ற மருத்துவப் பயன்களைக் கொண்டுள்ளது. இதில் கால்சியம், பாஸ்பரஸ் உள்ளிட்டவை காணப்படுகின்றன. அதனால் சித்த மருத்துவத்தில் எலும்பு உடைதல், எலும்பு தொடர்பான நோய்களைப் போக்க மருந்தாக பயன்படுகின்றது.
மருத்துவ குணம்
பூண்டு வகையைச் சார்ந்த இந்த தாவரம் தமிழகத்தில் மணற்பாங்கான இடங்களில் அதிகம் வளர்கின்றது. தோட்டங்களில் நீரோடைகளின் இரு பக்கங்களிலும் தானாகவே வளர்கின்றது. இதன் விதை, வேர், மருத்துவக் குணம் உடையது. நான்கு பட்டையான தண்டுகளையும் எதிரடுக்கில் அமைந்த காம்பற்ற இலைகளையும், மிகச் சிறிய பூக்களையும் கொண்டதுதான் நத்தைச்சூரி. இதனை குழி மீட்டான், தாருணி, கடுகம், நத்தைச்சுண்டி, தொலியாகரம்பை என பல பெயர்களில் அழைக்கின்றனர்.
உடல் பலம் அதிகரிக்கும்
நத்தைச்சூரியின் விதையை லேசாக வறுத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு 1 ஸ்பூன் அளவு எடுத்து பாலில் கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை இருவேளையும் அருந்தி வந்தால் உடல் சூடு தணிவதுடன் உடலில் உள்ள தேவையற்ற இரசாயன வேதிப் பொருட்கள் வெளியேற்றி, சிறுநீரகக் கல்லடைப்பு ஏற்படாமல் தடுக்கும். மேலும் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.
நத்தைச்சூரியின் விதையைப் பொடித்து தினமும் 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டு வர சீதபேதி, பெருங் கழிச்சலைப் போக்கும். இதனால் நோயின் தாக்கம் குறைவதுடன் உடலும் வலுப்பெறும்.
நத்தைச் சூரியின் விதையைப்பொடியாக்கி சம அளவு கற்கண்டுப்பொடி கலந்து காலையும், மாலையும் 1ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் வெப்பத்தினால் உண்டான வயிற்றுக்கடுப்பு, கழிச்சல் நீங்கும்.
கட்டி உடையும்
நத்தைச் சூரி பூண்டை அரைத்து கல்லைப் போன்ற வீக்கத்திற்கு தடவிவர கரையும். நத்தைச் சூரி இலையை நசுக்கி பழுக்காத கருணைக் கட்டி மீது பற்றுப் போட்டு வர கட்டி உடையும். நத்தைச் சூரியின் சமூலத்தை அரைத்துப் பற்று போட கல் போன்ற வீக்கமும் கரைந்து ஓடிவிடும். நத்தைச் சூரி வேரை அரைத்து எலுமிச்சம் பழம் அளவு எடுத்து 30 மில்லி நல்லெண்ணெயுடன் கலந்து காலையில் மட்டும் 5 நாள் குடித்து வர அரையாப்புக் கட்டிகள் கரையும்.
உடல்பருமன் குறையும்
நத்தைச் சூரியின் விதைகளை சட்டியில் போட்டு பொன் வறுவலாக வறுத்து பொடிசெய்து கிணற்று தண்ணீரை எடுத்து சுண்டவைத்து அதில் கலந்து அத்துடன் 1 டம்ளர் பசும்பால் கலந்து 2 வேளை தொடர்ந்து குடித்து வர உடம்பில் பற்றியுள்ள ஊளைச் சதை குறையும். ஆண், பெண் இருவருக்குமுள்ள வெள்ளை நோய், வெட்டை நோய் குணமாகும்.
தாய்ப்பால் பெருகும்
பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் உண்டாகும் அதிக உதிரப் போக்கைத் தடுக்கும். வெள்ளைப் படுதலைக் குணமாக்கும். 10 கிராம் நத்தைச் சூரி வேரை காயவைத்து பொடியாக்கி பசும்பாலில் கலந்து கொதிக்க வைத்து அருந்தி வந்தால் தாய்ப்பால் பெருகும்.
விந்து பலம் அதிகரிக்கும்
வேர் நோய் நீக்கும் தன்மை கொண்டது. வேர் நோயை நீக்கி உடலைத் தேற்றவும் விந்து பலத்தை அதிகரிக்கவும், விதை தாதுக்களின் எரிச்சலைத் தவிர்க்கவும், தாது வெப்பத்தைத் தணிக்கவும் பயன்படுகின்றது.
நத்தைச் சூரி வித்தை அரைத்து நெல்லிக்காயளவு எடுத்து 1 டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர உடல்பலம் அடையும். விந்து அதிகரிக்கும்.
நத்தைச் சூரி வேரை இடித்து 200 மில்லி தண்ணீரில் வைத்து 2 மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி தினமும் 50 மில்லி லிட்டர் நாள் ஒன்றுக்கு மூன்று வேளை குடித்து வர காய்ச்சல் குணமடையும்.
3.வெட்டுக்காயங்களை குணமாக்கும் சேப்பங்கீரை!

சேப்பங்கிழங்கு இந்தியா முழுவதும் மருந்திற்காகவும், உணவிற்காகவும் பயிரிடப்படுகிறது. இதற்கு சாமைக்கிழங்கு, சேமைக்கிழங்கு, சேம்பு என பல பெயரிட்டு அழைக்கின்றனர். சேப்பங்கிழங்கில் இருந்து உற்பத்தியாகும் கீரையும் உணவாகப் பயன்படுகிறது. பொதுவாக நாம் கிழங்கை உபயோகப்படுத்தும் அளவிற்கு கீரையை பயன்படுத்துவதில்லை.
சேம்பில் ஆயிரம் வகை உள்ளது. இலையில் வடிவம், அமைப்பு ஆகியவற்றைப் பொருத்து இது வகைப்படுத்தப்படுகிறது. சேம்பு வெப்பப் பிரதேசங்களில்தான் செழிப்பாக வளர்கிறது. நீர் வசதியுள்ள பள்ளத்தாக்குகளிலும் கால்வாய் பக்கங்களிலும் இயல்பாகவே முளைத்து வளரக்கூடியது. பெரும்பாலும், ஆற்றங்கரை, ஆற்றுப்படுகை முதலிய அதிக நீர்வளம் உள்ள இடங்களில் செழிப்பாக வளரும்.
சேம்பங்கீரையும், இளந்தண்டுகளும், உணவாக சமைக்கப்படுகிறது. முதிர்ந்த இலையை விட இளந்தளிரே உண்பதற்கு ஏற்றது. சமைக்கும் போது சிறிதளவு சோடா உப்பு சேர்க்க வேண்டும். தண்டுகளை சமைக்கும் போது சிறிது புளி, எலுமிச்சை சாறு சேர்த்து சமைக்கவேண்டும். இதனால் காரல் தன்மை நீங்கும்.
வைட்டமின், தாது உப்புக்கள்
சேம்பங்கிழங்கில் புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, மாவுச்சத்தும் காணப்படுகின்றன. மேலும் கால்சியம், ஆக்ஸாலிக் அமிலம், மணிச்சத்து, இரும்புச்சத்தும் காணப்படுகின்றன.
உயிர்சத்துக்களில் வைட்டமின் ஏ, சி12 தையாமின், ரிபோஃப்ளோவின், தையாமின், நிக்கோடினிக் அமிலம் போன்றவை காணப்படுகின்றன.
இக்கீரையை தண்டோடு சேர்த்து சமைப்பது ஒருமுறை, அவ்வாறு தண்டோடு சேர்த்து சமைக்கும் போது அனைத்து சத்துக்களும் மிகுதியாக கிடைக்கின்றன.
வெட்டுக்காயம் குணமடையும்
சேம்பங்கீரை சிறந்த மூலிகையாகவும் செயல்படுகிறது. இது பலவித நோய்களை நீக்கும் ஆற்றல் பெற்றது. இந்த இலையில் சாற்றை வெட்டுக்காயங்களுக்குப் பூச விரைவில் காயங்கள் ஆறும். தசைநார்களை வேகமாக வளரச் செய்யும்.
இந்த இலையின் சாற்றினை ரத்தம் சொட்டும் இரத்தக் காயங்களின் மீது பூச இரத்தம் ஒழுகுவது நிற்கும். மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலிக்கு இதன் சாற்றைக் கொடுக்க வலி நீங்கி நிவாரணம் கிடைக்கும். கீரையையும், தண்டையும், வேகவைத்த நீரில் நெய் கலந்து கொடுக்க வயிற்றுவலி குணமாகும். காதுவலி, காதில் சீல் வடிதல், போன்றவற்றிர்க்கு கீரை சாற்றினை இரண்டொரு துளி விடலாம். இதனால் வலி நீங்கும்.
விஷக்கடி நீங்கும்
குளவி, வண்டு, பூரான் போன்ற விஷப் பூச்சிகள் கடித்த இடத்தில் இக்கீரையின் சாற்றைப் பூச நஞ்சு இறங்கி வேதனை நீங்கும்.
மூலநோய்க்கு மருந்து
சேப்பங்கீரை இலைச்சாற்றை விந்தணு பாதிக்கப்பட்ட ஆண்களுக்குத் தர விந்து கட்டும். இது மூல நோய்களுக்கு நல்ல மருந்தாகும். சேம்புக்கீரையுடன் புளி சேர்த்து சமைத்து உண்ண வெளித்தள்ளிய மூலமும் ரத்தக்கடுப்பும் நீங்கும். இந்த கீரையை சமையலில் சேர்த்துக்கொள்ள மேக சாந்தி குணமடையும். மேலும் மூலவாய்வு, மூலச்சூடு, ரத்த மூலம், மூளை மூலம் இவைகள் நீங்கும்.
4. முகத்திற்கு பொலிவு தரும் பாற்சொறிக்கீரை

பசுமையான கீரைகளில் உயிர்சத்துக்கள், தாதுஉப்புகள், கால்சியம், இரும்புச்சத்துக்கள் அடங்கியுள்ளன. மாமிச உணவுகளை உண்ணும் போது கிடைக்கும் சக்தி கீரை உட்கொள்பவர்களுக்கும் கிடைக்கிறது. கீரையானது உடல் சூட்டை தணிக்கு உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. அதிகம் கேள்விப்பட்டிராத சில வகை கீரைகளில் காணப்படும் மருத்துவ குணங்களை காணலாம்.
பண்ணைக்கீரை
பண்ணைக்கீரையை பருப்புடன் சேர்ந்து கடைந்து சாப்பிட உடல் பலம் பெரும். இது உடல் சூட்டை தணித்து சமநிலையில் வைக்கும். சொறி, சிரங்கு இரணம் இவைகளை ஆற்றும்.
பாற்சொறிக்கீரை
பாற்சொறிக்கீரையுடன் துவரம் பருப்பு, பாசிப்பருப்பு சேர்ந்து கடைந்து சாப்பிடுவார்கள். சீதபேதியுடன் கஷ்டப்படுபவர்கள் இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர சீதபேதி குணமாகும். குடலில் ஏற்பட்டுள்ள புண்ணை ஆற்றும். உடலில் தேஜஸ் உண்டாகும்.
வள்ளைக்கீரை
கொடி இனத்தைச் சேர்ந்த இந்த கீரை பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் நல்லது. இதனை பருப்புடன் சேர்த்து சாப்பிட மகப்பேறு தாய்மார்களுக்கு பால் சுரக்கும். உடலில் புதிய ரத்தத்தை உண்டாக்கும். உடல் பலம் பெரும். நீரிழிவு என்னும் சர்க்கரை வியாதியுள்ளவர்கள் தொடர்ந்து இதனை சாப்பிட்டு வர சர்க்கரையை குறைத்துவிடும்.
சேம்புக்கீரை
சேம்பங்கிழங்கின் இலையான இந்த கீரையை சமைத்து உண்டால் மூலநோய் குணமாகும். கூட்டு, பொரியல், துவட்டல் செய்து சாப்பிட்டால் அனைத்து வகை மூல வியாதிகளும் குணமடையும்.

Indian Herbals and its Medicinal Benefits - 3

1.இலுப்பைப் பூ சாப்பிடுங்க ஆண்மை அதிகரிக்கும்!

இயற்கையின் படைப்பில் மலர்கள் மகரந்த சேர்க்கைக்காக உருவாக்கப்பட்டவை. இந்த மலர்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளன. பூக்கள், காயாகி, கனியாகி அதனை மக்கள் உண்பதற்கு இயற்கை கொடுக்கிறது. கனியாக மாறும் வரை காத்திருக்காமல் பூக்களை சாப்பிட்டாலே அதற்குறிய அத்தனை குணங்களும் கிடைக்கும்.
காதுகளைக் காக்கும் மகிழம்
மகிழம் பூவின் நறுமணம் மணம் மயக்கும். இது மற்றப் பூக்களைவிட சற்றே வித்தியாசமானது. காதுகளில் எந்த தொல்லை ஏற்பட்டாலும் மகிழம் பூவை எண்ணெய் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து சற்று நேரம் குளிர வைத்து அதன் பின் குளிர்ந்த நீரில் குளித்தால் நல்ல பலன் கிடைக்கும்
தலைவலி நீங்கும்
அகத்திக்கு சிறந்த மருத்துவ குணங்கள் இருப்பது போல அகத்திப் பூவிற்கும் உண்டு. அகத்திக்கீரை, நாம் உண்ணும் உணவு நன்றாகக் ஜீரணிக் உதவுகிறது. நீர்க்கோவைக் காரணமாகத் தோன்றும் தும்மல் போன்று நோய்களுக்கு அகத்திக் கீரையின் சாற்றையும், அகத்திப் பூவின் சாற்றையும் சம அளவு கலந்து மூக்கில் இரண்டொரு சொட்டு விட்டுவந்தால் நோய் நீங்கும். பொதுவாக நீர்கோவைக்கு அகத்தி இலைச்சாற்றுடன் சமஅளவு தேன்கலந்து உள்ளுக்குச் சாப்பீட நல்ல குணம் கிடைக்கும். அடிபட்டு கன்றிப்போன வீக்கங்களுக்கு அகத்திக் கீரையை அரைத்துச் சுடவைத்து பற்றாகப் போட்டால் சிறந்த குணம் கிடைக்கும். அகத்தி இலைச் சாற்றை நெற்றியில் தடவி, அனல் ஆவிபிடிக்கக் கடுமையான தலைவலி நீங்கும்.
தொட்டாச்சிணுங்கி பூக்கள்
தொட்டாச் சிணுங்கி என்ற முள் கொடியில் தொட்டால் சிணுங்கிப் பூ கிடைக்கும். தொட்டவுடன் இந்தக் கொடியின் இலைகள் சுருங்கிவிடும்.தொட்டாச்சிணுங்கி வேர் என்பவற்றிற்கு புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் உண்டு என்பது சித்த மருத்துவர்களது கூற்றாகும். மனிதர்களுக்கு மட்டுமன்றி கால்நடைகளுக்கும் ஏற்படுகின்ற பல நோய்கள் இப்பூவினால் குணமாகின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஆண்மை அதிகரிக்கும்
இலுப்பை மரத்திலிருந்து கிடைக்கும் பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.மெலிந்த உடலுள்ளவர்கள் இலுப்பை பூக்களை பசும்பால் விட்டு அரைத்து காய்ச்சிய பாலுடன் சிறிது சர்க்கரை சேர்ந்து பருகி வந்தால் நாற்பத்தெட்டு நாட்களுள் உடம்பு தேறும். இலுப்பை பூவை ஒத்தடம் கொடுத்தால் உடலில் உள்ள வீக்கம் குறையும்.
ஆண்மைக் குறைவு உள்ளவர்கள் பசும் பாலுடன் இலுப்பைப் பூ கஷாயத்தைச் சேர்த்து பருகினால் ஆண்மைக் குறைபாடு குணம் அடையும். இலுப்பை எண்ணெய்யை உடலின் உறுப்புக்கள் சிலவற்றில் தேய்த்துக் கொள்வது முண்டு. சிலர் அவ்வப்போது உணவிற்காகவும் பயன்படுத்துகின்றனர்.
சளி நீங்கும்
தூதுவளைப் பூ மிகச் சிறந்த மருத்துவ குணம் நிறைந்தது. இந்தப் பூ அதிக அளவில் கிடைப்பது இல்லை. கிடைக்கும் பூவை வதக்கி துவையலாக அரைத்துச் சாப்பிட்டால் சளி, மூக்கடைப்பு குணம் அடையும்.தூதுவளைப் பூவைப் போன்று தூதுவளை இலையையும் துவையல் செய்து சாப்பிட்டால் நல்ல பயன் ஏற்படும். தொண்டை, வயிறு இவைகளில் ஏற்படும் புண்களுக்கு இது மருந்தாகப் பயன்படுகிறது

2.தோல்நோய்களை குணமாக்கும் குப்பைமேனி!

சாதாரணமாக நாம் வசிக்கும் பகுதிகளில் தெருவோரங்களில் வளரும் செடி குப்பைமேனி. குப்பைமேடுகளின் ஓரங்களில் வளருவதால் இதற்கு குப்பைமேனி என்ற பெயர் வந்துள்ளது. முழுத்தாவரமும் மருத்துவப் பயன் உடையது.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
இத்தாவரத்தில் அல்கலாய்டுகள், குளுக்கோசைடுகள், அஸிடேட்கள், எளிதில் ஆவியாகும் எண்ணெய்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. அகாலிஃபமைடு, காலிபோல் அஸிடேட், அகாலிஃபைன், டிரைஅஸிட்டோனமைன், கெம்ஃபெரால் போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன.
ஆஸ்துமா குணமடையும்
மூச்சுக்குழல் மற்றும் ஆஸ்துமா நோய் குணமடையும். உடலில் வெப்பத்தைஉண்டாக்கி சளியினால் ஏற்பட்டுள்ள கோழையை வெளியேற்றும் தன்மை கொண்டது. இலையை உலர்த்தி சூரணம் போல் தயாரித்து 10 குன்றிமணி எடை வீதம் தேனில் கலந்து கொடுத்து வந்தால் இருமல், இரைப்பு, கபம் முதலியவை குணமடையும்.
இந்த இலையின் பொடியை மூக்கில்பொடிபோல் இழுக்க நீர் வடிந்து தலைவலி உடனேகுணமடையும். இதனை நசியமிடுதல் என்பர். வெறிநாய்க் கடியும், சித்த பிரமையும் குணமடையும்.
குழந்தைகளுக்கு
குப்பைமேனி வயிற்றுப் பூச்சிகளுக்கு எதிரானது. இலையை அரைத்து சாறு எடுத்து குழந்தைகளுக்கு ஒரு தேக்கரண்டி கொடுத்தால் பேதியாகும். வயிற்றில் உள்ள கிருமிகள் வெளியேறும். இது மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. வேரானது வயிற்றுப்போக்குக்கு மருந்தாகிறது.
தோல்வியாதிகள்
இலைகள் தோல் வியாதிகளுக்கு மேல் பூச்சாகிறது. சொறி, சிரங்கு, படுக்கைப் புண் மற்றும் நாள்பட்ட புண்களை ஆற்றுகிறது. இலையை விளக் கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் கட்டி வரப் படுக்கைப் புண்கள் தீரும்.
இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்துசொறி, சிரங்கு,புண், விஷக்கடிகள் முதலியவைகட்கு பூச குணமாகும். மேனி எழிலுடன் விளங்கும். இலைச்சாறுடன் எண்ணெய் கலந்து முடக்கு வாத நோய், மூட்டுவலிக்கு தடவினால் விரைவில் குணமடையும்.
மூலநோய்க்கு மருந்து
மூலத்திற்குக் குப்பைமேனிசிறந்த மருந்தாகும். பூத்த குப்பைமேனியை வேறுடன்பிடுங்கி நிழலில் உணர்த்தி சூரணம் செய்து இதில்2 - 5 கிராம் அளவு பசும் நெய்யில் 48 நாள் காலை, மாலை சாப்பிட எந்தவகை மூலமும்முற்றிலும் குணமாகும்.

3.ஆஸ்துமா நோய் தீர்க்கும் கண்டங்கத்திரி

கண்டங்கத்திரி செடி நன்கு படர்ந்து தரையை ஒட்டி வளரும் குறுஞ்செடியாகும். இந்த தாவரம் முழுவதும் முட்கள் காணப்படும். நீல நிறத்தில் மலர்கள் கொத்து கொத்தாகக் காணப்படும். இந்த செடியின் இலைகள், தண்டு, மலர், கனி, விதை ஆகிய முழுத்தாவரமும் மருத்துவப் பயன் கொண்டவை. அர்வாதி என்னும் ஆயுர்வேத மருந்தின் பகுதியாக உள்ளது.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
இத்தாவரத்தில் இருந்து பலவிதமான கரிம அமிலங்கள் மற்ற வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. டயோஸ்ஜெனின், சொலசோடைன், சொலனோகார்பைன், அரகிடிக்,லினோலியிக், ஒலியிக், பால்மிடிக், அமிலங்கள் காணப்படுகின்றன.
ஆஸ்துமா நீக்கும் வேர்
கண்டங்கத்திரி செடியின் வேர் ஆஸ்துமா எதிர்ப்பு குணம் கொண்டது. விதைகளை எரித்த புகை ஆஸ்துமா நோயில் சளி அகற்றுவியாக உதவுகிறது. பல்வலி போக்குகிறது.
இலைகளின் சாறு மிளகுடன் சேர்த்து மூட்டு வலிகளுக்கு மருந்தாகிறது. வாந்தி நிறுத்தக்கூடியது. சிறுநீர் போக்கு தூண்டுவி. மார்பு வலி, இருமல் மற்றும் காய்ச்சலுக்கு மருந்தாகும். தசமூலா என்னும் ஆயுர்வேத மருந்தின் பகுதியாக உள்ளது.
குழந்தைகளின் இருமல் நீக்கும்
கனிகளின் சாறு தொண்டை வலியை போக்க வல்லது. குழந்தைகளின் தொடர்ந்த இருமலுக்கு இதன் பொடி தேனுடன் கலந்து கொடுக்கப்படுகிறது.
முழுத்தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது. உடல்நலம் தேற்றக்கூடியது. மூச்சுக்குழல் அலர்ஜி, இருமல், மலச்சிக்கல், ஆகியவற்றினை போக்க உதவும். இதன் கசாயம் பால்வினை நோய்களுக்கு மருந்தாவதுடன் கருத்தரிக்கவும் ஊக்குவிக்கிறது.

Indian Herbals and its Medicinal uses - 2

1.ஆண்மையை விருத்தி செய்யும் அரைக்கீரை!

உடல் ஆரோக்கியத்தில் கீரைகள் முக்கிய பங்குவகிக்கின்றன. தினசரி ஏதாவது ஒரு வடிவத்தில் கீரைகளை சாப்பிடவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். கீரைகளில் பலவகைகள் உள்ளன. ஒவ்வொரு கீரையும் ஒவ்வொரு வடிவைத்தில் மனிதர்களுக்கு நன்மை தருகின்றன.
பித்த நோய்கள்
அகத்திக் கீரைக்கு பித்தம் தொடர்பான குணமாகும், ஜீரணசக்தி உண்டு பண்ணும். இழந்த பலத்தை மீட்டுத்தரும். இது மலத்தை இளக்கி வெளியேற்றும். சிறிதளவு வாயுவை உண்டு பண்ணும். உயிர்ச்சத்து ‘ஏ’ மற்றும் சுண்ணாம்புச்சத்து அதிக அளவில் இருப்பதால் உடல் வளர்ச்சியையும், கண்பார்வை தெளிவையும் எலும்புகளுக்கும் பலம் கொடுக்கும். ஆரைக் கீரைக்கும் பித்தம் தொடர்பான கோளாறுகளை போக்கும். அளவு மீறிப் போகும் சிறுநீரை கட்டுப்படுத்தி சமநிலைக்கு கொண்டு வரும்.
பொன் போன்ற மேனி
சருமம் பொன்போல பிரகாசிக்க தினசரி பொன்னாங்கண்ணி கீரையை சூப் வைத்து சாப்பிடலாம். பொன்னாங்கண்ணி கீரையை கடைந்து உணவுடன் நெய் சேர்த்து அருந்த உடல் வலுப்பெறும்.
சிகப்பு பொன்னாங்கண்ணி கீரையை பூண்டு சேர்த்து வதக்கி சாப்பாட்டுடன் சாப்பிட்டு வந்தால் மூலநோய் அறுவைசிகிச்சை இல்லாமலேயே குணமாகும். வாய்ப்புண், தொண்டைப்புண் நீங்கும்.
நரைமுடி அகலும்
முளைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் இளமையில் தலைமுறை நரைக்காமல் இருக்கும். கரிவேப்பிலையை நாள்தோறும் உணவில் ஏதாவது ஒரு வடிவில் சேர்த்துக் கொண்டால் உடலின் இளமைத்தோற்றம் நிலைத்துநிற்கும்.
தாது விருத்தியாகும்
அரைக்கீரை அனைத்து பகுதிகளிலும் எளிதாக கிடைக்கும். இதை பருப்புடன் சேர்ந்து கடைந்து சாப்பிடலாம். இந்த கீரை இரத்தத்தை உற்பத்தி செய்யும். கபத்தை உடைத்து வெளியேற்றும். வாத சம்பந்தமான வியாதி தணிக்கும். நரம்பு வலி, பிடரிவலியை எளிதில் போக்கவல்லது. இது தாதுவை விருத்தி செய்யும். விந்தணு குறைபாடு உள்ளவர்கள் இதை சாப்பிடலாம்.
எலும்பு வளர்ச்சி
புதினா கீரையில் இரும்புச்சத்து இருப்பதால் இரத்தத்தை சுத்தம் செய்து புதிய இரத்தத்தை உண்டு பண்ணும். பற்களை கெட்டிப்படுத்தும், எலும்புகளை வளரச் செய்யும். புதினாவை நசுக்கி போட்டு கஷாயம் வைத்து சாப்பிட்டால் இளமையுடன் வாழலாம். அரை சங்கு புதினாக் கீரையை குழந்தைகளுக்கு கொடுக்க கபம் நீங்கும். கொத்தமல்லிக்கீரையை துவையல் அரைத்து சாப்பிட பித்தம் குணமாகும்.
வயிற்றுப் புண் குணமாகும்
பசலைக்கீரை சாப்பிட நீர் கடுப்பு, வெள்ளை வெட்டை நீங்கும். மிளகு தாக்காளி கீரைக்கு வயிற்றுப் புண்ணை ஆற்றும் சக்தி உள்ளது. பருப்பும், தேங்காயும் போட்டு காரம் சேர்க்காமல் சமைத்து சாப்பிட்டால் குடல்புண், வாய்ப்புண் ஆறும்.

2.மனநோய்க்கு மருந்தாகும் சீரக கசாயம்

சீரகத்தைப் பிரித்தாலே சீர் + அகம் என்ற வார்த்தைகள் கிடைக்கும். நம் உடலின் அனைத்து பாகங்களையும் சீராக்கி நோயின்றி வாழ வகுக்கிறது சீரகம். இதன் மருத்துவ குணத்திற்காகவே இந்திய சமையலில் அன்றாடம் பயன்படுத்தப்படுத்தப்படுகிறது.
சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் முக்கிய பங்கு பங்கு வகிக்கிறது. செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து.
சீரகத்தில் உயர்தர இரும்புச் சத்து உள்ளது. இது ரத்த சிகப்பு அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. இதன் மூலம் ஆக்சிஜனை உடலின் அனைத்து பகுதிகளுக்கும் கடத்த உதவுகிறது. உடலுக்கு சக்தி கிடைக்கிறது.
வயிறு மந்தத்தைப் போக்கும்
உடலுக்கு குளிர்ச்சியும், சருமத்தை பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும். சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும். இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகிவிடும்.
ரத்த அழுத்தம் கட்டுப்படும்
அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும். திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம். சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.
மார்பு வலி நீங்க
மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும்.நெஞ்சு எரிச்சலுக்குச் சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும். சீரகத்தை எலுமிச்சம்பழச் சாறுவிட்டு உலர்த்தி, தூளாக இடித்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தினமும் ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு மோர் குடித்து வந்தால் மார்பு வலி நீங்கும்.
சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச்செய்யும். ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும். சீரகத்தைத்தூள் செய்து இலேகியமாக மெலிந்து போனவர்களுக்குக் கொடுப்பது உண்டு
மனநோய் குணமாகும்
சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் குணமடையும்
அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநிலை மனநோய் குணமாகும்.
கர்ப்பிணிகளுக்கு கசாயம்
சீரகத்தை கொதிக்கும் நீரில் போட்டு கஷாயம் செய்து கர்ப்பிணிகளுக்கு கொடுத்து உடல் லேசாகும், வர பிரசவம் எளிதாகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

3.கருப்பை கோளாறுகளை நீக்கும் கடுகு

கடுகு சிறுத்தாலும் காரம் போகாது’ அந்த அளவிற்கு எண்ணற்ற சத்துக்களையும், மருத்துவ குணங்களையும் சின்னஞ்சிறிய கடுகு தன்னகத்தே கொண்டுள்ளது.
5ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கடுகின் பயன்பாடு இருந்துள்ளது. கடுகில் கருங்கடுகு, வெண்கடுகு, நாய்க்கடுகு, மலைக்கடுகு, சிறுகடுகு என பலவகை உண்டு. இது சிறு செடி வகையைச் சார்ந்தது. இந்தியாவில் பல இடங்களில் பயிராகிறது. வெண்கடுகை விட கருங்கடுகில் காரம் மிகுந்து காணப்படும். இதன் மேல்தோல் கறுப்பாக இருக்கும்
சத்தான கடுகு
கடுகில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. கடுகில் செலினியம் அதிகம் செரிந்துள்ளது. இதில் உள்ள மெக்னீசியம் ஆஸ்துமா கோளாறுகளை நீக்குகிறது. கடுகில் உயர்தர கால்சியம், மாங்கனீஸ், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், இரும்பு, புரதம், நார்ச்சத்து போன்றவை காணப்படுகிறது.
மைக்ரேன் தலைவலி
கடுகானது மைக்ரேன் தலைவலிக்கு அருமருந்தாக செயல்படுகிறது. அதேபோல் ருமட்டாய்டு ஆர்த்தடீஸ், குறைந்த ரத்த அழுத்தம் போன்றவைகளை குணமாக்குகிறது. தோல் நோய்களுக்கு சிறந்த மருந்தாகும்.
ஜீரணக்கோளாறினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுகு சிறந்த மருந்தாகும். ஜீரணத்தை தூண்டும் சக்தி கடுகுக்கு உண்டு. தினமும் உணவில் கடுகை சேர்த்துக் கொள்வது நல்லது. கடுகை நன்கு அரைத்து பொடியாக்கி அதனுடன் மிளகு பொடி, உப்பு சேர்த்து காலையில் ஒரு ஸ்பூன், அளவு எடுத்து வாயில் போட்டு வெந்நீர் குடித்து வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி அஜீரணக் கோளாறைப் போக்கும்.
உணவு உண்பதற்கு முன்பு கருப்பு கடுகினை 20 நிமிடம் ஊறவைத்து அரைத்து பாலில் கலந்து குடித்து வர ஜீரணசக்தி கிடைக்கும். அஜீரணக் கோளாறால் வாய்வுக்கள் சீற்றமடைந்து வயிற்றில் வலியை உண்டாக்கும். இந்த வயிற்று வலி நீங்க கடுகை பொடி செய்து வெந்நீரில் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுவலி நீங்கும்.
சைனஸ் கோளறு நீங்கும்
ஒரு சிலருக்கு இருமும் போது தலைப்பகுதி முழுவதும் வலி உண்டாகும். இந்த இருமல் நாளுக்கு நாள் அதிகரித்து தலைச்சுற்றலை உண்டாக்கும். கடுகுப் பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இந்த இருமல் நீங்குவதுடன் தலைவலியுடன் உண்டாகும் இருமல், மூக்கில் நீர் வடிதல், அதிக உமிழ்நீர் சுரத்தல் போன்றவை குறையும்.
விஷ முறிவு மருந்து
சிலர் தெரிந்தோ தெரியாமலோ விஷம் சாப்பிட நேரிட்டால் அவர்களுக்கு முதலில் கடுகை அரைத்து நீரில் கலந்து கொடுத்தால் வாந்தி உண்டாகும் இந்த வாந்தியுடன் உள்ளிருக்கும் விஷமானது வெளியேறும். சில வகையான காணாக்கடிகளுக்கு கடிபட்ட இடத்தில் கடுகு அரைத்து தடவினால் விஷம் நீங்கும்.
சிறுநீர் கோளாறுகள்
கடுகுத்தூள், அரிசிமாவு இவைகளை சரிபாதியாக எடுத்து வெந்நீர் கலந்து களிபோல் கிளறி அதை இருமல், இரைப்பு இருப்பவர்கள் மார்பு, தொண்டைப் பகுதிகளில் தடவி வந்தால் இருமல் இளைப்பு நீங்கும். தலைவலி உள்ளவர்கள் நெற்றியில் பற்றுப் போடலாம். கடுகை அரைத்து தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்கு பிரியும்
கருப்பை கட்டி
கடுகிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை வட இந்தியாவில் சமையலுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். கொழுப்பு சத்து அதிகமில்லாத இந்த எண்ணெய் இதய நோயை தடுக்கும். கருப்பைக் கட்டியைச் சுருக்குவதில் கடுகு எண்ணெய் பெரும்பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு முறையும் கடுகு மற்றும் சீரகம் போன்றவற்றைத் தாளிக்க நீங்கள் கடுகெண்ணெயைப் பயன்படுத்தவும். வயிற்றின் மீது வெளிப்பூச்சாகவும் கடுகெண்ணெயை வெதுவெதுப்பாகப் பூசி, காலையில் வெந்நீரில் குளித்துவர, வலி நீங்கும். கடுகானது பெண்களின் மெனோபாஸ் கால சிக்கலை நீக்குகிறது. நல்ல உறக்கத்தை தருகிறது.

Indian Herbals and its Medicinal Benefits - 1

1. நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற வெந்தையக்கீரை!

நாம் உண்ணும் உணவில் உடலுக்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளன. அதனால்தான் எந்த மாதிரியான உணவுகளை எப்படி சமைத்து சாப்பிடவேண்டும் என்று முன்னோர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பச்சைக் காய்கறிகள், கீரைகளில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. சாதாரணமாக நினைத்த வெந்தையக்கீரையில் நீரிழிவு நோயாளிகளை குணப்படுத்தும் மருந்துப்பொருள் காணப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தாது உப்புக்கள் வைட்டமின்கள்
வெந்தையக்கீரையினை ஹிந்தியில் மேத்தி கசூரி என்று அழைக்கின்றனர். இது நறுமணத்திற்காக உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. இது கீரைவகையை சார்ந்ததாக இருந்தாலும் சத்துக்கள் நிறைந்த மூலிகையாக பயன்படுகிறதுவெந்தையக்கீரையில் இருந்து கிடைக்கும் வெந்தையம் இந்திய உணவுப் பொருட்களில் பெருமளவு பயன்படுகிறது.
நூறுகிராம் வெந்தையக்கீரையில் 49 கலோரிகள் சத்து கிடைக்கிறது. இதில் தாது உப்புக்களும், பொட்டாசியம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்தும் காணப்படுகின்றன. அதோடு வெந்தையக்கீரையில் வைட்டமின் சியும், வைட்டமின் ஏ யும் காணப்படுகின்றன. இது நார்ச்சத்துள்ள உணவுப்பொருள் என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது என்கின்றனர் நிபுணர்கள்.
வெந்தையக்கீரை குளிர்ச்சியானது. இதனை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டு சாப்பிடுவதன் மூலம் உடல் சூடு கட்டுப்படும்.
இது ஜீரணக் கோளாறுகளை நீக்கும். வெந்தையக்கீரையை காயவைத்து பொடி செய்து வைத்துக்கொண்டு உணவில் சேர்க்கலாம். இரும்புச் சத்து குறைபாடு நீங்கும். சாப்பிடும் உணவு எளிதில் ஜீரணமாகும்.
வாய்ப்புண்ணுக்கு இது சிறந்த மருந்தாக செயல்படுகிறது. வெந்தையக்கீரையை ஊறவைத்து அந்த தண்ணீரை எடுத்து வாய் கொப்பளித்தால் வாய்ப்புண் குணமாகும்
தொண்டை எரிச்சல், புண்கள் இருந்தாலும் சரியாகும்.பிரசவித்த பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் வெந்தையக்கீரையை சமைத்துக் கொடுக்கலாம் தாய்ப்பால் ஊறும்.
வெந்தையக்கீரை மூலிகைப் போல செயல்படுவதால் இதனை சாப்பிடுவதன் மூலம் மார்பகப்புற்றுநோய் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. இது டைப் 1 டைப் 2 நீரிழிவினை கட்டுப்படுத்துக்கிறது. உடலில் அதிக கொழுப்புச் சத்து தங்குவதை தடுக்கிறது

2. நுரையீரல் நோய் தீர்க்கும் முசுமுசுக்கை

கொடி வகையைச் சேர்ந்த முசுமுசுக்கை கீரை, சுவர்களிலும், தரைகளிலும் தானாக வளர்ந்திருக்கும். இது நுரையீரல் நோய்கள், சுவாசக் கோளாறுகளை நீக்க வல்லது. சுவாசக்குழல், சுவாசப்பையில் நுண்ணறைகளில் ஏற்படும் ரணம், அழற்சி, ஆகியவற்றை ஆற்றிவிடும் ஆற்றல் கொண்டது. மேலும் சுவாசப்பைகளில் உண்டாகும் கபத்தை அகற்றி அதனை சுத்தம் செய்யும் சக்தி உடையது.
அமைதியின்மை போக்கும்
இக்கீரையை நன்றாக ஆய்ந்து புழுங்கல் அரிசியுடன் சேர்த்து மாவாக அரைத்து தோசை, அப்பம் சுட்டு சாப்பிடலாம். இதனை வழக்கமாக உணவில் சேர்த்துக்கொள்ள நாள்பட்ட நோய்களால் தளர்ந்து போன உடல் பலமடையும்,
மனதில் அமைதியின்மை, கோபம் ஆகியவற்றையும் சரி செய்யக்கூடியது இந்த முசுமுசுக்கை கீரை. உயர் ரத்த அழுத்த நோயினை இது குணப்படுத்த வல்லது.சளி, இருமல் வரட்டு இருமல், இழுப்பு வலிகள் போன்றவற்றையும் ஒழித்துக் கட்டும்.
ஆஸ்துமா குணமாகும்
முசுமுசுக்கையை சூரணமாக செய்து உட்கொள்ள நாள்பட்ட எலுப்புருக்கி, ஆஸ்துமா, காசநோய், இளைப்பு நோய், ரத்தசுவாசநோய் போன்றவை குணமடையும்.
முசுமுசுக்கை தைலம்
முசுமுசுக்கையை தைலமாக தயாரித்து வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் மேற்கொள்ள உடல் சூடு தணியும், கண் எரிச்சல் போக்கும். இளநரையை மாற்றும். வழுக்கை ஏற்படுவதை தடுக்கும்.

3.புற்றுநோயை குணமாக்கும் காட்டு ஆத்தாப்பழம்

புற்றுநோயில் இருந்து மனிதர்களை காக்கும் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை கீமோ மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக‌ உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளன.
புற்றுநோய் என்றாலே ஒரு உயிர்கொல்லி நோய்தான் என்று இன்றைக்கு பலரும் அஞ்சிக்கொண்டுதான் இருக்கின்றனர். இதற்கு காரணம் புற்றுநோய் என்பது இன்றைக்கும் மருத்துவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் கடுமையான ஒரு சவாலாகவும் உள்ளது.
புற்றுநோயானது இரத்தப் புற்றுநோய், தோல் புற்றுநோய், எலும்பு புற்றுநோய் என ஆரம்பித்து மனித உடம்பில் எதையும் விட்டு வைக்காமல் ஈரல், நுரையீரல், கணையம், சிறுநீரகம், மூளை, வாய்/பல் ஈறுகள், வயிறு(குடல்), மார்ப்பகம், கருப்பை, கருப்பை வாய், உணவுக்குழாய், புரோஸ்டேட் என அநேக உறுப்புகளையும் தாக்குவதாக உள்ள‌து. இவற்றில் சிலவகை புற்றுநோய் முன் அறிகுறியே இல்லாமல் முற்றிவிட்ட‌ நிலையில் தாக்குவதும் உண்டு.
புற்றுநோய் வந்தபிறகு கொடுக்கப்படும் மருந்துகள் மட்டுமே இன்று அறிமுகத்தில் உள்ளன. ஆனால் இதற்கான தடுப்பு மருந்துகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. காலிஃப்ளவர், கேரட், தக்காளி, லெமன் கிராஸ், மாதுளம்பழம், மரவள்ளிக்கிழங்கு, பப்பாளிப்பழம், பூண்டு, ப்ரோகோலி, அப்ரிகாட் பழமும் அதன் விதையும் என இயற்கையான உணவுகளிலேயே புற்றுநோயின் எதிர்ப்புச் சக்தி உள்ளது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அந்த வகையில் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை (Chemo) மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக‌ உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. அவ்வளவு சக்தி வாய்ந்த கேன்சர் கில்லராக இருக்கும் இந்தப் பழம் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளிலும், கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்காவிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாகவும் விளைகிறது. இது பலாப்பழம் போல முட்கள் கொண்டுள்ளதால் பலா ஆத்தா என்றும் அழைக்கப்படுகிறது.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
அதிகமான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட இந்தப் பழத்தில் கார்போஹைட்ரேட், பிரக்டோஸ் மற்றும் கணிசமான அளவில் வைட்டமின் C, வைட்டமின் B1, வைட்டமின் B2 போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன. அதன் இலைகளும், விதைகளும் வெவ்வேறு மருத்துவ உபயோகத்திற்கு பயன்படுத்தப்பட்டுக் கொண்டுள்ளன. காலை நேரங்களில் பூக்கும் இதன் வெளிர்மஞ்சள் நிறப் பூவானது அருமையான‌ வாசனையுடையதாக இருக்கும்
பக்கவிளைவுகள் இல்லை
காட்டு ஆத்தா பழம் எல்லாவிதமான கேன்சர்களையும் குணப்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது. கீமோ சிகிக்சை எடுத்துக்கொள்ளும்போது கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படும். முடி கொட்டும், உடல் எடை குறையும். ஆனால் இந்த இயற்கை கீமோ வினால், கடுமையான‌ குமட்டல், வாந்தி, எடை இழப்பு மற்றும் மொத்த முடியும் கொட்டிப் போவது போன்றவை ஏற்படாது. இது இயற்கையான உணவாக இருப்பதால் இரசாயனச் சிகிச்சையான 'கீமோதெரபி' போலல்லாமல், பக்க விளைவுகள் இல்லாத வகையில் பாதுகாப்பான மருந்தாகவும், புற்றுநோய் செல்களை திறம்படத் தாக்கி, அவற்றை அழிப்பதாகவும் உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். சிகிச்சைக்காக இதை எடுத்துக் கொள்ளும் நாட்கள் முழுவதும் உடலின் பலஹீனம் குறைந்து, வலுவாகவும் ஆரோக்கியமாகவும் உணரவைக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி
இந்த மரத்தின் பழங்கள் மட்டுமில்லாமல் இலைகள், வேர்கள், மரப்பட்டை, தண்டுகள், பூ, விதைகள் போன்ற பல்வேறு பாகங்களும் மருத்துவ குணம் கொண்டவையாக உள்ளன. புற்றுநோயை மட்டுமல்லாது இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பாதுகாக்கிறது. அதனால் மற்ற‌ கொடிய நோய்களையும் எதிர்க்கிறது. இது அனைத்து விதமான கட்டிகளையும் கரைக்கும் தன்மைக் கொண்டது.
இதய நோய், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சார்ந்த பிரச்சனைகளையும் சீர்செய்கிறது. நம் உடம்பின் ஆற்றலுக்கு பூஸ்ட்டாகவும், கண்பார்வையை மேம்படுத்தக்கூடியதாகவும் அமைந்துள்ளது. பூஞ்சைத் தொற்று என்று சொல்லப்படும், பாக்டீரியா தாக்குதல்களால் ஏற்படும் நோய்களையும் குணப்படுத்துவதாக உள்ளது. உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
மன அழுத்தம், நரம்பு கோளாறுகளை நிவர்த்தி செய்கிறது

Thulasi and its Uses (learn Indian Medicinal uses)

இந்திய மருத்துவத்தில் துளசிக்கு தனி மகத்துவம் உண்டு. சளி, காய்ச்சல், அலர்ஜி போன்றவைகளை நீக்கும் ஆயுர்வேத நிவாரணி துளசி. இதனால்தான் பண்டைய காலங்களில் இருந்து இன்றைக்கும் வீடுகளில் துளசிமாடம் வைத்து வணங்கி வருகின்றனர்.
மலைக்காலம் வந்தாலே சளித் தொந்தரவுகளும், தண்ணீர் அலர்ஜியும், அதிகம் ஏற்படும். இதற்கு . மருத்துவமனைகளுக்கு சென்று மாத்திரை வாங்கி சாப்பிட்டாலும் நிவாரணம் கிடைப்பதில்லை. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு சளித்தொல்லையானது பெரும் சிக்கலை ஏற்படுத்திவிடும். சளித்தொல்லையை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் காசநோய், நிமோனியா போன்றவற்றின் பாதிப்பு உண்டாகிவிடும்
பாக்டீரியா, பூஞ்சை கிருமிகளினால் உண்டாகும் ஒவ்வாமை, மற்றும் தொற்றினால் ஏற்பட்ட சளித் தொல்லை மருந்துகளுக்கு கட்டுப்பட்டாலும், வைரஸ் கிருமிகளால் ஏற்பட்ட சளித்தொல்லை மருந்துகளுக்கு கட்டுப்படாமல், வேதனையை உண்டாக்குகிறது.
நுரையீரலில் வறட்சி ஏற்படாமல் இருப்பதற்காகவே சளியானது இயற்கையாக உடலில் சுரக்கிறது. இது அளவிற்கு மீறி பெருகும் போது அதனை வெளியேற்றி, மீண்டும் ஒவ்வாமையினால் சளி உண்டாகாமல் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.
அடிக்கடி தோன்றும் சளித் தொல்லையை நீக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, நுரையீரலுக்கு வலுவை தரும் அற்புத மூலிகை கருந்துளசி. கருந்துளசி செடிகளின் இலைகள் கபத்தை நீக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.சளியை கட்டுப்படுத்த இரண்டு அல்லது மூன்று கருந்துளசி இலைகளை பசும்பாலில் போட்டு காய்ச்சி குடிக்க, பாலின் ஒவ்வாமையால் ஏற்பட்ட கபம் நீங்கும்.
துளசி இலைகளை நீரில் போட்டு, கொதிக்கவைத்து ஆவிபிடிக்க, சைனஸ் தொல்லையால் ஏற்பட்ட சளி நீங்கும். அடிக்கடி சளி பிடிக்காமல் இருக்க ஐந்து அல்லது பத்து கருந்துளசி இலைகளை, ஒரு லிட்டர் நீரில் ஊறவைத்து அந்த நீரை அருந்தி, பின் இலைகளை மென்று சாப்பிட வேண்டும்.
தினமும் அதிகாலையில், இரண்டு முதல் நான்கு கருந்துளசி இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர ஒவ்வாமை மற்றும் கிருமித் தொற்றினால் ஏற்படும் சளித்தொல்லையிலிருந்து காத்துக் கொள்ளலாம் என்கின்றனர் ஆயுர்வேத மருத்துவர்கள். மேலும் சளித் தொந்தரவினால் பாதிக்கப்பட்டவர்கள் மஞ்சள், மிளகு, சிற்றரத்தை, பூண்டு, மல்லி, சிறிய வெங்காயம் ஆகியன நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் இயற்கை உணவுகளை அன்றாட உணவில் அதிகம் சேர்க்க வேண்டும என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

Athimaduram helps to get pregnancy (Learn Indian Medicine Uses)

குழந்தை பேறின்மை என்பது இன்றைக்கு அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம் மாறிவரும் உணவுப்பழக்கம், காலச்சூழ்நிலையும்தான். ஆணோ, பெண்ணோ மலடாக இருந்தால் அவர்களின் வாழ்க்கையே சூனியமாகிவிடுவதைப்போல உணர்கின்றனர். சந்ததியை உருவாக்க என்ன செய்யலாம் என்பது பற்றி சிந்திக்க தொடங்கிவிடுவார்கள். ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே மூலிகைகளின் மூலம் மலடு நீக்கும் மருத்துவத்தை கண்டறிந்துள்ளனர் சித்தர்கள். அதிமதுரம் எனப்படும் அரிய மூலிகை எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. இது ஆண், பெண்களின் குழந்தை பேறின்மையை போக்கும் என்றும் சித்தர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மருத்துவ குணங்களைத் தெரிந்து கொள்வோம்.
அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. நவீன ஆய்வின் மூலம் இந்த உண்மை வெளியாகியுள்ளது.
மலடு நீங்கும்
அதிமதுரத்தை நன்கு பொடித்து பாலில் கலக்கி சிறிதளவு தேன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாது விருத்தி உண்டாகும். போக சக்தி அதிகரிக்கும். போக சக்தியை இழந்த வாலிபர்களுக்குப் புத்துயிர் அளிக்கும் சிறந்த மூலிகையாகும்.
அதிமதுரத்தினால் பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும். ஆரோக்கியமான பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கும்.
அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50_100 கிராம் எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை இரண்டு முதல் மூன்று மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
பிரசவத்திற்கு முந்தைய உதிரப்போக்கு
அதிமதுரம், சீரகம் சரி எடை எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கை குணமடையச்செய்யலாம்.
தாய்ப்பால் பெருகும்
போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். இதன் மூலம் குழந்தைகளுக்குக் கூடுதலாக ஊட்டச்சத்து கிடைக்கும்.
மலச்சிக்கல் நீங்கும்
சிறுநீரக கல்லினை நீக்கும் மருந்தாக அதிமதுரம் திகழ்கிறது.
இது சிறுநீர் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்திக்கவும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும் உதவும்.
அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது. அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு இவற்றைச் சம அளவில் எடுத்து இடித்துச் சலித்து வைத்துக்கொண்டு, இரவு படுக்கும் போது 4_6 கிராம் பாலில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது. இலகுவாக மல விருத்தியாகும்.
தொண்டைக் கட்டு இருமல் சளி
அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம எடையில் எடுத்து இளவறுப்பாய் வறுத்து, சூரணம் செய்து வைத்துக் கொண்டு 5 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால், அதிகச் சூட்டினால் ஏற்படும் இருமல் தீரும்.
அதிமதுரச் சூரணத்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு இரண்டு சிட்டிகை எடுத்து தேனில் குழைத்து, தினம் மூன்று வேளை சாப்பிட்டால் தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும். இதைச் சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆண்மை பலவீனம் நீங்கும். உடல் பலமும், ஆரோக்கியமும் விருத்தியாகும். அதிமதுரம் லேகியம் சாப்பிட்டால் வரட்டு இருமல் தீரும். கோழையுடன் உள்ள இருமலும் தீரும். தொண்டைப் புண் ரணங்கள் விரைவில் ஆறிவிடும்.
ஆஸ்துமா குணமடையும்
அதிமதுரம், அரிசித்திப்பிலி, சித்தரத்தை மூன்றையும் தலா பத்து கிராம் அளவில் சேகரித்து வைத்துக்கொண்டு, இதில் முசுமுசுக்கை இலை பத்து கிராம். ஆடா தொடை இலை பத்து கிராம், இவைகளை 200 மில்லி தண்ணீரில் விட்டுக் காய்ச்சி 50 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி, காலை, இரவு இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், நெஞ்சுச் சளியும் அனைத்து வகைச் சளிகளும் வெளியாகும். இருமல் நின்று விடும். ஆஸ்துமா நோயாளிகளுக்குச் சிறந்த நிவாரணமாகும். இம்முறையில் தயாரிக்கப்பட்ட மருந்தை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருக, சளித்தொல்லை நீங்கும்.
வழுக்கை நீங்கி முடி வளரும்
அதிமதுரத்தை நன்றாகப் பொடி செய்து, அம்மியில் வைத்து எருமைப்பால் விட்டு நன்றாக விழுதாகும் வரை அரைத்து, தேவையான அளவு எருமைப்பாலில் கலக்கித் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளவயதில் ஏற்பட்ட தலை வழுக்கை நீங்கி மீண்டும் மயிர் முளைக்கும். தலையில் உள்ள பொட்டு, பொடுகு, சுண்டு முதலியவை நீங்க, இதைப் பயன்படுத்துவதால் மேற்கண்ட குறைகள் நிவர்த்தியாகும்.
அதிமதுரத்தை நன்றாக அரைத்துப் பசும்பாலில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளநரை ஏற்படாமல் தடுக்கும். தலை மயிர் உதிர்தல் இருக்காது

Foods to maintain Health

இன்றைய அவசர காலத்தில், நிறைய பேர் எதையும் சரியாக உண்ண முடியாத நிலையில் உள்ளனர். அவ்வாறு இருப்பதால், அவர்களது உடல் நலம் பலமிழந்து ஆரோக்கியமற்றதாக உள்ளது. ஆகவே அவ்வாறு இருப்பவர்கள், சாதாரண நேரத்தில் தேவையற்ற உணவுகளை சாப்பிடுவதை விட, ஒரு சில ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டால், உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து, ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் வாழலாம். அதற்கு அவர்கள் என்னவெல்லாம் சாப்பிட வேண்டும் என்று சற்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...
முட்டை

முட்டையில் அதிக அளவு புரோட்டீன் உள்ளது. மேலும் கோலைன் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் அதிகம் இருப்பதால், மார்பகப் புற்றுநோய் மற்றும் கண் நோய் என்று எதுவும் வராமல் தடுக்கலாம். ஆகவே அத்தகைய முட்டை தினமும் ஒன்று சாப்பிட்டால், உடலுக்கு தேவையான புரோட்டீன் கிடைத்து, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, கூந்தலும் நன்கு வளரும்
பால்
அனைத்து வீடுகளிலும் சிறுவர்களாக இருக்கும் போது, அனைத்து அம்மாக்களும் தினமும் 2 டம்ளர் பாலையாவது குடிக்க கொடுப்பார்கள். ஏனெனில் பாலில் அதிக அளவில் கால்சியம் உள்ளது. அதுமட்டுமல்லாமல், கொப்புக்கள் குறைவாக உள்ள பாலைக் குடித்தால், அதிலும் ஆண்கள் குடித்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் பாலை தினமும் காலையிலும், இரவில் படுக்கும் முன்னும் குடித்து வந்தால், உடல் நன்கு தெம்பாக இருக்கும்
சாலமன்
சாலமன் என்னும் மீன் இயற்கை தந்த வரப்பிரசாதம் என்று சொல்லலாம். ஏனெனில் அதில் அளவுக்கு அதிகமாக வைட்டமின் டி மற்றும் ஒமேகா-3 உள்ளது. மேலும் இதில் உள்ள ஃபேட்டி ஆசிட், உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்து, இதயத்தை நன்கு ஆரோக்கியப்படுத்துவதோடு, சருமம் மென்மையாகவும், உடல் எடையை குறைக்கவும் செய்யும். அதுமட்டுமல்லாமல், மூளை வளர்ச்சியை அதிகரிக்கும். அதிலும் இந்த மீனை சாப்பிட்டால், நீண்ட நேரம் பசியெடுக்காமல் இருக்கும். இந்த மீனில் கலோரியும் குறைவு.
பீன்ஸ்
அனைத்து பயிர் வகைகளை விட, இந்த பீன்ஸில் அதிகமான அளவு நார்ச்சத்து, கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உள்ளது. ஆகவே இந்த ஒரு பொருளை மட்டும் சாப்பிட்டால், உடலுக்கு ஒரு நாளைக்குத் தேவையான சத்துக்கள் கிடைத்துவிடும். மேலும் பீன்ஸை தினமும் சாப்பிட்டு வந்தால், இதய நோய், நீரிழிவு, ஹைப்பர் டென்சன் மற்றும் புற்றுநோய் போன்றவை ஏற்படாமல் தடுக்கலாம். அதிலும் டயட் மேற்கொள்பவர்கள், வாரத்திற்கு 3 முறை சாப்பிட்டு வந்தால், உடலுக்கு ஏற்ற அனைத்து ஊட்டசத்துக்களும் கிடைத்துவிடும்
ஓட்ஸ்
இதய நோய் மற்றும் டைப்-2 நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நல்லது. மேலும் டயட்டில் இருப்போரும் சாப்பிட்டு வந்தால், இதில் உள்ள நார்ச்சத்து, உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்து, உடலை நன்கு பிட்டாக வைக்கும். அதிலும் இந்த ஓட்ஸ் உடன், தயிர், நட்ஸ் மற்றும் பழங்கள் சேர்த்து சாப்பிட்டால், மிகவும் சுவையாக இருக்கும்.
ஆலிவ் ஆயில்
எண்ணெய்களிலேயே அதிகமான அளவு நன்மையை வைத்திருப்பது என்று சொன்னால், அது ஆலிவ் ஆயில் தான். இந்த ஆயில் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. ஏனெனில் அதில் மோனோ-அன்-சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக உள்ளது. இதனால் புற்றுநோய் மற்றும் அல்சீமியர் போன்ற நோய்கள் வருவதை தடுக்கிறது. ஆகவே இந்த எண்ணெயை பயன்படுத்தி சமைத்து சாப்பிட்டால், உடல் நிச்சயம் ஆரோக்கியமாக இருக்கும்.
எனவே, மேற்கூறிய அனைத்து உணவுகளையும் தினமும் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதோடு, அழகாக பொலிவோடு இருக்கும்

Natural Remedies for Diabets

உணவுப்பழக்கம் மாறியதாலேயே உடலில் புதிது புதிதாய் நோய்கள் தோன்றுகின்றன. சரிவிகித சத்துணவு சாப்பிடதா காரணத்தினால்தான் இன்றைக்கு பெரும்பாலோனோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு பல பிரச்சினைகளுக்கு ஆளாகியுள்ளனர். எனவே மருந்து மாத்திரைகள் இன்றி இயற்கையான முறையில் நீரிழிவை கட்டுப்படுத்த நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.
வெந்தையம்
நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற மிகச்சிறந்த மருந்து வெந்தையம். வெந்தையத்தை இரவு முழுவதும் ஊறவைத்து அந்த தண்ணீரை அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதனால் உடலில் இன்சுலின் சுரப்பு சரியான அளவில் நடைபெறும். ஊறவைத்த விதைகளை களியாக செய்து சாப்பிடலாம்.
இயற்கை ஜூஸ்
நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இயற்கை ஜூஸ் பருகுவது அவர்களின் ஆரோக்கியத்திற்கு எற்றது. ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிரம்பிய காய்கறிகளை ஜூஸ் ஆக எடுத்து பருகலாம். பாகற்காய் ஜூஸ், திராட்சை ஜூஸ் குடிக்கலாம். மா மரத்தின் இலைகளை பறித்து வேகவைத்து அதனை வடிகட்டி அந்த சாறினை ஜூஸ் ஆக பருகலாம். இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது.
கற்றாழை ஜெல்
நீரிழிவு நோயாளிகளுக்கு கற்றாழை மிகச்சிறந்த நிவாரணி. பிரிஞ்சி இலையை பொடி செய்து அதனுடன் சிறிதளவு மஞ்சள்தூள், இரண்டு டீஸ்பூன் சோற்றுக் கற்றாழை ஜெல் கலந்து சாப்பிடலாம். தினசரி மதிய உணவுக்குப் பின்னரும், இரவு உணவருந்துவிட்டும் சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு கட்டுப்படும்.
சப்பாத்தி சாப்பிடுங்க
நீரிழிவு நோயாளிகள் தினசரி சப்பாத்தி சாப்பிடவேண்டும். இது நார்ச்சத்துள்ள உணவுப்பொருள். கோதுமை மட்டும் இல்லாமல், கொண்டைக்கடலை, சேயா போன்றவைகளை சேர்த்து அரைத்துவைத்துக்கொண்டு சப்பாத்தி செய்து சாப்பிடுவதன் மூலம் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து கிடைக்கும்.
மூலிகை கசாயம்
வேப்பிலை, துளசி, வில்வம், நெல்லி போன்றவை நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சிறந்த நிவாரணம் தரும் மூலிகைகள். இவைகளை காயவைத்து அரைத்து பொடி செய்து வைத்துக்கொள்ளலாம். அதை காய்ச்சி வடிகட்டி அதன் தண்ணீரை மூலிகை நீராக பருகலாம்.

Benefits of drinking Hot Water

இந்த உலகில் மனிதன் உயிர் வாழ்வதற்கு உணவு இருக்கிறதோ, இல்லையோ தண்ணீர் மிகவும் அவசியமானது. அதிலும் நிறைய மருத்துவர்கள் தினமும் 7-8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறுவார்கள். ஏனெனில் அவை தான் உடலில் இருக்கும் தேவையற்ற கழிவுகளை, உடலில் இருந்து வெளியேற்ற பயன்படுகிறது. அதிலும் சில மக்கள் குளிர்ந்த நீரைத் தான் அதிகம் குடிக்க விரும்புகின்றனர். ஆனால் உண்மையில் அவற்றை விட சூடான தண்ணீர் தான் உடலுக்கு மிகவும் நல்லது. மேலும் பல நன்மைகளும் சுடு நீரைப் பருகுவதனால் உள்ளது. அது என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...
* சுடு தண்ணீரை அதிகம் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளில் முக்கியமான ஒன்று, உடலை சுத்தப்படுத்துவது. அதுமட்டுமல்லாமல், செரிமானம் குறைவாக ஏற்பட்டால், ஒரு நாளைக்கு இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்தால், செரிமானம் நன்றாக நடைபெறும். அதிலும் தினமும் காலையில் ஒரு டம்ளர் சுடு தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடலில் இருக்கும் டாக்ஸின்கள் வெளியேறிவிடும். மேலும் ஒரு டம்ளர் தண்ணீரில் எலுமிச்சை சாறு அல்லது தேனைக் கலந்து குடித்தால், உடலுக்கு நல்லது.

* இன்று நிறைய பேர் மலச்சிக்கல் பிரச்சனையில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு ஈஸியான மருத்துவ செலவில்லாமல் சரிசெய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள், ஒரு சுடு தண்ணீரை குடித்தால், பிரச்சனை நீங்கிவிடும். மலச்சிக்கல் ஏற்படுவதற்கு நிறைய கழிவுப் பொருட்கள் குடலில் தங்குவதால் தான் ஏற்படுகிறது. இதனால் வயிற்று வலி, வயிற்று உப்புசம் என்றெல்லாம் ஏற்படுகிறது. ஆகவே அந்நேரத்தில் சுடு நீரைக் குடிக்க வேண்டும். ஏனெனில் சுடு நீர் உணவுப் பொருட்களை எளிதாக உடைக்கும் தன்மையுடையது. ஆகவே அது குடலில் தங்கிவிடும் தேவையற்ற கழிவுகளை நீக்கி, குடலை நன்கு வேலை செய்ய வைக்கும். இதனால் மலச்சிக்கல் நீங்கும்.

* நிறைய உணவு நிபுணர்கள் உடல் எடை குறைய வேண்டுமென்றால், ஒரு டம்ளர் சுடு தண்ணீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேனை ஊற்றிக் குடிக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஏனெனில் அவை உணவுப் பொருட்களை எளிதில் உடைப்பதால், உடலில் சேரும் கொழுப்புகளை கரைத்து, உடல் எடையை குறைக்கும். அதிலும் இந்த சுடு தண்ணீரை, சாப்பிட்ட பிறகு குடிக்க வேண்டும். எதற்கு எலுமிச்சையை சேர்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள் என்றால், எலுமிச்சையில் இருக்கும் பெக்டின் என்னும் நார்ச்சத்து, அடிக்கடி ஏற்படும் பசியைக் கட்டுப்படுத்தும்.

* இருமல் மற்றும் அதிக சளியின் காரணமாக டான்சில் மிகவும் வலியோடு இருக்கும். அவ்வாறு வலி ஏற்படும் போது சுடு நீரை குடித்தால், தொண்டை வலி குறைந்து, நீர்மமாக இருக்கும் சளி சற்று கெட்டியாகி, எளிதில் வெளியேறிவிடும்.

* சுடு தண்ணீரையோ அல்லது ஏதேனும் சூடான உணவுகளையோ சாப்பிடும் போது, அதிகமாக வியர்க்கும். ஏனெனில் சூடான பொருள் உடலில் செல்லும் போது, உடல் வெப்பநிலை அதிகரித்து, உடலை குளிர்ச்சியாக்க வியர்க்கிறது. வியர்ப்பதால் சருமத்தில் இருக்கும் செல்களில் உள்ள அதிகமான தண்ணீர் மற்றும உப்பு, உடலில் இருந்து வெளியேறிவிடுகிறது.

* எப்போது சுடு தண்ணீரை குடிக்கின்றோமோ, அப்போது உடலில் இருக்கும் அதிகமான கொழுப்புக்கள் கரைந்து, இரத்த குழாய்கள் சற்று விரிவடைந்து, உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றது.
எனவே இத்தகைய நன்மைகளை உள்ளடக்கிய சுடு தண்ணீரை தினமும் குடித்து, ஆரோக்கியத்துடன் வாழலாம்.